வெள்ளி, 25 அக்டோபர், 2019

தம்பதியை கொன்றதைப்போல் சம்பந்தியையும் கொலை செய்து புதைத்தேன் - பெண் வாக்குமூலம்

தம்பதியை கொன்றதைப்போல் சம்பந்தியையும் கொலை செய்து புதைத்தேன் - பெண் வாக்குமூலம்
ராஜாமணி  மாலைமலர்: வேடசந்தூர் தம்பதி கொலை வழக்கில் கைதான பெண் தனது சம்பந்தியையும் கொலை செய்து புதைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக கண்ணம்மாள், பூங்கொடி ஆகியோரை போலீசார் அழைத்து வந்த காட்சி. வெள்ளகோவில்:
வேடசந்தூர் தம்பதியை கொன்றதைப்போல் சம்பந்தியையும் கொலை செய்து புதைத்தேன் என்று பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 50). நிதி நிறுவன அதிபர். அவருடைய மனைவி வசந்தாமணி(44). இவர்களின் மகன் திருமண விழா வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெற இருந்தது. இதற்காக கடந்த 10-ந் தேதி இரவு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தண்டகுமார வலசில் உள்ள செல்வராஜின் அக்காள் கண்ணம்மாள்(54) வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க செல்வராஜ் தனது மனைவியுடன் வந்துள்ளார்.


இந்தநிலையில் சொத்துப்பிரச்சினை காரணமாக செல்வராஜ்-வசந்தாமணி தம்பதியை கொலை செய்து கண்ணம்மாள் தனது வீட்டுக்கு அருகே குழி தோண்டி புதைத்தது வெள்ளகோவில் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக கண்ணம்மாள் மற்றும் அவருடைய மருமகன் நாகேந்திரன்(35), நாகேந்திரனின் நண்பரான ஈரோட்டை சேர்ந்த இளங்கோ(27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த கண்ணம்மாளின் மகளும், நாகேந்திரனின் மனைவியுமான பூங்கொடியையும்(30) போலீசார் கைது செய்தனர்.

இதுஒருபுறம் இருக்க பெங்களூருவில் வசித்து வரும் நாகேந்திரனின் அக்காள் நாகேஸ்வரி(39) கடந்த 18-ந் தேதி வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது தாயார் ராஜாமணி(61) கடந்த 4 ஆண்டுகளாக பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரத்தில் குடியிருந்து அங்குள்ள ஒரு நூல் மில்லில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த மே மாதம் முதல் அவரை காணவில்லை. அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக ராஜாமணி வெள்ளகோவிலுக்கு சென்றதாக தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ராஜாமணி பற்றி பூங்கொடியிடம் போலீசார் விசாரித்தபோது ராஜாமணியும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவரம் போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கண்ணம்மாள் மற்றும் பூங்கொடி இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து காங்கேயம் கோர்ட்டில் வெள்ளகோவில் போலீசார் மனு செய்தனர். கோர்ட்டு அனுமதியுடன் நேற்று கண்ணம்மாள், பூங்கொடி இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து வெள்ளகோவில் போலீசார் விசாரித்தனர்.

அப்போது கண்ணம்மாள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறும்போது, “பூங்கொடியும், நாகேந்திரனும் காதலித்து கலப்பு திருமணம் செய்துள்ளனர். இது நாகேந்திரனின் தாயார் ராஜாமணிக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது மருமகளை அடிக்கடி திட்டி, தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தனது மாமியாரின் தொந்தரவு குறித்து பூங்கொடி தனது தாயாரிடம் சொல்லி அழுதுள்ளார். இதனால் ராஜாமணியை தீர்த்துக்கட்ட கண்ணம்மாள் முடிவு செய்துள்ளார்.


இதற்காக கடந்த மே மாதம் 6-ந் தேதி பூங்கொடியின் குழந்தைகளுக்கு சமயபுரம் கோவிலில் மொட்டை போடும் நிகழ்ச்சிக்கு ராஜாமணியை இருவரும் அழைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜாமணி வெள்ளகோவில் சென்றுள்ளார். வீட்டில் பூங்கொடியும், கண்ணம்மாளும் இருந்துள்ளனர். அப்போது ராஜாமணியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கண்ணம்மாள் அரிவாளின் பின்புற கைப்பிடியால் ராஜாமணியின் மூக்கில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்து ராஜாமணி இறந்து விட்டார். அதன்பிறகு ராஜாமணியின் பிணத்தை கண்ணம்மாள் தூக்கிச்சென்று வீட்டுக்கு அருகே கிடந்த குழிக்குள் போட்டு புதைத்துள்ளார். தம்பதியை கொலை செய்தது போல் தனது சம்பந்தியையும் கொலை செய்து புதைத்துள்ளார்” என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ராஜாமணியின் பிணத்தை தோண்டி எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் உதவி பேராசிரியர் டாக்டர் நந்தகுமார் தலைமையில் 4 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் நேற்று காலை உத்தண்டகுமார வலசில் உள்ள கண்ணம்மாள் வீட்டுக்கு வந்தனர். காங்கேயம் தாசில்தார் புனிதவதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். திருப்பூர் மாவட்ட தடயவியல் அதிகாரி ஸ்ரீதரனும் வந்தார்.

பின்னர் கண்ணம்மாள், பூங்கொடி இருவரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையிலான போலீசார் கண்ணம்மாளின் வீட்டுக்கு நேற்று மதியம் அழைத்து வந்தனர். கண்ணம்மாள் தனது வீட்டுக்கு அருகே ராஜாமணியின் உடலை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார். அங்கு 3 அடி ஆழத்துக்கு குழிதோண்டியபோது எலும்புக்கூடுகள் இருந்தன. அவை ராஜாமணியின் எலும்புகள் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த எலும்புகளை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அதை அங்குள்ள மயானத்தில் புதைத்தனர்.

போலீஸ் காவலில் உள்ள கண்ணம்மாள், பூங்கொடி இருவரையும் போலீசார் இன்று(வெள்ளிக்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். தம்பதி கொலை வழக்கில் கைதான பெண் தனது சம்பந்தியையும் கொலை செய்து புதைத்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: