ஞாயிறு, 8 அக்டோபர், 2017

தண்ணீர் கலந்த டீசல்.. திருசெங்கோடு பங்க் மோசடி!

டீசலுக்குப் பதில் தண்ணீர்: பங்க் மோசடி!
மின்னம்பலம்: திருசெங்கோட்டில் செயல்பட்டுவரும் பெட்ரோல் பங்க் ஒன்று டீசலில் தண்ணீர் கலந்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் மூர்த்தி. அவருக்குச் சொந்தமான கார்த்திகேயா பெட்ரோல் பங்க் சங்ககிரி சாலையில் உள்ளது. அந்த பெட்ரோல் பங்க்கில் டீசலுடன் தண்ணீரைக் கலந்து விற்பனை செய்து நூதன மோசடி நடந்துள்ளது.
செங்குட்டுவேல் என்பவர் நேற்று (அக்டோபர் 7) அவரது லாரிக்கு டீசல் நிரப்பியுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அந்த லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றது. மெக்கானிக் வந்து பார்த்தபோது, லாரியின் என்ஜினில் தண்ணீர் புகுந்திருப்பது தெரியவந்தது. டீசல் வழியாகத் தண்ணீர் வந்திருப்பதாக மெக்கானிக் கூறியுள்ளார். எனவே, லாரி உரிமையாளர் ஒரு பாத்திரத்தில் பெட்ரோல் பங்கில் உள்ள டீசலை நிரப்பச்சொல்லி அதைப் பரிசோதனை செய்து பார்த்தபோது அது பால் போன்ற தண்ணீர் எனத் தெரியவந்துள்ளது.
லாரி மட்டுமல்லாமல் பல வாகன ஓட்டிகளின் வாகனங்களும் சாலையில் பழுதாகி நின்றுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட உரிமையாளர் வந்து தங்கள் வாகனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய இழப்பீடு வழங்க வேண்டும் என பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பங்க் உரிமையாளர் மூர்த்தியை செல்பேசி மூலம் தொடர்புகொண்டபோது நாளை வந்து பேசுகிறேன் எனத் தொடர்பை துண்டித்துள்ளார். டீசலில் தண்ணீர் கலக்கவில்லை என பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: