செவ்வாய், 3 மே, 2011

புதிய தகவல்: ஒசாமா கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

: ஒசாமா பதுங்கியிருந்த அபோதாபாத் இல்லத்தில் இருந்து அமெரிக்க படைகள் முக்கிய ஆவணங்கள், சி.டி.,க்கள், பென் டிரைவ் ஆகியனவற்றை பறிமுதல் செய்துள்ளன. அவற்றில் பல முக்கிய தகவல்கள் இருப்பதாகவும். அதன் அடிப்படையில் அல்குவைதா நெட்வொர்க்கை மேலும் நெருங்க முடியும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அல்குவைதாவுடன் தொடர்பில் இருந்த தாலிபன். லஷ்கர் இயக்கங்கள் குறித்தும் தகவல்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், பத்து ஆண்டுகளாக அமெரிக்கா ராணுவம் ஒசாமா பின்லாடனை தேடி வந்தது. பிடிக்க முடியவில்லை. கடந்த ஜூலை மாதம் பெஷாவர் அருகே சி.ஐ.ஏ.,வுக்காக வேலை பார்த்த பாகிஸ்தானி ஒருவரின் வெள்ளை நிற காரைப் பின்தொடர்ந்து சென்று ரிஜிஸ்தர் நம்பரை தெரிந்து கொண்டனர். அந்த காரை சி.ஐ.ஏ., அதிகாரிகள் பல மாதங்களாக தொடர்ந்து கண்காணித்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 52 கி.மீ., தூரத்தில் உள்ள இடத்தில், குப்பைகள் நிறைந்த நீளமான ரோடு இருந்தது. அதையொட்டி பெரிய பாதுகாப்பு காம்பவுண்டுடன் கூடிய கட்டடம், ஒரு குட்டி கிராமம் போல இருந்தது.

அரங்கேறிய தாக்குதல்: அந்த வீட்டையும் தொடர்ந்து கண்காணித்தனர். அங்கு ஒசாமா தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. எட்டு மாதங்களுக்கு பிறகு நிலவில்லாத இரவில், நான்கு ஹெலிகாப்டர்களில் 79 அமெரிக்க கமோண்டே படையினர் காம்பவுண்டை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஒசாமா உள்ளிட்ட ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் விஷயம் பற்றி பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இறந்த ஐந்து பேரில் ஒருவர், உயரமாகவும், பெரிய தாடியுடன் தலையில் குண்டு காயம்பட்டு, ரத்தம் படிந்த உடலுடன் கிடந்தார். அமெரிக்க கப்பல்படையை சேர்ந்த ஒரு வீரர் அவரை படம் பிடித்து, உறுதி செய்வதற்காக அதிகாரிகளுக்கு அனுப்பினார்.

உலகிலேயே அதிக பொருட்செலவில் நடந்த ஒசாமா தேடல் வேட்டை முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் முதல் எதிரியான ஒசாமாவின் உடல் ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டது. 10 ஆண்டுகள் அமெரிக்க உளவுத்துறையின் திட்டங்கள் தோல்வியில் முடிந்தாலும் இறுதியாக வெற்றி கிடைத்தது.

இந்த தாக்குதலை நடத்துவதற்கு முன், கடந்த ஓராண்டாக கிழக்கு ஐரோப்பாவில் உள்ள தனிசிறையில் அடைக்கப்பட்டிருந்த அல்-குவைதா பயங்கரவாதிகளிடம் உளவுத்துறையினர் பல்வேறு விதங்களில் விசாரணை செய்தனர். அபோதாபாத்தில் உள்ள ஒசாமா வீட்டின் செயற்கைகோள் படங்களை வைத்து ஆராய்ந்தனர்.

தீவிர ஆலோசனை : இந்த ஆப்பரேஷன் வெற்றியில் முடியுமா அல்லது ஆபத்தை உண்டாக்குமா என சி.ஐ.ஏ., அதிகாரிகள் பல கோணங்களில் ஆராய்ந்தனர். தாக்குதலை நடத்துவது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் இடையே வெவ்வெறு விதமான கருத்துகள் நிலவின. இன்னும் சிறிது காலம் காத்திருந்து உண்மையிலே ஒசாமா அங்குதான் இருக்கிறாரா என்பதை உறுதி செய்துகொள்ளலாம் அல்லது குண்டு போட்டு தாக்குதல் நடத்தலாம் என இருவேறு கருத்துகள் நிலவின. குண்டு போடும் திட்டத்தை ஒபாமா ஏற்கவில்லை. இதனால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒபாமா கருதினார். இறுதியாக நேரடி தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டு ஹெலிகாப்டர் முன்னாடி செல்ல, பாதுகாப்புக்கு பின்தொடர்ந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அதிபரின் "ரியாக்ஷன்' : அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெள்ளை மாளிகையில் உள்ள அறையில் அதிபர் ஒபாமா, அவரது ஆலோசகர், ஹிலாரி கிளின்டன், பாதுகாப்பு தலைமை அதிகாரிகள் ஆகியோர் தாக்குதல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தனர். ஒபாமா இறுகிய முகத்துடன் உட்கார்ந்திருந்தார். பெரும்பாலான நேரம் அறை அமைதியாகவே இருந்தது. ஒவ்வொரு நிமிடமும், நாட்கள் போல நகர்ந்தன என வெள்ளை மாளிகை தலைவர் ஜான் பிரன்னன் தெரிவித்தார். சி.ஐ.ஏ., தலைமையகத்தில் இருந்து அதன் இயக்குநர் பெனாட்டா, பாகிஸ்தானில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை வீடியோ ஸ்கீரின் மூலம் அதிபருக்கு தெரிவித்துக்கொண்டிருந்தார்.

அவரது உரையாடல்: "இலக்கை நோக்கி முன்னேறுகிறார்கள்' நிமிடங்கள் செல்கின்றன"பின்லாடனை பார்க்கிறோம்' சில நிமிடங்களுக்கு பிறகு, "பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்டார்' "தாக்குதலில் எதிரி கொல்லப்பட்டார்' அதன் பிறகும் அதிபர் அறையில் அமைதி நிலவுகிறது இறுதியாக, "அவனை கொன்று விட்டோம்' என அதிபர் ஒபாமா கூறியதும் அறையில் இருந்தவர்கள், ஆரவாரம் செய்தனர். உலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட "ஆபரேஷன்' முடிவுக்கு வந்தது.

கருத்துகள் இல்லை: