திங்கள், 2 மே, 2011

எதிரியாகட்டும் காங்கிரஸ்: தி.மு.க.,வினரிடம் பெருக்கெடுக்கும் ஆத்திரம்

தேர்தலுக்கு முன், தி.மு.க., கூட்டணியில் சட்டசபை தொகுதிப் பங்கீடு பேச்சு துவங்கிய போது, தமிழகத்தில், தொண்டர் செல்வாக்கு இல்லாத காங்கிரஸ், அதன் தகுதிக்கு மீறி, சீட் கேட்கிறது என்ற கோபம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டது. "காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளைக் கொடுத்தால், அக்கட்சியால் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள், எதிரணிக்கு சாதகமாகி விடும்' என்று, காங்கிரஸ் கேட்கும் இடங்களை கொடுக்காமல், "மந்திரி சபையிலிருந்து வெளியேறுகிறோம்' என்று வெளிப்படையாக மிரட்டும் அளவுக்கு, தி.மு.க., சென்றது.

தி.மு.க., தலைமையின் முடிவை, பெரும்பாலான, தி.மு.க.,வினர் ஆதரித்தனர். "காங்கிரசின் மிரட்டலுக்கு பயப்பட வேண்டாம். "மிசா' காலத்தை எல்லாம் கடந்து தான், தி.மு.க., வளர்ந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி இல்லாமல், தேர்தலை சந்திப்போம்' என்று தலைமைக்கு தெரிவித்தனர்.இதே மனநிலை, தேர்தலிலும் வெளிப்பட்டது. வேட்பாளர் தேர்வு, தங்கபாலு வேட்பாளர் ஆன விதம் ஆகியன, தி.மு.க.,வின் கோபத்தை மேலும் அதிகரித்தன. தி.மு.க.,வினர் எதிர்பார்த்தது போலவே, தேர்தல் வேலைகளிலும் காங்கிரஸ் பின்தங்கியே இருந்தது.

காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்ட தொகுதிகளில் கூட, அனைத்து வேலைகளையும் தி.மு.க.,வே இழுத்துப் போட்டு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை, கட்சித் தலைமைக்கு அறிக்கையாகவே, தி.மு.க., நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். "காங்கிரசால், நமக்கு சுமை தான் அதிகரித்துள்ளது. இவர்களைத் தூக்கிக் கொண்டு செல்வது இயலாத காரியம். இவர்களால் நமக்கு பாதகமே ஏற்படும். எனவே, காங்கிரஸ் உறவு அறவே வேண்டாம்' என்று, அந்த அறிக்கையில் கூறியுள்ளதாகத் தெரிகிறது.இந்த கோபத்தை மேலும் அதிகரிப்பதாக, "ஸ்பெக்ட்ரம்' இரண்டாவது குற்றப்பத்திரிகை வந்துவிட்டது. இந்த விவகாரத்திற்குப் பின், தி.மு.க.,வின் பல மட்டங்களில் இருந்து, தலைமைக்கு நிர்பந்தங்கள் அதிகரித்துள்ளன.

கீழ்மட்டத்தில் இருந்து தலைமைக்கு தெரிவிக்கப்படும் கருத்துக்கள்: காங்கிரசை ஆட்சி பீடத்துக்கு நாம் கொண்டு வந்தோம். எந்த நெருக்கடியும் கொடுக்காமல் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய உறுதுணையாக இருந்தோம். இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சி வர, தமிழகத்தில் பெரும்பாலான எம்.பி., தொகுதிகளை வென்று கொடுத்தோம். அதற்கு, தமிழகத்தில், நாம் நிறைவேற்றிய நலத் திட்டங்கள் தான் காரணம். சென்ற முறை போல, 40க்கு, 40 தொகுதிகளை வெல்ல முடியாததற்கும் காங்கிரஸ் தான் காரணம். கூட்டணியிலிருந்து, பா.ம.க., வெளியேறிய போதும், அவர்கள் நமக்கு எதிராக போட்டியிட்ட இடங்களை கைப்பற்றி, அவர்களை மண்ணைக் கவ்வச் செய்தோம். ஆனால், காங்கிரசின் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், கார்வேந்தன், பிரபு உள்ளிட்ட அனைவரும் தோற்றுப் போயினர். சிதம்பரம் கூட மிகச் சொற்ப ஓட்டுகளில் தான் வெற்றி பெற்றார்.இதற்கெல்லாம் காங்கிரஸ் தான் காரணம். அவர்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை.

ஆனால், "ஸ்பெக்ட்ரத்தை' வைத்து மிரட்டுகின்றனர். மத்தியில் தொடரும் ஆட்சிக்கு நாம் அவசியம் என்பதை மறந்து விட்டு, அவர்கள் செயல்படுவதை ஏற்க முடியாது. "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் காங்கிரசுக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை. நமக்கு, "செக்' வைப்பதாக நினைத்துக் கொண்டே அவர்களுக்கே குழிபறித்துக் கொள்கின்றனர். எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் காய் நகர்த்துகின்றனர். அவர்களுக்கு, ஆட்சியில் பங்கு கொடுத்தால், ஆட்சி முடியும் வரை நமக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பர். நம்மைப் போல் அவர்கள் நட்புடன் இருக்க மாட்டார்கள். அவர்களால் தான் இந்த ஆட்சியே நடப்பது போல தோற்றத்தை உருவாக்குவர். பெரியண்ணன் மனோபாவத்தில் அவர்களது செயல்பாடு இருக்கும்; இதற்கெல்லாம் இடம் கொடுக்கக் கூடாது."ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் அவர்களால் நாம் பட்ட பாடு போதும். அவர்கள் நமக்கு நண்பனாக இருந்து தொந்தரவு தருவதை விட, எதிரியாக இருந்து அவர்களை நாம் சந்திப்பதே சரியாக இருக்கும். காங்கிரஸ் எதிர்ப்பில் தான், தி.மு.க., உருவானது; வளர்ந்தது. இதை, அவர்களுக்கு திரும்பவும் நினைவுபடுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

நம் துணை அவர்களுக்கு தான் அவசியம். அவர்களது உறவை துண்டித்துக் கொள்வது தான் சரி. ஈழப் பிரச்னையில், துரோகம் இழைத்து விட்டோம் என்ற கெட்ட பெயர், இவர்களால் ஏற்பட்டுள்ளது. அதைப் போக்க இப்போதைக்கு முடியாது. இருந்தும், இலங்கை அரசுக்கு இன்னும் மத்திய அரசு ஆதரவாகத் தான் இருக்கிறது.போர் குற்றங்களை இலங்கை அரசு செய்துள்ளது என்று, ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசை குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று, உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையிலும், மத்திய அரசு இன்னும் வாய் திறக்காமல், இலங்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது. இனியும், காங்கிரசுடனான உறவைத் தொடர்வதில் அர்த்தம் இல்லை.இவ்வாறு, தி.மு.க., தொண்டர்கள் தலைமைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: