வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

சிலை திருட்டு வழக்கில் ஐ ஜி பொன்மாணிக்கவேலுக்கு நெருக்கடி .. கவிதாவுக்கு ஆதரவாக நீதிமன்றம்...

ஆதாரங்கள் உள்ளன Kalai Mathi ONEINDIA TAMIL ON சரியான ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்தால் கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்-
சென்னை: இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை கைது செய்தது ஏன்? என சிலை தடுப்புப்பிரிவு அதிகாரி ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆதாரமின்றி கவிதாவை கைது செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
 ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு, டிஎஸ்பி வீரமணி தலைமையிலான குழு, சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை முறைகேடு பற்றி விசாரணை நடத்தியது. சில வாரங்களுக்கு முன்பு, ஐஐடி நிபுணர் குழு மூலம், சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இல்லை அதில், 5 புள்ளி 45 கிலோ அளவிற்கு தங்கம் இருந்திருக்க வேண்டிய நிலையில், பொட்டுத்தங்கம் கூட சிலையில் இல்லை என, ஐஐடி நிபுணர் குழு ஆய்வில் தெரியவந்தது.

 இந்த வழக்கில் சிலை வடிவமைப்பு குழுவின் தலைவராக இருந்து, தற்போது, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக உள்ள கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரி கவிதா ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
  அப்போது காவல்துறை சார்பில் ஐஜி பொன் மாணிக்கவேல் ஆஜராகி வாதாடினார். அவரிடம் இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் கவிதாவிடம் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்காமல் நேரடியாக கைது செய்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஐஜி பொன் மாணிக்கவேல், கவிதா முறைகேட்டில் ஈடுபட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்ததால் அவரை கைது செய்ததாக தெரிவித்தார். மேலும் மாஜிஸ்திரேட்டிடம் ஆதாரத்தை காட்டிவிட்டுதான் கவிதாவை கைது செய்ததாக ஐஜி பொன்மாணிக்கவேல் பதிலளித்தார்.


 இதையடுத்து கவிதாவை கைது செய்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் வரும் திங்கள் கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். தகுந்த ஆதாரம் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 இதைடுத்து தான் ஒரு பெண் என்பதால் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரி கவிதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து திங்கள் கிழமை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: