திங்கள், 21 ஜூன், 2010

கெளரவக் கொலைகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்



டெல்லி: காதல் ஜோடிகளை குடும்ப கெளரம் என்ற பெயரில் கொலை செய்வது நாடு முழுவதும் அதிகரித்து வருவது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், சில மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் [^] உத்தரவிட்டுள்ளது.

வேற்று ஜாதி, மதத்தவரை அல்லது குடும்பத்தாரின் விருப்பத்துக்கு எதிராக காதலித்தவரை திருமணம் [^] செய்பவர்களை அல்லது திருமணம் செய்ய முயற்சிப்பவர்களை துன்புறுத்தி கொலை செய்வது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இது குறித்து ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் தான் இவ்வகை படுகொலைகள் அதிகமாக நடக்கின்றன.

இந்த கொடுமை என்ன தான் அதிகரித்தாலும் வாக்கு வங்கி அரசியல் காரணமாக இதைத் தடுக்க மத்திய அரசோ, அந்தந்த மாநில அரசுகளோ நடவடிக்கை [^] எடுக்கவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரியானா-தூக்கில் தொங்க விடப்பட்ட காதல் ஜோடி:

இந் நிலையில் ஹரியானா மாநிலம் மென்கெரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிங்கு (19), மற்றொரு கிராமத்தைச் சேர்ந்தவர் மோனிகா (18) என்பவரை காதலித்தார். காதலுக்கு மோனிகாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதையும் மீறி அவர்களது காதல் தொடர்ந்தது. இந் நிலையில் பிங்கு, மோனிகா இருவரும் மோனிகாவின் மாமா வீட்டில் பிணமாக தொங்கினார்கள்.

மோனிகாவின் உறவினர்கள் காதல் ஜோடியை அடித்து, கொன்று தூக்கில் தொங்க விட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மோனிகாவின் பெற்றோர், சகோதரர் மற்றும் உறவினர்கள் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிங்கு, மோனிகா இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதிலும் இரு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாம். இந்த உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் சகோதரன், சகோதரிகளாக கருதப்படுகின்றனர். அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதில்லை.

இதையும் மீறி இருவரும் காதலித்ததால் அவர்களை கொலை செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: