வெள்ளி, 14 டிசம்பர், 2018

ரஃபேல் ஒப்பந்தத்தில் சந்தேகம் இல்லை: உச்ச நீதிமன்றம்.. உச்சி குடுமி நீதிமன்றம்?

மின்னம்பலம் : ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அதன் விலை,
கொள்முதல் செயல்முறை ஆகியவற்றில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 14) தெரிவித்துள்ளது.
36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. விமானங்களுக்கு
விலை நிர்ணயம் செய்தது முதல் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தது வரை ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட பாஜக ஆட்சியில் ரஃபேல் விமானம் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாகவும், அதனால் அனில் அம்பானி பலனடைந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது
எனவே ரஃபேல் ஊழல் தொடர்பாக, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா, வினித் டண்டா ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் கூட்டாக மனு தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10.30 மணியளவில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
ரஃபேல் ஒப்பந்தத்திற்கான செயல்முறைகளைச் சந்தேகிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. இந்த ஒப்பந்தத்திற்குப் பின்பற்றப்பட்ட வழிமுறைகளிலும் சந்தேகத்திற்கு இடமான அம்சங்கள் இல்லை. அனுமானத்தின் அடிப்படையில் கூறும் புகார்களால் எந்தப் பலனும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ரஃபேல் விலை விவகாரம் என்பது ரகசியமாக வைக்க வேண்டும் எனவும், அதன் விலையை ஒப்பிட்டுப் பார்ப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஃபேல் விமானத்தின் தரத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், 36 விமானங்களுக்குப் பதிலாக 126 விமானத்தை வாங்க வேண்டும் என்று மத்திய அரசைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த ஒப்பந்தம் திருப்தி அளிப்பதாகக் கூறி, சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பு வழங்கினர்.
மோடிக்குக் கிடைத்த வெற்றி
இந்த தீர்ப்பு மோடிக்குக் கிடைத்த வெற்றி என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ரஃபேல் ஒப்பந்தம் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் அரசியல் லாபத்திற்காகக் குற்றச்சாட்டை முன்வைக்கிறது என்று கூறினார்.
பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்
“நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ரஃபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் எல்லாம் பொய்யானது. இனி, அவ்வாறு பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
தீர்ப்பு தவறானது
“உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தவறானது. ரஃபேல் தொடர்பான பிரச்சாரம் ஓயாது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு எடுக்கப்படும்” என்று மனுதாரரான பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: