செவ்வாய், 11 டிசம்பர், 2018

5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை

5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலைமாலைமலர் : ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
ஜெய்ப்பூர்: தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது. 119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.


இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலங்களிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கி உள்ளன.
> வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் வெளியான தகவலின்படி காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக 5 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

இதேபோல் ராஜஸ்தானில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. காலை நிலவரப்படி பாஜக 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 14 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12  தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 4 இடத்திலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. இந்த முன்னிலை நிலவரத்தில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மதியம் 12 மணியளவில் உள்ள முன்னிலை நிலவரத்தைப் பொருத்து வெற்றி தோல்வியை கணிக்க முடியும்

கருத்துகள் இல்லை: