சனி, 21 ஜூலை, 2018

ஸ்ரீ ரெட்டி திரையுலகில் உள்ள பெண்களைப் பற்றி தவறாக நினைத்துள்ளார்” என்று நடிகை கஸ்தூரி

ஸ்ரீ ரெட்டியை விமர்சிக்கும் கஸ்தூரிமின்னம்பலம் : ஸ்ரீ ரெட்டி திரையுலகில் உள்ள ஆண்களை அல்ல, பெண்களைப் பற்றி தவறாக நினைத்துள்ளார்” என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாகத் தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு மற்றும் போராட்டங்களில் தென் இந்திய சினிமாவே சிக்கி இருக்கிறது. இனி வரும் தலைமுறை நடிகைகளுக்கு இது போன்று நிகழக்கூடாது என்ற நோக்கில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இது குறித்த அவரது நேர்காணலை நமது மின்னம்பலத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்து தனது கருத்தை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “இன்றுதான் நான் ஸ்ரீ ரெட்டியின் இணையதள பேட்டியை பார்த்தேன். சினிமா ஆசை காட்டி தங்கள் ஈனபுத்திக்கு பெண்களை இரையாக்கிக்கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கபோட்டுக்கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார்.
இவர் கூடவா என்று சிலர் பெயரை கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது, ஆனால் அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன.
ஸ்ரீ ரெட்டியின் நிலை நமக்கு உணர்த்துவது இதைத்தான் - லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம். கொடுப்பதே லஞ்சம், இதில் கொடுத்த லஞ்சத்துக்கு வாங்கியவர்கள் உண்மையாக இல்லை என்று பிறகு கூப்பாடு போடுவது .... கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் இல்லையா? அதிலும், ஒரு ஊரில் பல பேரிடம் ஏமாந்து, பிறகு அடுத்த ஊரிலும் அதே தவற்றையே மறுபடி மறுபடி செய்வதற்கு பெயர் என்ன?
குறுக்குவழி ஏமாற்றம் நிறைந்தது. அதில் பலமுறை பயணித்திருக்கிறார் இவர். ஒருமுறைகூட அந்த வழி பயன்தரவில்லை. அப்புறமும் தன் அணுகுமுறை தவறு என்று ஏன் இந்தப்பெண் உணரவில்லை? அப்படியென்றால், சினிமாவுக்கு தேவையான தகுதியோ திறமையோ தனக்கு இல்லை, சமரசங்கள் செய்தாலாவது வாய்ப்பு கிட்டாதா என்று அந்த பெண் யோசித்ததாகவே தெரிகிறது. தகுதிக்கு மேல் பேராசைப்பட, சமரசம் செய்யக்கூட ஒரு மனநிலை வேண்டும்.... எல்லோருக்கும் அது கைகூடாது. திருடி தின்பது சுலபமென்றால் எல்லோரும் திருடர்களாகத்தான் இருப்பார்கள். நேர்வழிதான் கடைசியில் நிலைக்கும் என்பதை பட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை. நம் முன்னோர்கள் நமக்கு அதை சொல்லித்தந்து போயிருக்கிறார்கள். அந்த ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் ஜாக்பாட் அடிக்காமல் போகலாம், ஆனால் என்றும் சீராக, இழப்பில்லாமல் செல்லும்.
ஸ்ரீ ரெட்டி செய்த மிக பெரிய தவறு என்ன என்று அவர் இன்று வரை உணர்ந்தாரா தெரியவில்லை. அவர் சினிமாவில் உள்ள ஆண்களை தவறாக எடைபோட்டு ஏமாந்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறார். இல்லை. அவர்,தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான் . எல்லா நடிகைகளும் படுத்துத்தான் சினிமாவில் முன்னேறியுள்ளார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார். சான்ஸ் கிடைத்திருந்தால் யார் முகத்திரையையும் கிழித்திருக்க மாட்டார்.சினிமாவை மிக தவறாக எடைபோட்டதன் விளைவையே இப்பொழுது சந்தித்துக்கொண்டிருக்கிறார் .
படுத்தால் சான்ஸ் கிடைக்கும் என்று அவர் நினைத்தது மிக பெரிய முட்டாள்தனம் மட்டுமல்ல, திறமையையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் மூலதனமாக வைத்து முன்னேறிய என்னை போன்ற நடிகைகளுக்கு எவ்வளவு அவதூறு ! சினிமாவில் நிறைய நல்லவர்கள் உள்ளார்கள். அவர்கள் யாரையும் இப்பெண் சந்திக்கவேயில்லையா?
இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன். நான் ஒரு பெரிய நடிகருடன் கதாநாயகியாக நடித்தபடம் . அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு ; ஜனத்திரள் மிகுந்த காட்சி. அங்கே, ஒரு டீனேஜ் பெண், ஸ்டைலான நாகரிகமான அழகிய பெண், நடிகரை சந்தித்து வாய்ப்பு கேட்கிறது. வேறு பக்கம் அமர்ந்திருந்த என் காதில் அவர்கள் பேச்சு தெளிவாக கேட்டது.
பெண்: "சார் நான் உங்க பெரிய fan . உங்களோட தனியா பேச முடியுமா"
நடிகர்: தனியாவா? இங்கேயே சொல்லுமா ! "
பெண்: "உங்க கூட நடிக்கணும் சார் ! அதுக்கு நான் என்ன வேணா பண்ண தயாரா இருக்கேன் சார்! I am ready for anything"
நடிகருக்கு சுர்ரென்று கோபம் வந்து விட்டது. எனினும் குரலை உயர்த்தாமல் மிக கடுமையான தொனியில் சொன்னார் - "பைத்தியமா உனக்கு? படிக்கிற பொண்ணு பேசுற பேச்சா இது? என்னை என்னானு நினைச்சு பேசுறே? என்கிட்டே சொன்ன மாதிரி வேற யாருகிட்டயும் போய் பேசிடாத. Idiot. உங்க அப்பா அம்மாவுக்கு தெரியுமா உன் சினிமா ஆசை? You are a child. You are not fit for cinema. மொதல்ல ஊரு போய் சேரு. படிக்கிற வேலைய பாரு. Dont ever think like this again. "
இன்றும் எனக்கு அந்த ஹீரோவின் சொற்கள் நன்றாக நினைவுள்ளது. இத்தனைக்கும் அந்த ஹீரோ ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியெல்லாம் இல்லை. தொடர்ச்சியாக extramarital affairs இல் மாட்டியவர்தான். But யாரையும் ஏமாற்றுமளவுக்கு cheap character இல்லை.
எதற்கு சொல்கிறேன் என்றால், சினிமாவில் எல்லோருமே ஏமாற்றுப்பேர்வழிகள் இல்லை. இன்னும் சொல்ல போனால், weak characters கூட எல்லோரிடமும் வம்புக்கு போக மாட்டார்கள். நாம் நடந்துகொள்ளும் முறையை வைத்துத்தான் நம்மிடம் எதிராளி நடந்துகொள்வார்” என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: