திங்கள், 21 அக்டோபர், 2019

உணவு உண்ணும் முறை, மலம் கழிக்கும் முறை, சிறு நீர் கழிக்கும் முறை

Sundram.P :சோத்து மூட்டை - 6 ! நாம் உண்ணும் உணவு செரித்து அதிலிருக்கும் சத்துப்பொருட்கள் குருதியில் கலக்கிறது.
குருதி உடலின் எல்லா உறுப்புகளுக்கும் சென்று திரும்பும்போது சத்துப்பொருட்களை அந்தந்த உறுப்புகளின் திசுக்களுக்கு அளித்துவிட்டு அங்கே இருக்கும் கழிவுப்பொருட்களை சுமந்து மீண்டு வருகிறது.
இவ்வாறு வரும் கழிவுகளைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் வேலையை தோல், சிறு நீரகம் போன்ற உறுப்புக்கள் தொடர்ந்து செய்துவருகின்றன.
இவ்வாறான எல்லா உறுப்புக்களும் சரிவர இயங்கிக்கொண்டிருந்தால் மனிதருக்கு, நோய் இல்லை. இந்த உறுப்புக்களின் இயக்கத்தில் குறைபாடுகள் நேரும்போது அவை வியாதிகளாக வெளிப்படுகின்றன.
இது அடிப்படை உடலியல் அறிவியல்.
இந்த இயக்க சுழற்சிகளுக்கு இடையில் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை. இதனைக் கணித்த நம் முன்னோர்கள் நமக்கு மூன்று வேளை உணவை நிர்ணயம் செய்தார்கள்.
உடலின் உறுப்புகளுக்கு தேவையான ஓய்வு கொடுத்தால்மட்டுமே அவை சீறாக இயங்கும். அவற்றின் வேலைப் பளுவை அதிகரித்தோமானால், அவற்றின் வேலைத் திறன் குறைவுபடும். உணவிலிருந்து சத்துப்பொருட்களைப் பிரித்தெடுப்பதாகட்டும், கழிவுகளை வெளியேற்றுவதாகட்டும், இந்த செயல்பாடுகளில் பிரச்சினை தோன்றும்.

தனது பிரச்சினைகளை உடல் நமக்கு எவ்வாறு தெரிவிக்கிறது?
தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி ஆகியவை முக்கியமான சிக்னல்கள்.
ஆம். இவை சமிக்கைகள்தான். தலைவலியும் காய்ச்சலும் நோய்கள் இல்லை. உடலில் இருக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காண்பிக்கும் சமிக்கைகள் (சிக்னல்கள்).
ஆனால் அலோபதி என்ன செய்கிறது? தலைவலிக்கு ஒரு மருந்து, காய்ச்சல் அடங்குவதற்கு ஒரு மருந்து என்று எழுதி வழங்குகிறது. இதனால் இந்த சிக்னல்கள் கொல்லப்படுகின்றன.
உணவு உண்ணும் முறை, மலம் கழிக்கும் முறை, சிறு நீர் கழிக்கும் முறை என்று எல்லாவற்றுக்கு வழிமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள் நம் மூதாதையர்கள்.
உணவு உண்ணுதல், தரையில் அமர்ந்து, கால்களை மடக்கி சப்பணமிட்டு உண்ணுதல் என்பது சரியான முறை. இதனை கூர்ந்து நோக்குங்கள். தரையில் அமர்ந்து உண்டால், நம் உடல் சற்று முன்னோக்கிக் குனிந்து தலையை வணங்கி இருந்து உண்ணுதல் வேண்டும்.
இதனால் உணவு நமது இரைப் பையினை அடையத் தேவைப்படும் நேரம் சரியாக அமைகிறது. நன்றாக அரைத்து உண்ண முடிகிறது. உண்ண வேண்டிய அளவும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. (வயிறு நிறம்பிவிட்டால், குனிந்து உணவை ஏற்க முடியாது)
ஆனால் மேசையில் அமர்ந்து உண்ணும்போது இந்த இயக்கக் கட்டுப்பாட்டுக்கு இடமில்லாமல் போகிறது.
நம் நோய்களுக்கு தொடக்கப் புள்ளியாக நமது சாப்பாட்டு மேசை அமைகிறது என்றால் மிகையில்லை.
மற்றது, சிறு நீர் கழித்தல். ஆண்கள் குத்துக்காலிட்டு அமர்ந்து சிறு நீர் கழித்தல் என்பது நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட்து. அதனை மறந்து, நின்ற நிலையில் சிறு நீர் கழிக்க ஆரம்பித்தோம்.
இன்று நவீன அறிவியல் இதனை மீண்டும் கண்டுபிடித்து நமக்குச் சொல்லுகிறது. (Re-invention)
காணாது கண்ட மாமணியைக் காலால் உதைத்துத் தள்ளினேன் என்று ஒரு பழைய திரைப்படத்தில் வசனம் வரும்.
அதுபோலவே, நம் முன்னோர்கள் வகுத்துவைத்த வாழ்வியல் முறையின் அருமை தெரியாமல் அதனை சிதைத்துவிட்டு, வாழ்க்கை என்னும் பெயரில் நாட்களை எண்ணியபடி வாழ்கிறோம்.
(இன்னும் வரும்) Sundar. P

கருத்துகள் இல்லை: