செவ்வாய், 31 ஜூலை, 2018

பாலியல் வன்கொடுமை வழக்குகள் இனி பெண் நீதிபதிகளே விசாரிக்கும் .. குற்றவியல் சட்ட ...

மின்னம்பலம்: பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இனி
பெண் நீதிபதிகளே விசாரிக்கும் வகையில் இந்தியக் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று (ஜூலை 30) நிறைவேற்றப்பட்டது.
இந்திய தண்டனை சட்டத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ள தண்டனைகளைத் திருத்தம் செய்யும் மசோதா மக்களவையில் நேற்று விவாதிக்கப்பட்டது. ஏற்கெனவே, 12 வயதுக்குட்பட்ட சிறார்களைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள் துறை இணை மந்திரி கிரெண் ரிஜிஜு, “பாலியல் வல்லுறவு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் இனி பெண் போலீஸ் அதிகாரிகளே வாக்குமூலம் வாங்கும் வகையிலும், பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் பெண் நீதிபதிகளே விசாரணை செய்யும் அம்சங்களும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது” எனக் கூறினார்.
விவாதங்களுக்குப் பின்னர் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

கருத்துகள் இல்லை: