திங்கள், 30 ஜூலை, 2018

மாணவர் விவரங்கள் திருட்டு: 3 பேர் கைது!

மாணவர் விவரங்கள் திருட்டு: 3 பேர் கைது!மின்னம்பலம் :தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதிய 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு தேர்வு இயக்ககத்தால் நடத்தப்படும் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் மற்றும் தனித் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள், அவர்களது பள்ளிகள் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு மாவட்ட மாணவர்களின் விவரங்கள் 2000 முதல் 5000 ரூபாய் என்கிற விலையில் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரிகள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை சாலிகிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் நிறுவனத்தின் (nari technologies) உரிமையாளர் பிரவீன் சொளத்ரி என்பவர் சென்னை அசோக் நகரில் செயல்பட்டுவரும் ஐடி அக்மேண்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த சுதாகர் உதவியோடு பத்துக்கும் மேற்பட்ட இணையதளங்களை வடிவமைத்து, பதிவேற்றம் செய்து, முறைகேடான முறையில் மாணவர்களின் விவரங்களை பணம் கொடுத்துப் பெற்றது தெரியவந்தது.

இணையதளங்களில் பதிவேற்றம் செய்து, அதை வேறு நபர்களுக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்து, பணம் சம்பாதித்தும் தெரியவந்தது. இதையடுத்து பிரவீன் சொளத்ரி, சுதாகர் ஆகியோரையும் மாணவர்களின் விவரங்களைப் பெற்று வணிக நோக்கில் பயன்படுத்தி வந்த வெங்கட்ராவ் என்பவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அவர்கள் மூன்று பேரும் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: