புதன், 4 மே, 2011

Kumaran silks ரீடெய்ல் கடை இந்தியாவிலேயே முதன்முதலாக 100 கோடி அளவுக்கு

சென்னை தி.நகரில் 55 ஆண்டுகளுக்கு முன்பு 500 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் ஒரு சிறிய கடையாக ஆரம்பமானதுதான் குமரன் சில்க்ஸ். இன்றோ அறுபதாயிரம் சதுர அடியில் பரந்து விரிந்து நிற்கிறது. காரணம், திரும்ப திரும்பத் தேடிவரும் கஸ்டமர்கள்தான். இந்த அபார வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் வெற்றி ரகசியங்களைப் பற்றி மனம் திறக்கிறார் இந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான பி.ஆர்.குமார்.

பிரதமரின் ஆச்சரியம்!
''காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பட்டு நெசவாளர் குடும்பம்தான் எங்களுடையது. எங்கள் அப்பா, பி.சி.ராமமூர்த்தி தி.நகரில் அப்போதிருந்த ஒரு ஜவுளிக்கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்தார். 1955-ல் இந்த நிறுவனத்தை சிறிய அளவில் ஆரம்பித்தார். ஆனால், அடுத்த இருபதாண்டுகளில் பட்டுப் புடவையை வாங்க நினைக்கிற பலரும் எங்களைத் தேடி வந்து வாங்குகிற அளவுக்கு இந்நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். 1999-ல் எங்கள் நிறுவனத்தின் டேர்ன் ஓவர் 100 கோடி ரூபாயைத் தொட்டது. ஒரு ரீடெய்ல் கடை இந்தியாவிலேயே முதன்முதலாக 100 கோடி அளவுக்கு டேர்ன் ஓவர் செய்தது என்றால் அது எங்களுடையதுதான். இதற்காக எங்களைப் பாராட்டி ஒரு விருது கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். இந்த விருதை கொடுத்தார் அப்போது நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங். விருதை கொடுத்துவிட்டு, ''ஒரு ரீடெய்ல் கடை 100 கோடி ரூபாய்க்கு டேர்ன் ஓவர் செய்ய முடியுமா என்கிற சந்தேகத்தோடு வருமானவரித் துறையிடம் கேட்டேன். அவர்களும் 100 கோடி டேர்ன் ஓவர் என்பது சரியான தகவலே என்றார்கள். அதற்கு பிறகுதான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன்'' என எனது தந்தையிடம் ஆச்சரியப்பட்டார். இதை நினைக்கும்போது இன்றைக்கும் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.''
டிசைன்தான் ஸ்பெஷல்!
''எங்களின் இந்த வளர்ச்சிக்கு நிறைந்த தரம், குறைந்த விலை, தனித்துவம் மிக்க டிசைன் கள்தான். இந்த மூன்று விஷயத்திலும் எங்களோடு யாரும் போட்டிபோட முடியாது. எங்கள் ஸ்பெஷாலிட்டியே டிசைன்கள்தான். பட்டுப் புடவைகளில் பல வகையான டிசைன்களை நாங்கள் செய்திருக்கிறோம். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மில் ரக சேலைகள் பெருமளவில் வந்து பட்டுத் தொழிலையே ஆட்டிப் பார்த்தபோது, டிசைன் என்கிற ஒரே ஒரு விஷயம்தான் எங்களைக் காப்பாற்றியது.

தஞ்சாவூர் முதல் மொகல் வரை!
1996-ல் நாங்கள் உருவாக்கிய ஒரு டிசைனில் இரு பக்கங்களிலும் இருவேறு கலர்கள் இருக்கும். அந்த நேரத்தில் பெண்கள் ஆச்சரியப்பட்டு வாங்கிய சேலை அது. 1997-ல் பட்டுப் புடவைகளிலேயே ஓவியம் வரைந்தோம். தஞ்சாவூர் ஓவியங்களில் ஆரம்பித்து மொகலா யர்களின் கலைப்படைப்புகள் வரை பலவற்றையும் பட்டுப் புடவைகளில் கொண்டு வந்திருக்கிறோம். 2000-ம் ஆண்டில் இரண்டு பக்கங்களிலும் இருவேறு டிசைன்கள் இருக்கிற மாதிரி ஒரு புதிய டிசைனை வெளியிட்டோம். இதில் ஒருபக்கம் ஸ்டாண்டர்டாக ஒரு டிசைன் இருக்கும். இன்னொரு பக்கம் கஸ்டமருக்குப் பிடித்த வேறு டிசைனை நாங்கள் போட்டுத் தருவோம்.
இந்த டிசைன்கள் எல்லாமே பெண்களை மட்டுமே மையமாக வைத்து, தயார் செய்யப்படுகிறவை. ஆண்களை நாம் கண்டுகொள்ளவே இல்லையே என்று நினைத்தபோது தான் 'ரபஸோடி’ என்கிற டிசைனை 2002-ல் தயாரித்தோம். மனைவியின் பட்டுப் புடவைக்கு மேட்சிங்காக கணவனுக்கு சட்டை, பேண்ட் இருப்பதே இந்த டிசைனில் இருக்கும் விசேஷம். இது மாதிரியான ஏழு டிசைன்கள் இதுநாள் வரை யாராலும் காப்பி அடிக்க முடியாதவை. இன்றைய இளம்தலைமுறையினருக்கு எந்த மாதிரியான டிசைனில் பட்டுப்புடவை கொடுத்தால் கட்டிக் கொள்வார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே கல்லூரிப் பெண்களிடம் நாங்கள் தொடர்ந்து பேசுகிறோம்.''

கஸ்டமர்களில் வித்தியாசம் கூடாது!
''எங்கள் நிறுவனத்துக்கு வரும் கஸ்டமர்களை நாங்கள் எப்போதுமே வித்தியாசப்படுத்திப் பார்ப்பதில்லை. எங்கள் கடையில் 100 ரூபாய்க்கு வாங்க வருகிறவர்களுக்கும் லட்ச ரூபாய்க்கு வாங்க வருகிறவர்களுக்கும் நாங்கள் கொடுக்கும் சர்வீஸ் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். கஸ்டமர்களில் ஏழை, பணக்காரர், வேண்டியவர், வேண்டாதவர் என நாங்கள் பிரித்துப் பார்க்க மாட்டோம்.
இதேபோல பிஸினஸை நேர்மையாகச் செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறோம். 'பல நிறுவனங்கள் சென்னையைத் தாண்டி, மதுரை, கோவை என புதுப்புது கடைகளைத் திறக்கும்போது நீங்கள் ஏன் திறக்கக் கூடாது’ என்று பலரும் கேட்கிறார்கள். எங்களிடம் பட்டுச் சேலைகளை வாங்கிக் கொண்டு போய் விற்கிறவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை, நாங்கள் இல்லாமல் அவர்கள் இல்லை என்கிற அளவுக்கு அவர்களும் நாங்களும் இணைந்து பிஸினஸ் செய்து வந்திருக்கிறோம். இன்றைக்கு நாங்கள் வளர்ந்து விட்டோம் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்களின் ஊருக்குச் சென்று, அவர்களின் கடை முன்பே புதிதாக வேறு ஒரு கடையைத் திறந்தால், அது சரியாக இருக்குமா? பிஸினஸை எத்திக்ஸோடு செய்ய வேண்டும் என்பதற்காகவே சென்னை தவிர வேறு எந்த நகரத்திலும் நாங்கள் புதிய கடையைத் திறக்காமல் இருக்கிறோம்.''

ஆன்லைனில் அசத்தப் போகிறோம்!
''எங்களுக்கு உலகம் முழுக்க கஸ்டமர்கள் இருக்கிறார்கள். முன்பெல்லாம் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பக்கத்து நாடுகளிலிருந்து வந்து பட்டுச் சேலையை வாங்கிக் கொண்டு போவார்கள். இன்றோ லண்டன், பாரிஸ், கனடா, அமெரிக்கா, துபாய் என பல நாடுகளிலிருந்தும் சர்வசாதாரணமாக விமானம் ஏறி இங்கு வந்து ஒன்றிரண்டு நாட்கள் தங்கி, அவர்களுக்குத் தேவையான சேலைகளை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். அங்கு வாங்குவதைவிட விமானம் ஏறி, இங்கு வந்து வாங்கினாலும் செலவு கம்மிதான் என்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து பலராலும் எங்கள் கடைக்கு நேரடியாக வரமுடியாது. எங்களாலும் எல்லா நாட்டுக்கும் சென்று கடை திறக்க முடியாது. எனவே, இனி ஆன்லைன் மூலம் பட்டுச்சேலை விற்பதை விரைவுபடுத்தப் போகிறோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேகமாக செய்து வருகிறோம்.''

வந்தாச்சு மூன்றவது தலைமுறை!
''எங்கள் நிறுவனத்துக்கு நாங்கள் இரண்டாவது தலைமுறை. இப்போது மூன்றாவது தலைமுறையும் தயாராகி இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டது. ரெடிமேட் ஆடைகள் விற்பனை என்பது அவர்களுக்குப் பிடித்தமான விஷயமாக இருக்கிறது. எனவே, முழுக்க முழுக்க ரெடிமேட் ஆடைகளுக்கென ஒரு தனி ஃப்ளோரை கட்டி வருகிறோம். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஆடைகள் கிடைக்கும். பட்டுப் புடவையில் மட்டுமல்ல, காலத்துக்கேற்ப எங்கள் பிஸினஸிலும் மாற்றங்களை செய்து கொண்டே வருகிறோம். அந்த மாற்றங்கள் மூலம் தொடர்ந்து வளர்ந்தும் வருகிறோம்!''
THANKS VIKATAN.COM

கருத்துகள் இல்லை: