வெள்ளி, 3 ஜனவரி, 2020

ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி 50 கோடி விலங்குகள் மரணம்!



.sbs.com.au : ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 50 கோடி விலங்குகள் கொல்லப்பட்டிருப்பதாக சிட்னி பல்கலைக்கழக சூழலியலாளர்களை மேற்கோள்காட்டி news.com.au செய்திவெளியிட்டுள்ளது.
இதுவரை காட்டுத்தீ காரணமாக சுமார் 5 மில்லியன் ஹெக்டயர் நிலப்பரப்பு எரிவடைந்துள்ள பின்னணியில் தமது கணிப்பின்படி சுமார் 480 மில்லியன் பறவைகள், பாலூட்டிகள் , ஊர்வன என பலதரப்பட்ட விலங்குகள்  பலியாகியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர பல அரியவகை தாவர இனங்களும்கூட இக்காட்டுத்தீயில் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் புறநகர் பகுதியான Coolagolite பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் காட்டுத்தீயினால் படுகாயமடைந்த தனது 20 மாடுகளை கருணைக்கொலை செய்த விவகாரம் இணையத்தில் வெளியாகி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மாடுகளை ஓரளவுக்கு மீட்டுக்கொண்டுவந்தபோதும் அவை உயிர்பிழைக்கும் நிலையில் இல்லை என்று அப்பிரதேச மிருக வைத்தியர் உறுதிசெய்ததையடுத்து அவரது ஒத்துழைப்புடன் இந்த படுகாயமடைந்த மாடுகள் உறக்கநிலையில் இடப்பட்டு பின்னர் கருணைக்கொலை செய்யப்பட்டன.
Steve Shipton என்ற குறிப்பிட்ட பண்ணையாளர் தனது மாடுகளை துப்பாக்கியால் சுட்டு கருணைக்கொலை செய்யும் புகைப்படங்கள் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.

கருத்துகள் இல்லை: