செவ்வாய், 22 அக்டோபர், 2019

சவுக்கு சங்கர் தினகரனின் புரோக்கரா? வன்னி அரசு லீக்ஸ்

 வன்னி அரசு : சவுக்கு’சங்கரின் புரோக்கர் வேலை
அது கடந்த... பொதுத்தேர்தல் நேரம். இந்துத்துவ பாஜகவை வீழ்த்துவது ஒன்றே இலக்கு என்னும் அடிப்படையில் விடுதலைச்சிறுத்தைகள் தீவிரமாக களமாடிக்கொண்டிருந்த நேரம்.அதனால் தான் போட்டியிடும் இடங்கள் முக்கியமல்ல;கொள்கை தான் முக்கியம் என்று திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடருவது என்று தலைவர் எழுச்சித்தமிழர்
முடிவெடுத்து இருந்தார். ஆனாலும் விடுதலைச்சிறுத்தைகளை திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றி தனிமைப்படுத்தும் முயற்சிகளை சிலர் மேற்கொண்டனர். ஊடகவியலாளர் என்ற பெயரிலும் இயக்கத்தின் பெயரிலும் விடாது முயன்றனர்.
“ சாதியவாத பாமகவுடனும் மதவாத பாஜகவுடனும்ஒருபோதும் விடுதலைச்சிறுத்தைகள் கூட்டணி வைக்காது” என்று எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி பாமக திமுகவுக்குள் வர முயற்சித்தது. ‘திமுக அணியில் பாமகவும் அதிமுக அணியில் பாஜகவும் இருந்திருந்தால் விடுதலைச்சிறுத்தைகள் தனிமைப்பட்டு விடும்’ என்னும் சதி திட்டத்தோடு தான் பாமக இத்தகைய காயை நகர்த்தியது. ஆனால், பாமக ராமதாசின் பேரம் திமுகவில் படியாததால், அதிமுக பக்கம் இடம் பெயர வேண்டியிருந்தது.
ஏற்கனவே போராட்டக் களத்தில் திமுக தலைமையிலான கூட்டணியிலேயே விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்தோம்.

இந்த சூழலில் தொகுதி பகிர்வு பணிகள் தொடங்கியது.
தொகுதி பங்கீடு தொடங்கியதிலிருந்தே ஊடகங்கள் விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஒரே ஒரு தொகுதி என்றே ஆருடம் சொல்லி வந்தன. அது ஆரூடம் என்று சொல்வதை விட விருப்பம் என்றே சொல்லலாம். அல்லது திமுகவுக்கான வழிகாட்டுதலாக சொல்லலாம்.
சில கருத்து கந்தசாமிகள் இன்னும் ஒரு படி மேலே போய் திமுக தனித்தே நின்றாலும் வெற்றி பெறலாம் என்று திமுகவுக்கான பெரும் பள்ளங்களை பறித்து வைத்தனர். ஆனால் திமுக சமூகநீதி கொள்கையை விட்டுவிடக்கூடாது என்னும் அடிப்படையில் சமூகநீதியை ஆதரிக்கும் கட்சிகளை அரவணைத்துக்கொண்டது.
விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஒரே தொகுதி தான் என்று பேசப்பட்டுக்கொண்டிருந்த சூழலில் தான் ஊடகவியலாளர் என்னும் பெயரில் அவர் தொடர்பு கொண்டார். அவர் பெயர் சங்கர். சவுக்கு என்னும் இணைய பக்கத்தை நடத்தி வருவதாகவும் என்னிடம் அறிமுகமாகி பேசினார்.
தோழர் தோழர் என்று மிக அக்கறையோடு தினமும் பேச ஆரம்பித்தார். ஒரு நாள் அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டை
அவிழ்த்தார். அதாவது, “திமுக உங்களுக்கு ஒரு சீட் தான் கொடுக்கும். அது தான் உறுதி. இன்றைக்கு விடுதலைச்சிறுத்தைகள் மிக வலிமையான கட்சி.
ஒரு தொகுதியை வாங்கி அவமானப்பட போகிறீங்களா?
பாமக அதிமுகவில் 5 தொகுதிகளுக்கும் மேல் வாங்கப்போகிறது. உங்களுக்கு ஒன்னு என்றால் உங்கள் கட்சிக்காரர்களே ஏற்க மாட்டார்கள். அதனால்
உங்களுக்கு நல்ல வழி ஒன்று சொல்லுகிறேன், அமமுக தலைவர் தினகரன் கூட கூட்டு வைத்துக்கொண்டால் 5 சீட்டுகள் வரை நான் பேசுகிறேன். பணமும் வாங்கித்தருகிறேன்”
என்று என்னிடம் பேரம் பேச ஆரம்பித்தார் சவுக்கு சங்கர்.
தினமும் என்னை விடாது நச்சரிக்க ஆரம்பித்தார். இது குறித்து தலைவரிடம் நான் கூறவே இல்லை. ஏனென்றால் தலைவரின்
மன ஓட்டத்தை தெரிந்தவன் என்பதையும் தாண்டி திரு.தினகரனுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதையும் அறிந்தவன். அதனால் சவுக்கு சங்கரின்்இந்த உரையாடலையே தலைவரிடம் சொல்ல
தவிர்த்து விட்டேன்.
பிற்பாடு தொகுதி பங்கீடு முடிந்தது. தேர்தலும் முடிந்தது. வெற்றியும் பெற்றோம். ஆனால் விடுதலைச்சிறுத்தைகளை தனிமைப்படுத்த முயன்றோரின் சதிகள் தான்
வெற்றிபெற முடியவில்லை.
அந்த சதியின் கும்பலில் ஒருவர் தான் இந்த சவுக்கு சங்கர். தனக்குத்தானே தமிழகத்தின் ‘அசாஞ்சே’என்று அழைத்துக்கொண்டவர்.
( அதற்கான எந்த தகுதியும் இல்லை)
இந்த புரோக்கருக்கு டி.என்.கோபாலன் என்னும் மூத்த ஊடகவியலாளர் வேறு சான்றிதழ் வழங்கினார். ( எதுவும் பங்கு கிடைக்கிறதோ)
நல்ல ஊடகவியலாளர் என்று.
ஆனால் ஒரு ஊடகவியலாளர் செய்யும் பணியா இது? அரசியல் கட்சிகள் செய்யும் தவறுகளை துப்பறிந்து மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தலாம்.
அதிகார வர்க்கத்தை தூங்கவிடாமால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அதை விடுத்து இப்படி ‘புரோக்கர்’ வேலை செய்வது தான் ஊடகவியலாளர் வேலையா?
இதில் தமிழ்நாட்டின் ‘அசாஞ்சே’ என்னும் பட்டம் வேறு. திரு.தினகரனிடம் சவுக்கு சங்கர் கூலி வேலை செய்வது குறித்து நமக்கு கவலை இல்லை. ஆனால் ஊடகவியலாளர் என்ற அடையாளத்தோடு ‘புரோக்கர்’வேலை செய்வதைத்தான் கேள்வி எழுப்புகிறோம். அந்த புரோக்கர் வேலை தோல்வியில் முடிந்ததால் தான் விடுதலைச்சிறுத்தைகள் மீது அவதூறு குப்பையை வீசி வருகிறார் சங்கர்.
பாவம் அந்த புரோக்கர் வேலை வெற்றிகரமாக முடிந்திருந்தால் நாலு காசு பார்த்திருப்பார்.முடியாததால்
காங்கிரசோடு கூட்டணி, ராஜபக்சேவுடன் கைக்குலுக்கல் என்று
காழ்ப்புணர்வை கொட்டுகிறார்.
சவுக்கு சங்கர் போன்ற புரோக்கர்களை மற்ற ஊடகவியாலாளர்கள் தனிமை படுத்த வேண்டும்.
- வன்னி அரசு
22.10.2019

கருத்துகள் இல்லை: