செவ்வாய், 22 அக்டோபர், 2019

கனடா தேர்தல் - ஜஸ்டின் ட்ரூடோவின் லிபெரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பது சந்தேகமே

மாலைமலர் :கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது
முறையாக பிரதமர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டொராண்டோ: கனடாவில் 338 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக்கொள்ள போட்டியிடுகிறார்.
 ஜஸ்டின் ட்ரூடோ ஆரம்ப காலத்தில் கனடா மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றிருந்தார்.ஆனால் தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அவர் தடை விதித்தது மற்றும் இனவெறியை தூண்டும் வகையிலான அவரது பழைய புகைப்படங்கள் வெளியானது ஆகியவை அவரின் செல்வாக்கை சரிய செய்தது. இந்த 2 விவகாரங்களையும் முன்னிலைப்படுத்தி எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி தீவிர பிரசாரம் செய்ததால் ஜஸ்டின் ட்ரூடோ இந்த தேர்தலில் பின்னடைவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறாது என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

கருத்துகள் இல்லை: