சனி, 7 மே, 2011

புலம்பெயர் புலம்பல்கள் எல்லாம் குறுகிய சுயநல நோக்கம் கொண்டவை

சுயலாபத்தை அடிப்படைக் கொண்டு புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்படுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணமே முட்டாள்தனமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்குச் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தக் கூடிய தைரியம் யாருக்கு காணப்படுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கீழ்த்தரமான பிரபலத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், நிதி திரட்டுவதற்காகவும் புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நிபுணர் அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்சாட்டுக்களுக் வெற்றிகரமாக முகம்கொடுத்து அவற்றை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பதவி மிகவும் கௌரவமிக்கது எனவும், அவருக்கு எதிராக சேறு பூசும் செயற்பாடுகள் ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகளின் போது அரசாங்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டும் எனவும், துரதிஸ்டவசமாக அனைவரும் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் இலங்கைக்கு பாதகமான சூழ்நிலையே ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியை அரசாங்கம் கைப்பற்றிய போது அப்பாவி பொதுமக்களையும், எஞ்சிய போராளிகளையும் பாதுகாக்குமாறு தாம் பிரபாகரனிடம் கோரியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் ண்;காரிக்கைக்குப் பிரபாகரன் செவிசாய்க்கவில்லை எனவும், அப்பாவி பொதுமக்களை பாதுகாக்குமாறு தமிழ் அரசியல்வாதிகளிடமும் தாம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாறாக அநேகர் நிதி உதவிகளை வழங்கி யுத்தத்தை ஊக்கப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த முனைப்பினால் அப்பாவிபொதுமக்களின் உயிர்கள்காவு கொள்ளப்படுவதாக தாம் வலியுறுத்திய காரணத்தினால் தம்மை தமிழ்த் துரோகி என பலர் அடையாளப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் நாள் தோறும் ஜனாதிபதியை கைது செய்யுமாறு கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், எதைச் செய்ய முடியும் எதைச் செய்ய முடியாது என்பதனை தமிழக அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவளித்த அனைவரும் தற்போதைய நிலைமைகளுக்கு பொறுப்பாளிகளாக கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை முழுமையாக அகற்றிக்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 தமிழீழ விடுதலைப் புலிகள் மீள இயங்குவதற்கான சந்தர்ப்பம் கிடையாது எனவும் இதனால் இராணுவத்தினரை அரசாங்கம் அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: