செவ்வாய், 4 டிசம்பர், 2018

ஆர்.கே.நகர் 89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு: அதிர்ந்துப்போன நீதிபதிகள்

tamil.thehindu.com : ஆர்.கே.நகரில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா விவகாரத்தை அரசு கையாண்டவிதம் குறித்து அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம் அதுகுறித்த விபரமான அறிக்கையை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே. நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்ய முயற்சித்ததாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆர்.கே. நகரில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி நடக்கவிருந்த இடைத்தேர்தலுக்கு முன்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, 89 கோடியே 60 லட்ச ரூபாயை ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கொண்ட பட்டியல் அடங்கிய ஆவணங்கள் கசிந்தன.
பின்னர் வருமானவரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்ய சென்னை காவல் ஆணையரிடம் தேர்தல் ஆணையத்தால் புகார் அளிக்கப்பட்டது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தபட்ட சோதனையின்போது வருமான வரித்துறை  அளித்த அறிக்கையில்  சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இதனிடையே பணப்பட்டுவாடா தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும், விசாரானையை சிபிஐ-க்கு மாற்றவும் உத்தரவிடக்கோரி வைரக்கண்ணன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அருண் நடராஜன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த ஆண்டு இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.சுந்தர் அமர்வு வருமான வரித்துறையின் அறிக்கையில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் அதன் அடிப்படையில் பதிவான எஃப்.ஐ.ஆரில் பெயர்கள் இடம்பெறாதது தொடர்பாக கேள்வி எழுப்பினர். பின்னர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், உத்தரவிட்டு ஒரு வருடமாகியும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனவே அதுகுறித்து இன்று மதியம் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
அப்போது திமுக தரப்பில் குறுக்கிட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பணபட்டுவாடா திட்டம் தொடர்பான அபிராமபுரம் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளிப்பட்டை சேர்ந்த பி.எம்.நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆர்.-ஐ கடந்த மார்ச் மாதம் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ரத்து செய்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்த விளக்கத்தால் அதிர்ந்த நீதிபதிகள்
பணப்பட்டுவாடா தொடர்பான  வழக்குகள் இரண்டு நீதிபதிகள் அமர்வில் நிலுவையிலுள்ள நிலையில் எப்படி ரத்தானது என்பது பற்றியும் சேர்த்து விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் மதியம் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணைய புகாரை இணை ஆணையர்கள் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டோம், ஒரு வருடத்துக்கு மேலாகியும் அறிக்கை தாக்கல் செய்யவில்லையே ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
எஃப்.ஐ.ஆர்-ல் தொடர்பில்லாத ஒருவர் வழக்கு தொடரும்போது வழக்கின் தீவிர தன்மையை உணராமல் இணை ஆணையர் செயல்பட்டுள்ளதால் அது ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். 884 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளது, 3 நபர்களை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது ஆனாலும் பெயரிடப்படாத முதல் தகவல் அறிக்கையாகவே இருப்பது மர்மமாகவே உள்ளதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
காவல்துறை தரப்பில் உரிய விளக்கத்தை அளிக்க முடியாததால், கிழக்கு மண்டல முன்னாள் இணை ஆணையர் மனோகரன், தற்போதைய இணை ஆணையர் அன்பு ஆகியோர் இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
பின்னர் இடை தேர்தல் நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 33 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை அறிக்கை அளித்தது, ஆனால் அதன்பின்னர் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என வருமான வரித்துறையிடம் கேள்வி எழுப்பினர்.
அதுதொடர்பாகவும், அபிராமபுரம் காவல் நிலைய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென்ற திமுக மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை: