திங்கள், 30 டிசம்பர், 2019

வீடியோ காலில் யானையுடன் பேசிய பாகனின் மனைவி

வீடியோ காலில் யானையுடன் பேசிய பாகனின் மனைவிவெப்துனியா : தேக்கம்பட்டி நலவாழ்வு முகாமிற்கு சென்ற யானையுடன் பாகனின் மனைவி வீடியோ காலில் பேசியதும், அதற்கு யானை பதில் அளித்த விதமும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேட்டுப்பாளையம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் 12-வது ஆண்டாக யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 2-ந்தேதி வரை 48 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் 28 யானைகள் பங்கேற்றுள்ளன. இயற்கை சூழலுடன் நண்பர்களை கண்ட யானைகள் துள்ளி குதித்து விளையாடி வருகின்றன. இவைகள் தவிர மவுத் ஆர்கன் வாசித்தும், நடனமாடியும், கால்பந்து விளையாடியும் மகிழ்ந்து வருகின்றன.

முகாமில் உள்ள கள்ளழகர் கோவில் சுந்தரவள்ளி தாயார் யானையின் பாகன் தன் மனைவி, குழந்தைகளுடன் போனில் வீடியோ காலில் பேசினார். பாகனின் மனைவி மற்றும் குழந்தைகளின் குரலை கேட்டதும் யானை அவர்களின் பேச்சை கூர்ந்து கவனித்தது. பாகனின் மனைவி யானையிடம் பேச வேண்டும் வீடியோவை யானை பக்கம் திருப்புங்கள் என்றார். யானையை குழந்தைபோல் பாவித்து வரும் மனைவியின் விருப்பத்துக்கு மறுப்பு தெரிவிக்காமல் வீடியோவை யானை முன்பு காண்பித்தார்.

யானையின் செல்ல பெயரை கூறி பாகனின் மனைவி அழைத்தார். செல்போனை கூர்ந்து கவனித்த யானை வீடியோவில் தெரிந்த உருவத்தை அடையாளம் கண்டு முகம் மலர்ந்தது. நல்லா இருக்கிறயா? நேரா நேரத்துக்கு சாப்புடுகிறாயா? குறும்பு செய்யாமல் அப்பா சொல்வதை கேள் என்றார்.

இதைகேட்டு யானை தலையாட்டி பதில் கூறியது. இதை அங்கிருந்த பார்வையாளர்கள் கண்டு அரையாண்டு விடுமுறைக்கு மகளை ஊருக்கு அனுப்பிய தாய்போல் பாகனின் மனைவி நெகிழ்ச்சியாக பேசியதையும், அதற்கு யானை பதில் அளிக்கும் விதத்தையும் பார்த்து மெய்மறந்தன

கருத்துகள் இல்லை: