செவ்வாய், 31 டிசம்பர், 2019

நெல்லை கண்ணனுக்கு நெஞ்சுவலி: போராட்டம் அறிவித்த பாஜக

 நெல்லை கண்ணனுக்கு நெஞ்சுவலி: போராட்டம் அறிவித்த பாஜகமின்னம்பலம் :
பிரதமரையும், அமித் ஷாவையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யவில்லை என்றால் மெரினாவில் போராட்டம் நடத்துவோம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிசம்பர் 29 ஆம் தேதி நெல்லையில் எஸ்டிபிஐ நடத்திய குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன், ‘மோடி பிரதமர். ஆனால் அமித் ஷாதான் அவருக்கு மூளை. சண்டியனே அமித் ஷாதான். அமித் ஷா சோலி முடிஞ்சிடுச்சுன்னா, இவர் சோலி முடிஞ்சுடுச்சு. அது ஒரு பக்கம். நீங்க ஒருத்தனும் முடிக்க மாட்டேங்கியலே... நீங்க ஏதாச்சும் பண்ணுவீங்கனு நானும் நினைச்சுக்கிட்டுதான் இருக்கேன். ஒண்ணும் நடக்கமாட்டேங்குது. ஒரு சாயபும் பண்ணித் தரமாட்டேங்குதான்” என்று பேசியிருந்தார்.
இது மோடியையும், அமித் ஷாவையும் கொலை செய்ய தூண்டும் பேச்சு என்று ஹெச்.ராஜா உள்ளிட்டோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
பாஜக மாநில துணைத் தலைவர் நரேந்திரன் இந்த விவகாரம் குறித்து ஆளுநரிடமும் புகார் அளித்துள்ளார். அதேநேரம் நெல்லை கண்ணன் மீது இரு பிரிவினருக்கு இடையே கலவரம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர் நெல்லை மேலப்பாளையம் போலீஸார். மேலும் கண்ணனை கைது செய்யக் கோரி அவரது வீட்டில் பாஜகவை சேர்ந்த சுமார் பத்து பேர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக சொல்லி நெல்லை கண்ணன் இன்று காலை தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான் இன்று பிற்பகல் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ஹெச். ராஜா. அப்போது அவர்,
“ பிரதமர் மோடியை பலரும் தங்கள் விருப்பத்துக்கு கேலி செய்வது தமிழ்நாட்டில் தொடர்ந்துகொண்டே வருகிறது. இது கண்டிக்கத் தக்கது. சிலர் சமூக தளங்களில் இதைத் தொடர்ந்து செய்கின்றனர். நாட்டில் நடக்கும் வன்முறைகளின் உச்சகட்டமாக, நெல்லையில் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெல்லை கண்ணன் பாரத பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரின் சோலியை முடிப்பீங்கனு நினைச்சேன், முடிக்கலைனு பேசியிருக்கிறார். பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் படுகொலை செய்ய வேண்டும் என்று பேசும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து போய்விட்டன. இது தேச விரோதமான பேச்சு.
2019 இல் நடந்தேறியிருக்கிற இந்த குற்றத்துக்கு 2019 முடிவதற்குள் நடவடிக்கை தேவை. ஏனென்றால் நான் இது தொடர்பாக நேற்றே டிஜிபிக்கு ஆன் லைனில் வாட்ஸ் அப்பில் புகார் அளித்திருந்தேன். பாஜகவினர் நூற்றுக்கணக்கான காவல்நிலையங்களில் புகார் கொடுத்திருக்கிறார்கள். கட்சியின் குழுவினர் ஆளுநரிடமும் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது வரை நெல்லை கண்ணன் கைது செய்யப்படாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏற்புடையதல்ல. பிரதமரை பற்றி விமர்சிப்பவர்கள் பற்றி நானே காவல்துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆனால் சாதாரண பிஜேபி ஒர்க்கர் பதிவு போட்டால் உடனே கைது செய்கிறார்கள். நெல்லை கண்ணனையும் அவருக்கு ஆதரவு அளிக்கும் சீமானையும் சேர்த்து கைது செய்ய வேண்டும்.
எனவே கண்ணனை இன்று இரவுக்குள் கைது செய்யவில்லை என்றால், 2020 போராட்ட ஆண்டாக தொடங்கும். நாளை மெரினா கடற்கரையில் பாஜக மூத்த தலைவர்கள் இல. கணேசன்,பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் காந்தி சிலை அருகே சிட்டிங் தர்ணா உட்காருவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார் ராஜா.

கருத்துகள் இல்லை: