புதன், 5 டிசம்பர், 2018

திருமுருகன் காந்தி : சாதி வீரத்தை சொல்லிக்கொண்டு அருவாளை தூக்கிக்கொண்டு வருகிறாயே அப்படியே டெல்லிக்கு போ பார்க்கலாம்...

yநக்கீரன் : சமீபத்தில் காவிரி ஆற்றில் மாண்டியா எனும் பகுதியில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சுவாத்தி மற்றும் நந்தீஸ்க்கு சென்னை அம்பேத்கர் திடலில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி, இடைநிலை சாதியினரின் பிற்போக்கு சாதிய கொள்கைள் பற்றியும், பாஜகவின் இந்துத்துவ அரசியலைப் பற்றியும் பேசினார். அவர் பேசியதில் இருந்து. ஆணவப் படுகொலை, சாதி வெறி போன்றவை எல்லாம் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டுவருகிறது. இன்று இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிடப்பட்டு,  சாதிய வெறியை வளர்க்கின்ற போக்குக்குள் நகர்த்தப்படுகிறார்கள்.
அவர்களுக்குள் இயல்பாக இருக்கும் சாதிய மனோபாவத்தை, இங்கிருக்கும் இந்துத்துவ சக்திகளால் கூர்தீட்டப்படுகிறது. இது ஏன் இப்போது  வளர்த்தெடுக்கப்படுகிறது என்று பார்த்தால் இங்கிருக்கும் முற்போக்கான அரசியலை உடைக்கவேண்டியத் தேவை இந்தியாவிற்கும், இந்துத்துவ அமைப்புக்கும் இருக்கிறது. மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய கல்வியோ அல்லது வேலை வாய்ப்போ கிடையாது.


ஒரு சமயத்தில் இடஒதுக்கீட்டிற்காக பேசிய அந்த சமூகம் எல்லாமும் இன்று சாதி வெறியை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. அந்த சாதியக் கூட்டங்களை தங்கள் வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தும் அமைப்புகளாக அவை மாற்றிவிட்டன. இந்த அமைப்புகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்வதற்கும், தங்களின் சுரண்டலை தீவிரப் படுத்துவதற்கும் இந்த இளைஞர்களிடம் இருக்கும் சாதிய உணர்வை கூர்மைப்படுத்தி, அவர்களின் பிரதான எதிரியை நோக்கி நகர்த்தாமல் எளிய மக்களை நோக்கி நகர்த்தும் வேலையைத் திட்டமிட்டு செய்கிறார்கள். இது திட்டமிட்டு இந்திய அரசால் நகர்த்தப்படும் ஒரு வேலைத்திட்டம். எல்லோரிடமும் ஒரு பிற்போக்கு மனப்பான்மை இருக்கும் அதனை வளர்த்தெடுக்கும், கூர்மைப்படுத்தும் வேலையை இந்த அரசும், இந்த நிர்வாகமும், இந்துத்துவ அமைப்பும் திட்டமிட்டு செய்கின்றன. எட்டு வழிச் சாலை, மீத்தேன், கெயில், அணு உலை பிரச்சனை என எதுவாக இருந்தாலும் அதனை எதிர்க்க ஆதிக்க சாதி அமைப்புகள் வருவதும் கிடையாது, பங்குபெறுவதும் கிடையாது. இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் எவனும் மீசையை முறுக்கிக்கொண்டு வரவில்லை. கெயில் குழாய்  பிரச்சனையில் அந்த விவசாயி மண்டையை, காவல்துறை உடைக்கும்போது எந்த வீரப்பரம்பரையும் மீசையை முறுக்கிக்கொண்டோ அல்லது வேட்டியை மடித்துக்கொண்டோ வரவில்லை. அவர்கள் யாரும் எதிர்த்து போராடவோ, சிறைக்கு செல்லவோ, அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நிற்கவோ தயாராக இல்லை. இன்று அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள், சுற்றுசூழலை நாசம் செய்யக்கூடியக் கொள்கைகள், வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய கொள்கைகள் பெரும் அளவில் பாதிக்கக் கூடிய இடைசாதியினரின் நிலத்தை பாதிக்கக்கூடிய கொள்கைகள், என எதையும் எதிர்த்துகூட நிற்கக்கூடிய அரசியல் இல்லாத நிலையில்தான் இடைசாதியினர்  இருக்கிறார்கள். காரணம் இந்த சாதிய சங்கங்கள் வெறும் வாக்கு வங்கிகளாக மாறியிருக்கிறது, அவர்களின் சுயநலத்திற்காக இவர்களை முற்றிலுமாக சிதைத்திருக்கிறார்கள்.


முற்போக்கு கருத்துகளை கொண்டுசெல்ல வேண்டிய அமைப்புகள் அதன் பணியை செய்யாமல்போனதன் விளைவையும் சேர்த்து பார்க்கிறோம். இது எவ்வளவு மோசமான சூழலை உருவாக்கி இருக்கிறது என்றால், மேற்கு மண்டலத்தில் அம்பேத்கர் சிலையையும், பெரியார் சிலையையும் பார்க்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் நுட்பத்தில், உற்பத்தியில் வளர்ச்சி கண்ட பகுதியாக மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு சுத்திக்கொண்டிருக்கிறார்கள். மேற்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படி சாத்தியமானது என்றால், அவர்களுக்கு அங்கே மின்சாரமும், கல்வியும், அதற்குரிய தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களும் கிடைத்த கரானதால் மேற்கு மண்டலம் வளர்ச்சி அடைந்தது. மிக முக்கியமாக அங்கு மின்சாரம் என்பது வந்தபிறகுதான் பெரிய, பெரிய தொழிற்சாலைகள் கிடைத்தது. அந்த மின்சாரம் எப்படி கிடைத்தது என்றால், அனைவரும் பயன்படுத்தக்கூடிய மானிய விலையில் அவர்களுக்கு கிடைத்தது.  அதனால்தான் அங்கு தொழில்புரட்சி நடந்து வளர்ச்சி அடைந்தது. இந்த தொழில் புரட்சிக்கு தேவையான இளைஞர்களை உருவாக்குவதும் அங்கு சாத்தியமானது. இது எப்படிவந்தது என்றால் இடஒதுக்கீடு சட்ட வழி மூலமாகவும், மின்சாரம் சட்டங்களின் மூலமாகவும்தான் வந்தது. மின்சார சட்டம் என்பது என்ன,  இந்தியா விடுதலை அடைந்தப்போது குறிப்பிட்ட சில பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருளாக மின்சாரம் இருந்தது. இவர்களிடம் பெரிய விலைக்கு மின்சாரத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ஏழை, எளிய மக்களுக்கும் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கும் மானிய விலையில் மின்சாரத்தைக் கொடுத்து அவர்களைதொழில் வளர்ச்சிக்கு கொண்டு செல்லவேண்டும் என்று மின்சார சட்டம் வடிவமைக்கப்பட்டது. அதன் மூலமாகத்தான் கிடைத்த மின்சாரத்தை வைத்துக்கொண்டு தொழில் வளர்ச்சி என்பது மேற்கு மண்டலத்தில் சாத்தியமானது. இந்த சட்டத்தைக் கொண்டுவந்தது அண்ணல் அம்பேத்கர். இன்று மேற்கு மண்டலம் வளர்ச்சி அடைவதற்கு காரணம் அண்ணல் அம்பேத்கர் கொண்டுவந்த சட்டம்தான் ஒழியே வேறு எந்த இடைநிலை சாதியினரும் மீசையை முறுக்கிக்கொண்டு செய்தவேலை அல்ல. ஆனால் இந்த மின்சாரத் திட்டத்தை இரத்து செய்யக்கூடிய ஒரு மசோதாவை வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் மோடி அரசுகொண்டு வரவிருக்கிறது. ஆகவே இதைப் பற்றி பேசுவதற்கு அந்த சாதி சங்கங்களோ அல்லது அந்த சாதி அமைப்புகளின் வாக்குகளை வாங்கி பாராளுமன்ற உறுப்பினர்களாக சென்றவர்களோ  தயாராக இல்லை. எவனெல்லாம் அம்பேத்கர் சிலையை வைக்கக்கூடாது என்று சொன்னானோ அவனின் தொழில் வளம் என்பது முழுவதுமாக நசுக்கப்படப்போகிறது. ஏனென்றால் அவனுக்கு அம்பேத்கரையும் தெரியாது, அம்பேத்கர் கொண்டுவந்த சட்டமும் தெரியாது. அவர் பேசிய சமூக நீதியும்தெரியாது. அவர்களுக்கு மீசையை முறுக்குவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இந்தக் கூட்டத்தை வைத்துக்கொண்டு இந்துத்துவம் கொண்ட இந்திய அரசு தனது பொருளாதார திட்டத்தை முழுவதையும் நடைமுறைப்படுத்துகிறது. தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில்தான் தண்ணீரை தனியார் மையமாக மாற்றியிருக்கிறார்கள், திருப்பூரில் தண்ணீரை விற்கிறார்கள். கோவையில் தண்ணீரை முழுவதுமாக தனியார் மையமாக மாற்றுவதற்கு  ஒரு பிரெஞ்சு நிறுவனத்திடம் கையெழுத்து ஆகிவிட்டது. 




இந்தத் திட்டங்களைப் பற்றி பேச எந்த சாதி தலைவர்களும் தயாராக இல்லை, மீறி பேசினால் அரசாங்கத்தினால் அடி விழும். இந்தத் திட்டங்களை எதிர்த்து நிற்கவோ, அதன் அடக்குமுறையை கையாளுவதற்கோ, சிறைவாசம் ஏற்பதற்கோ இந்த மீசை முறுக்கிகள் தயாராக இல்லை. ஏனென்றால் அவர்களின் வீரத்தின் எல்லை அவ்வளவுதான்.  இந்த மக்கள் எழுச்சி பெற்றுவிடக்கூடாது, அரசியல் பெற்றுவிடக் கூடாது என திட்டமிட்டு இந்த சாதிவெறி என்பது வளர்க்கப்படுகிறது. சாதி வெறி கொண்டவர்கள் மீது இந்த அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கக்கூட தயங்குகிறது. அதனால்தான் எஸ்.சி மற்றும் எஸ்.டி சட்டத்தை முழுவதுமாக நீர்த்துப்போக மோடி அரசு வழி செய்கிறது. அதை செய்த நீதிபதிகளுக்கு உடனடியாக பசுமை தீர்ப்பாயத்தில் பதவி கொடுத்து அமர வைத்துவிட்டார்கள். மாலை 5.00 மணிக்கு அவர் ஓய்வு பெறுகிறார், உடனடியாக 5.30 மணிக்கு அவருக்கு மற்றொரு பதவி வழங்கப்படுகிறது. இது அனைத்தும் இணைக்கப்பட்ட ஒன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாக அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்தப் பாசிசத்தை, சாதிவெறியை கையாளுவதற்கு வேறொரு வழிமுறையும் இருக்கிறது, அது அவர்கள் கொண்டுவரும் பொருளாதாரத் திட்டங்களை அம்பலப்படுத்துவதுதான். எட்டு வழி சாலை, மீத்தேன், கெயில் குழாய் போன்றவற்றில் யாருடைய நிலம் பாதிக்கப்படுகிறது. இதை எதிர்த்து நிற்கும் போராட்டங்களில் எல்லாம் ஆதிக்க சாதி அமைப்புகள் எதுவும் இல்லை எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் நிற்கிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்காகத்தான் இந்த வேலையை திட்டமிட்டு செய்கிறார்கள். ஏனென்றால் அம்பேதகர் கருத்தியலை முன்னிறுத்தி போராட்டக்களத்தில் முன்னிற்கும் தலித் இளைஞர்களை ஒடுக்குவதற்குத்தான், அவர்களை பொதுவெளியில் முன்னிறுத்தி வில்லன்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.  இவர்கள் அரசியலையோ பொருளாதாரக் கொள்கைகளையோ எதிர்த்து பேசுவதற்கும்  தயாராக இல்லை. ஒடுக்கப்பட்ட இடைநிலை சாதியினரும்கூட அதைப்பற்றி பேச தயாராக இல்லை.  வடமாநில இளைஞர்களால்,  வடமாநிலத்தில் அவமானப்படுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் இடைநிலை சாதியினரைப் பற்றி பேசுவதற்கும்கூட  இங்கே மீசையை முறுக்கிக்கொண்டு எவனும் வரவில்லை.

ஏம்ஸிலும் டெல்லியிலும் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எல்லாம் யார், எந்த சமூகத்தை சார்ந்தவர்கள், ஏன் அங்கெல்லாம் உன் பெருமை வரமாட்டேங்குது, அருவாளை தூக்கிக்கொண்டு டெல்லிக்குப் போய் பாருங்களேன், உன் சாதி வீரத்தை சொல்லிக்கொண்டு லாரியில் அருவாளை தூக்கிக்கொண்டு வருகிறாயே அப்படியே சென்னையைத் தாண்டி டெல்லிக்கு போ என்ன நடக்கும் என்று பார்ப்போம். உண்மையான ஆற்றல் நீ வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் அதைக் காட்ட வேண்டிய இடம் எங்கோ அங்கு காட்ட நீ தயாராக இல்லை. ஏனென்றால், அவன் அடிப்பான் உனக்கு வலிக்கும். எங்கு உன் வீரத்தைக் காட்டினால் எதிர்வினை வராது என்று நினைக்கின்றாயோ அங்கேதான் உன் வீரத்தைக் நீ காட்டுகின்றாய். இதற்குப் பின்புலமாக இருக்கின்ற இந்துத்துவ சாதிகளை தடைசெய்ய வேண்டும். யாரெல்லாம் ஆணவப் படுகொலைக்கு  உடந்தையாக இருக்கின்றார்களோ, யாரெல்லாம் சாதிவெறி பேசுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் விவசாயத்திற்கு லோன் கிடையாது, ரேஷன் கார்டு கிடையாது, ஆதார் கார்டு கிடையாது என்று சட்டம் கொண்டு வந்தால், இந்த அரசு யோக்கியமான அரசாக இருந்தால் இதையெல்லாம்  நிச்சயம் செய்ய வேண்டும். இந்த அரசு உண்மையாகவே சாதியை ஒழிக்கக் கூடிய அரசாக இருந்தால் இதை எல்லாம் செய்ய வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால் இவர்கள் ஆணவப் படுகொலை செய்ய மாட்டார்கள். ஏனென்றால், இவளுக்கு சோறு முக்கியம் அந்த இடத்தில் கை வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்காக இந்த ஆணவப் படுகொலையை, சாதிவெறியை தடுக்கின்ற வகையிலே சட்டம் ஏற்றுகின்ற போராட்டத்தை, அழுத்தத்தை நாம் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்க வேண்டிருக்கின்றது. மேலும் ஒவ்வொரு ஊராக, மாவட்டம் மாவட்டமாக, கிராமம் கிராமமாக, நாம் பிரச்சாரம் செய்ய வேண்டியத் தேவை இருக்கின்றது. அதுதான் இந்த தோழர்களுக்கு உண்மையாக நாம் செலுத்துகின்ற வீர வணக்கமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: