திங்கள், 2 மே, 2011

ஒசாமா புண்ணியத்தால் அமெரிக்கர்களிடையே ஒபாமா செல்வாக்கு உயர்வு

பத்து வருடங்களாக கடுக்காய் கொடுத்து வந்த அல் கொய்தா நிறுவனர், ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் முக்கால் மணி நேரத்தில் வீழ்த்தியதன் மூலம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமெரிக்கர்களிடையே பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஒபாமா அதிபராக வேண்டும் என்று வெள்ளை மாளிகை முன்பு கூடிய அமெரிக்கர்கள் கோஷமிட்டனர்.
அதிபரான போது ஒபாமாவுக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. அவரது பதவி ஏற்பு விழாவின்போது திரண்ட மக்கள் கூட்டமே அதற்கு சாட்சி. அமெரிக்காவின் முதல் கருப்பர் இன அதிபர் என்ற பெருமையைப் பெற்ற ஒபாமாவுக்கு நாளடைவில் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. அதிலும் சமீப காலமாக அவருக்கு பெரும் சரிவு ஏற்பட்டது.

ஆனால் பின்லேடன் வேட்டை அப்படியே ஒபாமாவை தூக்கி உச்சாணியில் நிறுத்தி வைத்து விட்டது. அமெரிக்கர்களிடையே ஒபாமாவுக்கு பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. மிகப் பெரிய சாதனையை ஒபாமாவின் நிர்வாகம் செய்து விட்டதாக அமெரிக்கர்கள் பூரிப்படைந்துள்ளனர்.

நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா, பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை வெளியிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், வெள்ளை மாளிகைக்கு வெளியே பெரும் திரளான அமெரிக்கர்கள் கூடி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது அவர்கள் மீண்டும் ஒபாமாவே அதிபர் என்றும் குரல் எழுப்பினர்.

அமெரிக்காவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்திய மிகப் பயங்கரமான தீவிரவாத தலைவர் வீழ்த்தப்பட்ட விதம் அமெரிக்கர்களிடையே பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

ஒபாமாவின் நிர்வாகத் திறமையே இந்த சாதனைக்குக் காரணம் என அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.

ஜார்ஜ் புஷ்ஷால் சாதிக்க முடியாததை ஒபாமா சாதித்தது அமெரிக்கர்களிடையே, ஒபாமா மீதான நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்துள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒபாமா பெரும் வெற்றி அடைந்திருப்பதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.

ஒபாமா நிர்வாகத்திற்கு பின்லேடன் மரணம் பெரும் பூஸ்டராக வந்து அமைந்துள்ளது. ஒபாமா அரசு மீது இருந்த அதிருப்திகளை அப்படியே இது துடைத்துப் போட்டு விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள்.

பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் மாட்டி்யிருந்த அமெரிக்கர்கள், ஒபாமாவின் நிர்வாகம் மீது கடும் அதிருப்தி இருந்து வந்தது. தற்போது அத்தனையையும் அமெரிக்கர்கள் மறக்கடிக்கும் வகையில் பின்லேடனின் மரணச் செய்தி வந்து சேர்ந்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் ஒபாமா போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகி விட்டன. மேலும் அவர் அடுத்த அதிபர் தேர்தலில் பெரும் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம், ஒபாமாவுக்கு பெரும் சவாலாக விளங்குவார் எனக் கருதப்படும் ஹில்லாரி கிளிண்டன், பின்லேடன் தூசியில் மறைந்து போய் விட்டார்.

கடந்த மாதம் நியூயார்க் டைம்ஸும், சிபிஎஸ்ஸும் இணைந்து எடுத்த சர்வேயில் ஒபாமாவுக்கு 46 சதவீத ஆதரவே கிடைத்தது. தற்போது இது கிடுகிடுவென உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியோ, அமெரிக்க வரலாற்றில் ஒபாமா மீண்டும் ஒரு பக்கத்தை தனது பெயரால் நிரப்பி விட்டார் என்று நிச்சயமாக கூறலாம்.

கருத்துகள் இல்லை: