புதன், 12 டிசம்பர், 2018

சீமான் தெலுங்கு மக்கள் மீது அவதூறு பேச்சு ..வழக்கு பதிவு ... பல்வேறு பிரிவுகளில்

பிரிவினைவாத பேச்சு: சீமான் மீது வழக்கு!மின்னம்பலம் : தமிழ் மற்றும் தெலுங்கு
மொழிகளை பேசும் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் வகையில் பேசியதற்காக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தரமணியில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழ், தெலுங்கு பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பேசியுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தின் காணொளிக் காட்சியை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான ராஜ்குமார் யூட்யூப் இணையதளத்தில் கண்டுள்ளார். இரு மொழிகளை பேசும் மக்களிடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் சீமான் பேசியதாகக் கருதிய ராஜ்குமார் இவ்விவகாரம் குறித்து சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து தரமணி காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. சம்பந்தப்பட்ட யூட்யூப் காணொளியை பார்த்த தரமணி காவல்துறையினர் சட்ட நிபுணர்களின் கருத்துகளை கேட்டபிறகு இந்திய தண்டனை சட்டப் பிரிவு 153 (1) (ஏ)இன் கீழ் இரு தரப்பினரிடையே பகையை ஊக்குவிக்கும் வகையில் பேசியதற்காக நேற்று (டிசம்பர் 11) இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியது, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசியது, தவறான செய்திகளை பரப்பி அமைதியை சீர்குலைப்பது, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியது போன்றவற்றிற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் சீமான் மீது தரமணி காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: