செவ்வாய், 4 டிசம்பர், 2018

திருநங்கை காவலர் நஸ்ரியா தற்கொலை முயற்சி!

திருநங்கை காவலர் தற்கொலை முயற்சி!மின்னம்பலம் : தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை காவலர் நஸ்ரியா, தன்னுடன் பணியாற்றிய மூன்று போலீசாரே இதற்குக் காரணம் என்று வீடியோ பதிவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் நஸ்ரியா. திருநங்கையான இவர், ஆங்கிலப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சீருடைப் பணியாளர் தேர்வில் இவர் வெற்றி பெற்றார். இதையடுத்து, சமீபத்தில் இவர் ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணி நியமனம் செய்யப்பட்டார்.

எலி மருந்தைக் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இவர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு இவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை முயற்சிக்கு முன்னதாக, இவர் வீடியோவொன்றை சமூக வலைதளமொன்றில் வெளியிட்டுள்ளார். அதில், சக போலீசாரால் தான் மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
ஆயுதப்படையைச் சேர்ந்த ஆய்வாளர் முத்துராமலிங்கம், சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயசீலன், தலைமை எழுத்தர் பார்த்திபன் ஆகியோர் தனது ஒழுக்கத்தையும் நடத்தையையும் குறித்து தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், தனது தற்கொலைக்கு இம்மூவரே காரணம் என்றும் அந்த வீடியோவில் குற்றம்சாட்டியுள்ளார். காவல் துறையில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்த நஸ்ரியா, தன்னை துன்புறுத்திய சக போலீசாருக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டுமென்று இந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார் நஸ்ரியா. இதனைத் தொடர்ந்து எலி மருந்து கலந்த பானத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
நஸ்ரியாவின் வீடியோ கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள போலீஸ் தரப்பு, அவரை எந்தவிதத்திலும் தரக்குறைவாக விமர்சிக்கவில்லை என்றும், கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக தகவல் ஏதும் தெரிவிக்காமல் நஸ்ரியா விடுப்பு எடுத்தார் என்றும் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: