சனி, 7 மே, 2011

SLMC கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

மு.கா.வின் இறங்கு முகம்!
•   மப்றூக்
muslimcongress-1rauff-1எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் - அந்தக் கணக்கு சரியென்றே வருகிறது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், சரிவாகவே இருக்கிறது. இப்படியே போனால் - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைக்கு இது நல்லதொரு உதாரணமாகப் போய்விடும்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியின் தேய்மானம் அல்லது அந்தக் கட்சி கண்டுவரும் வீழ்ச்சி பற்றிய கதைகள்தான் இவை!
மு.கா. தன்வசம் வைத்திருந்த பல சபைகளையும், உறுப்பினர் எண்ணிக்கையினையும் கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின் போது இழந்திருக்கின்றது. குறிப்பாக, மு.கா.வின் இருதயம் என்று கருதப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தில் அந்தக் கட்சியின் பிடியில் இருந்த சம்மாந்துறைப் பிரதேச சபை ஐ.ம.சு. முன்னணியிடம் பறிபோயிருக்கிறது. இவை தவிர – மட்டக்களப்பில் கிட்டத்தட்ட மு.கா. வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருக்கிறது. அங்கு மு.கா.வின் வசமிருந்த காத்தான்குடி மற்றும் ஏறாவூர் சபைகள் பறிபோயிருக்கின்றன.
மு.கா.வுக்கு கடந்த காலங்களிலும் சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் அதை வெளிப்படையாக அந்தக் கட்சி ஏற்றுக் கொண்டதில்லை. 'எமக்கு கடந்த முறையை விடவும் வாக்குகளின் எண்ணிக்கை குறைவாகக் கிடைந்துள்ள போதும், வாக்குவீதம் அதிகரித்திருக்கிறது' என்பது போன்ற தலை கிறுகிறுக்கும் வரைவிலக்கணங்களினூடாக தமது சரிவினை அந்தக் கட்சியின் தலைமைத்துவம் பூசி மெழுக முயற்சிக்கும்!
ஆனால், இம்முறை மு.கா. ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது, தமது தோல்வி மற்றும் சரிவுகள் குறித்து ஆராய்வதற்காக பிரதிநிதிகள் சந்திப்பொன்றை நடத்துவதென்பதே அந்த முடிவாகும். அதற்கிணங்க மு.கா.வின் பிரதேச அமைப்பாளர்கள், உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் மற்றும் கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்களை அழைத்து இது தொடர்பில் கருத்தறிவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
மேற்சொன்ன சந்திப்பினை கடந்த மாதம் கொழும்பில் நடத்தினார்கள். ஆனாலும், அது முழுமையான வெற்றியைத் தராமையினால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மு.கா. தலைவர் சென்று அந்தந்த மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து அங்கேயே பேசுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி அம்பாறை மாவட்டத்துக்கு மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வருகை தந்திருந்தார்.
துறைமுக அதிகாரசபையின் ஒலுவில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த மு.கா. தலைவரை அம்பாறை மாவட்டப் பிரதேசங்களைச் சேர்ந்த மு.காங்கிரஸினர் சந்தித்துப் பேசினார்கள். இதன்போது கட்சியின் பின்னடைவுக்குப் பிரதான காரணமாக மு.கா. தலைவரிடம் சில விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அவை:
  • மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளில் மு.காங்கிரஸ் ஈடுபடுவதில்லை.                
  • மு.கா. இளைஞர்கள் பலர் மிக நீண்டகாலமாக தொழில் வாய்ப்புகளின்றி இருந்து வருகின்ற போதும் அவை குறித்து கட்சி கரிசனை எடுப்பதில்லை.
  • தேர்தல் காலங்களில் தலைவருக்கும் - ஆதரவாளர்களுக்குமிடையிலான உறவு பேணப்படவில்லை.
  • கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்கு உதவு நிதிகள் வழங்கப்படவில்லை.

இப்படி, கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்களாகச் சொல்லப்பட்டவைகளைக் கூறிக் கொண்டு போனால் நீண்ட பட்டியலொன்று வரும்.
மேற்சொல்லப்பட்ட காரணங்கள் அனைத்தும் உண்மையாகும். மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் மறைவுக்குப் பிறகு அல்லது ரவூப் ஹக்கீம் மு.கா.வின் தலைமையினைப் பொறுப்பெடுத்துக் கொண்டதன் பின்னர், மு.கா. ஆதரவாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட எந்தப் பிரதேசத்திலும் அந்தக் கட்சி சொல்லிக் கொள்ளத்தக்க அபிவிருத்தி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. தவிரவும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதிலும் ஹக்கீம் சிரத்தை காட்டவில்லை.
இதேவேளை, மு.கா.வின் அரசியல் எதிராளிகளான அமைச்சர்கள் அதாவுல்லா, ஹிஸ்புல்லா போன்றோர் அவர்களின் பகுதிகளில் அசுரத்தனமான அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, தமது ஆதரவாளர்களில் கிட்டத்தட்ட பெருமளவான இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பது மு.கா. ஆதரவாளர்களின் ஆதங்கமாகும்!
இவை தவிர, ஒவ்வொரு பிரதேசத்திலும் மு.கா. தலைவர் ஹக்கீம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை கட்சியின் முக்கியஸ்தர்களாக நியமித்து அல்லது போஷித்து, அவர்களுக்கிடையில் தலைமைத்துவப் போட்டியினை உருவாக்கி விட்டுள்ளதாகவும், கட்சி - பிரதேச ரீதியாகப் பின்னடைவு கண்டு வருவதற்கு இது முக்கியமான காரணமென்றும் – ஆதரவாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், மறைந்த தலைவர் அஷ்ரப் ஒவ்வொரு பகுதியிலும் கட்சியின் மத்திய குழுக்களை அமைத்து – அந்தக் குழுக்களின் முடிவுகளுக்கிணங்கவே அந்தந்தப் பிரதேசத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தார். ஆனால், மு.கா.வின் தலைமைப் பதவியினை ஹக்கீம் பொறுப்பெடுத்துக் கொண்டதன் பிறகு – கட்சியின் மத்திய குழுக்கள் இதுவரை மறுசீரமைக்கப்படாமல், செயலிழந்து விட்டன. இதுவும் - கட்சி வீழ்ச்சியடைவதற்கானதொரு காரணம் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மு.கா.வின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரொருவர்!
மு.கா.வின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கேட்டறிந்து கொண்ட தலைவர் ஹக்கீம் சில உறுதி மொழிகளையும், தீர்மானங்களையும் வெளியிட்டதாக அறியக் கிடைக்கிறது. அவைகளில் சில:
  • வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.
  • அபிவிருத்திகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஓவ்வொரு பிரதேசத்திலும் இடைக்காலக் குழுவொன்று அமைக்கப்படும். (இதில் கட்சியின் உள்ளூராட்சிமன்றத் தலைவர்,
  • உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பிரசாரக்குழு அங்கத்தவர்கள் அடங்குவர்). இந்தக் குழுவினூடாகவே கட்சி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இப்படி – தலைவரின் உறுதி மொழிகளும், தீர்மானங்களும் நீள்கின்றன.
உண்மையாகவே, ஒரு கட்சியின் தலைவரிடம் அழுது, புரண்டு கேட்கும் விடயங்களல்ல இவை! தனது கட்சியின் வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒரு தலைமைத்துவம் இவைகளைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஹக்கீம் இவற்றினைச் செய்வதில் பின்னடித்தே வருகின்றார். மிகச் சரியாகச் சொன்னால்ளூ மு.கா.வின் மறைந்த தலைவர் அஷ்ரப் - ஊற்றி வைத்த எரிபொருளில்தான் மு.கா. எனும் வண்டி இன்னும் ஓடிக் கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள்.
இன்னொரு புறம், தேர்தல் காலங்களில் மட்டும் மக்களிடம் செல்லும் ஒருவராக மு.கா. தலைவரை அரசியல் எதிராளிகள் விமர்சிப்பதுண்டு. இதில் ஏதோவொரு வீதத்தில் உண்மையும் இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்துக்கு வந்து போன மு.கா. தலைவர் - மீண்டும் பொதுத் தேர்தல் விடயமாகத்தான் அந்த மாவட்டத்துக்கு வந்திருந்தார். தலைவரின் இவ்வாறான நடவடிக்கை மக்கள் மத்தியிலும் கசப்புணர்வினை ஏற்படுத்தியிருக்கிறது.
மு.காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் அவர்களையும், தற்போதைய அமைச்சர் ஹக்கீமையும் மக்கள் ஆதரிப்பதற்கிடையில்; பாரிய வித்தியாசத்தைக் காண முடிகிறது. அஷ்ரப்புக்காகவும், அவரின் கொள்கைகளுக்காகவும் மக்கள் அப்போது மு.கா.வை ஆதரித்தனர். ஆனால், இப்போது – மு.கா.வுக்காகவும், மு.கா.வின் இருப்புக்காகவும் ஹக்கீமை மக்கள் ஆதரிக்கின்றார்கள்! அஷ்ரப் காலத்தில் மு.கா. தொண்டர்களோ, ஆதரவாளர்களோ தமது தலைவரை பெரும்பாலும் கசப்புணர்வோடு விமர்சித்தது கிடையாது. ஆனால், இன்று ஹக்கீம் மீது மு.கா. தொண்டர்களே கடுமையான கசப்பையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது.
இவ்வாறான காரணங்களால் மு.கா.வுக்கும் அதன் தலைவர் ஹக்கீமுக்கும் இப்போது கடுமையானதொரு இறங்குமுகம் உருவாகத் தொடங்கியுள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (முன்பு அ.இ.முஸ்லிம் காங்கிரஸ்) பல உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியதோடு, அதிகளவு உறுப்பினர்களையும் வென்றிருக்கிறது. மக்கள் காங்கிரஸுக்கு இது நல்லதொரு ஏறுமுகமாகும். மு.கா. மீதான கசப்புணர்வு அதன் எதிராளிகளை இவ்வாறு வளர்த்து விட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம், றிசாத் கட்சியினர் - மு.கா. போல் தமது சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா என்கிற கேள்வியுமுள்ளது.
எவ்வாறிருந்தபோதும் - மு.கா. தலைமையின் பலவீனம், அல்லது அசிரத்தைப் போக்குக் காரணமாக அந்தக் கட்சி வீழ்ச்சியடைந்து வருவதாக கட்சியின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டு கவனிக்கத் தக்கது. இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் மிக உயர்வாக இருந்தபோதும், கடந்த மு.கா.வின் வாக்குகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இப்படியே போனால் - கட்சி கடையில் கட்டெறும்பாகி விடும் என்று மு.கா.வின் உயர்மட்டத்து ஆட்களே கவலைப்படுவதைப் பிழையென்று சொல்லிவிட முடியாது!
இவைதவிர, மு.கா. தலைவர் ஹக்கீம் பொறுப்பெடுத்துள்ள நீதி அமைச்சில் அண்மையில் சில முக்கிய நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் அவற்றில் - அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்படவில்லை என்றும் அம்பாறை மாவட்டத்து முக்கியஸ்தர்கள் மற்றும் தொண்டர்களால் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு மிக அதிகமான வாக்குகளை வழங்கும் மாவட்டத்திலுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவது நியாமற்றதொரு நடவடிக்கையாகும் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாணசபை உறுப்பினரொருவர்!
ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் திருப்திப்படுத்தும் போதுதான் - கட்சி கட்டிக் காக்கப்படும். கட்சி இருந்தால்தான் - தலைவர், செயலாளர், எம்.பி.கள் எல்லோரும்...!
நாம் முன்பொரு கட்டுரையில் குறிப்பிட்டது போல், பொல்லாப்புகள் வந்துவிடும் என்பதற்காக 'ஆமை சுடுவது மல்லாத்தி' என்கிற உண்மையினைச் சொல்லாமலிருக்க முடியாது!!
நன்றி: தமிழ்மிரர் 

கருத்துகள் இல்லை: