புதன், 5 டிசம்பர், 2018

தேர்தல் களம்: ராமரும் உதவ மாட்டார், மோடி வித்தையும் பலிக்காது!

savukkuonline.com : மக்கள் மனநிலை மாறியிருப்பதை காவிப் படை உணர்ந்திருக்கிறது.  
அதனால்தான் சரிந்து கொண்டிருக்கும் தங்கள் வாய்ப்பைத் தூக்கி நிறுத்த பழைய ராமர் கோயில் உத்தியை கையில் எடுத்துள்ளது. ஆளும் கட்சி இப்போது மோடி மீதான நம்பிக்கையைவிட, ராமர் மீதான நம்பிக்கையை நாடுகிறது.
காற்று மாறி வீசத் துவங்கியிருக்கிறது. 2014இல் இருந்தது போல இன்னமும் நரேந்திர மோடி காக்க வந்த சேவகன் இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன் பார்க்கப்பட்டது போல பாஜக எல்லாவற்றையும் சரி செய்யக்கூடிய கட்சி அல்ல. இரண்டையும் தேசம் உணர்ந்துவிட்டது. எவ்வளவு காலம்தான் தந்திரங்கள் மூலம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியும்? பொருளாதாரம் சிக்கலாகியிருக்கிறது. மோடி அரசு தனது செயல்பாடுகளைத் தொடர ரிசர்வ் வங்கியின் கையிருப்பை மாற்றித்தர அல்லது ஒப்படைக்கக் கோரும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. சிபிஐ போன்ற முக்கிய அமைப்புகளுக்குள் மோதல் வெடித்து நிர்வாகம் கேலிக்கூத்தாக மாறியிருக்கிறது. மோடி அரசின் செயலற்ற தன்மையால் வெறுத்துப்போயிருக்கும் மக்களின் கோபம் வீதிகளில் வெளிப்படத் துவங்கியிருக்கிறது.

2018 சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வது இப்போது பாஜகவுக்குக் கடினமானதாக ஆகியிருக்கிறது. மிகவும் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலிலிருந்து பாஜகவுக்கு நிலைமை மாறத் துவங்கியிருக்கிறது. மோடி மாயம் கர்நாடாகாவில் எடுபடவில்லை, அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 5இல் 4 இடங்களில் கட்சி தோல்வி அடைந்துள்ளது. பாஜகவின் பண மூட்டையான ரெட்டி சகோதரர்கள் தங்கள் கோட்டையாக 10 ஆண்டுகளுக்கு மேல் கருதிவந்த பெல்லாரியில் கட்சி பரிதாபமாக தோற்றது.
இனி பாஜகவால் என்ன செய்ய முடியும்? 2019இல் மீண்டும் வெற்றி பெறுவது எப்படி? மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மத்தியில் நீடிக்க விரும்பும், மோடி – ஷா – பாகவத் கூட்டணிக்கு இந்தக் கேள்வி முக்கியமாகிறது. மொத்தக் காவிப் படையும் மக்கள் மனநிலையை உணர்ந்திருக்கிறது. அதனால்தான் தனது சரியும் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த ராமர் கோயில் உத்தியைக் கையில் எடுத்துள்ளது. ஆளும் கட்சி இப்போது மோடி நம்பிக்கையை விட ராமர் கோயில் நம்பிக்கையை சார்ந்திருக்கிறது. 2019இல் கடவுள் ராமர் வெற்றியைத் தருவாரா?
1992இல் பாஜக, ஆளும் கட்சி மீதான எதிர்ப்பு எனும் சுமை இல்லாத எதிர்க்கட்சியாக இருந்தது. இன்று மோடி தலைமையிலான பாஜக ஆளும்கட்சியாக, அனைத்து முனைகளிலும் செயலற்ற தன்மையால் தவிக்கும் கட்சியாக இருக்கிறது. 2014இல் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், மோடியால் தன்னை இந்து ராஷ்டிரத்தின் நாயகனாக முன்னிறுத்திக்கொள்ள முடியாது.
இது கடினமானதுதான். 1990களில் ராமர் கோயில் பிரச்சினை பாஜகவை தேசிய அளவில் முன்னிறுத்தியது. அந்தக் காலம் இப்போது மலையேறிவிட்டது. 2019 என்பது 1990கள் அல்ல. அந்தக் காலகட்டம் வேறு விதமானது. தேசம் கோபமான மனநிலையில் இருந்தது. விபிசிங்கின் மண்டல் அரசியலால் இந்து சமூகத்துக்குள் சாதி ரீதியிலான பிளவுகள் அதிகரித்திருந்தன. சாதி அரசியல் அப்போது எழுச்சி பெற்றிருந்தது. சாதிப் பிரிவுகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை பாபர் மசூதி நடவடிக்கைக் குழு எதிர்க்க வேண்டியிருந்தது. இந்த அமைப்பின் கீழ் முஸ்லிம்கள் வீதியில் இறங்கிப் போராடினர். சங் பரிவாரத்திற்கு இது தட்டில் வைத்து வழங்கப்பட்ட வரப்பிரசாதமாக அமைந்தது. ராமர் கோயில் என்னும் கோஷத்தோடு விஎச்பி களத்தில் குதித்தது. விரைவில் இது அல்லாவுக்கும் ராமருக்கும் இடையிலான மோதலாக மாற்றப்பட்டது. 1991-92இல் முஸ்லிம்களுக்கு எதிரான இந்துக்களின் கோபத்தைப் பயன்படுத்திக்கொண்ட அத்வானியின் ரத யாத்திரை 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட வழி செய்தது. வலுதுசாரிக் கட்சியாக இதன் அரசியல் பலனை பாஜக அறுவடை செய்தது.
கோயில் – மசூதி பிரச்சனையில் இந்துக்களின் கோபத்தை தூண்டிவிட, மறு முனையில் முஸ்லிம் எதிர்ப்பு இருந்தது. ஆனால் இன்று எந்த பாபர் மசூதியும் இல்லை. இந்துக்களைத் தூண்டிவிட முஸ்லிம்களை பேரணி நடத்த வைப்பதற்கான பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவும் இல்லை. ராமர் கோயிலுக்குக் குறுக்கே இப்போது நிற்பது உச்ச நீதிமன்றம்தான். அதைத்தான் மடாதிபதிகளும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் குறி வைக்கின்றனர். முஸ்லிம்கள் ஊக்கம் இழந்து, தோல்வி மனப்பான்மையோடு, வருவதை ஏற்றுக்கொள்பவர்களாக, கும்பலால் எப்போது வேண்டுமானலும், எங்கு வேண்டுமானாலும் குறி வைக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே முஸ்லிம்களைக் காட்டி இந்துக்களை ஒன்று திரட்டுவது 2019இல் எளிதாக இருக்காது.
ராமர் கோயில் பிரச்சினையைத் தீவிர தேர்தல் பிரச்சினையாக பயன்படுத்துவதில் உள்ள இன்னொரு தடை பாஜகதான். 1992இல் பாஜக எதிர்க்கட்சியாக இருந்தது. ஆளும்கட்சி மீதான அதிருப்தி என்னும் சுமை அதற்கு அப்போது இல்லை. ஆனால் இன்று அது ஆளும்கட்சியாக இருக்கிறது. அனைத்துத் துறைகளும் செயலற்ற தன்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 2014இன் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் மோடி, இந்துக்களின் நம்பிக்கை நாயகனாக விளங்குவது கடினம்தான்.
இவை எல்லாவற்றுக்கும் மேல், ராமர் அலை வீசுவதற்கு எதிராக நிற்பது நரேந்திர மோடியின் சர்வாதிகாரப் போக்குதான். இது அனைத்து எதிர்கட்சிகளையும் ஓரணிக்குக் கொண்டுவந்து, 2014இல் மோடிக்கு எதிராக இருந்த 69 சதவீத வாக்காளர்களை ஒருங்கிணைக்க வழி செய்யலாம். இந்த முறை செயற்கையாக உருவாக்கப்பட்ட ராமர் அலையைவிட, மோடிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டுப் பேரணிக் கூட்டங்கள் தேசத்தின் மனநிலையை அதிகமாக ஈர்க்கலாம்.
முஸ்லிம் எதிர்ப்பு இல்லாத ராமர் கோயில் பிரச்சினை, மோடி அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தி ஆகிய காரணங்களால் 2019இல் பாஜகவுக்கு இன்னொரு வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை.
ஜாபர் அகா
நன்றி: நேஷனல் ஹெரால்ட்
https://www.nationalheraldindia.com/opinion/neither-ram-bharosey-nor-modi-bharosey-will-work-for-bjp-in-the-upcoming-

கருத்துகள் இல்லை: