சனி, 15 டிசம்பர், 2018

அண்ணா அறிவாலயம், ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் சோனியாகாந்தியின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


தினத்தந்தி: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த
தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலை திறப்பு விழா வருகிற 16-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. கலைஞர் சிலையை அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியாகாந்தி திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் 16-ந்தேதி மாலை சென்னை வருகை தருகிறார். பின்னர் விமானநிலையத்தில் இருந்து நேராக விழா நடைபெறும் இடத்துக்கு வருகிறார். சிலை திறப்பு விழா முடிந்தவுடன் மாலை 5.30 மணியளவில், சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் கலைஞர்  சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்திலும் சோனியாகாந்தி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.


சோனியாகாந்தி ‘இசட் பிளஸ்’ பாதுகாப்புக்குரியவர் என்பதாலும், 3 மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்பதாலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தமிழக போலீசார் தனி கவனம் செலுத்தி உள்ளனர். இந்தநிலையில் டெல்லியில் இருந்து சோனியாகாந்தியின் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் நேற்று விமானம் மூலம் சென்னை வந்தனர்.

பின்னர் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கருத்துகள் இல்லை: