திங்கள், 16 ஜூலை, 2018

மேன்மைமிகு ஜியோ இன்ஸ்டிட்யூட்

savukkuonline.com : வெகு சீக்கிரம் அமையவிருக்கும் ஜியோ இன்ஸ்டிட்யூட்டை (Jio Institute) நாட்டிலுள்ள ஆறு மேன்மைமிகு நிலையங்களுள் (Institutes of Eminence – IOE) ஒன்றாக அங்கீகரிக்குமாறு இதற்கென அமைக்கப்பட்ட அரசுக் குழுவினரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தலைமையிலான அணி ஒப்புக்கொள்ள த்துள்ளது
முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகச் செயலாளரும் அம்பானியில் கல்வி ஆலோசகருமான வினய்ஷீல் ஓபராய் இந்த அணியில் இடம் பெற்றிருந்தார். முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் என். கோபாலசுவாமி தலைமையிலான அதிகாரம் பெற்ற வல்லுநர் குழுவின் முன் ப்ரஸண்டேஷனைத் தந்த 8-பேர் அடங்கிய ஜீயோ குழுவில் ஓபராயும் இருந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓபராய் தம் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் சில மாதங்கள் கழித்துத்தான் – அதாவது 2017 செப்டம்பரில்தான் – ‘மேன்மைமிகு நிறுவனம்’ பற்றிய கோட்பாடுகள் அரசால் வெளியிடப்பட்டன. இதற்கெனத் தனியான வல்லுநர் குழுவானது (EEC) இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டபின் அக்குழு ஏப்ரல் மாதம் முதல் ப்ரஸண்டேஷனை கேட்கத் துவங்கியது.
இதுபற்றி விஷயம் தெரிந்தவர்களைக் கேட்டபோது, நிறுவனத்தின் அனைத்து அம்சங்கள் பற்றியும் மிக நன்றாகத் தெரிந்து வைத்திருந்த அம்பானி வல்லுநர் குழுவின் அனைத்துக் கேள்விகளுக்கும் தானே பதிலளித்ததாகத் தெரிவித்தனர். அமையவிருக்கும் பல்கலைக்கழகமானது அம்பானியின் ‘கனவுத் திட்டங்களுள்’ ஒன்றாக இருக்குமாம். இதைப் போன்ற வரைவுத் திட்டமொன்றை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடமும் அவர் விளக்கியிருந்தாராம்.
‘மேன்மைமிகு நிறுவனம்’ (IoE) திட்டம் 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஓபராய் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் உயர்கல்வித் துறையின் செயலாளராக இருந்தார். ‘உலகத் தர நிறுவனங்கள் திட்டம்’ (World Class Institutes programme) என அப்போது அழைக்கப்பட்ட இத்திட்ட விவரங்கள் 2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அறிவிக்கப்பட்டன.
2016ஆம் ஆண்டு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் (Prime Minister’s Office) இடையே திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் பலமுறை விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் தரப்பட்டன.
ஆயினும், ஜியோ குழுவினர் தங்களது திட்டத்தை விளக்கிக் கூறுவதற்கான (Presentation) சரியான தேதியை வல்லுநர் குழுவினரால் தர முடியவில்லை. விதிகளின்படி, இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஓராண்டு கால இடைவெளிக்குப் பின்னர்தான் (cooling-off period) வர்த்தக ரீதியான வேலை வாய்ப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியும். ரிலையன்ஸ் நிறுவனத்துடனான தனது பணிகளை 2018 மார்ச்சில் ஆரம்பித்ததன் மூலம் 1979ஆம் ஆண்டு பேட்ச் IAS அதிகாரியான ஓபராய் இந்நிபந்தனையை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துவிட்டதாகக் கருதப்படுகிறார். ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழின் கேள்விகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் பதிலளிக்கவில்லை. ஜியோ குழுவினருடான தனது தொடர்பைப் பற்றிய தொலைபேசி அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் ஓபராயும் பதிலளிக்கவில்லை.
மஹாராஷ்டிர மாநிலம் கர்ஜத்தில் 800 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள ஜியோ நிறுவனத்திற்காக ‘கிரீன்ஃபீல்ட்’ பிரிவின் கீழ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விண்ணப்பித்திருந்தது; இப்பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டுமே.
வேதாந்தா குழுமம், பாரதி ஏர்டெல் மற்றும் க்ரியா ஃபவுண்டேஷன் போன்ற நிறுவனங்களின் திட்டங்களும் இப்பிரிவில் வல்லுநர் குழுவின் பார்வைக்காக இடம்பெற்றிருந்தன.  ‘எகனாமிக்ஸ் டைம்ஸ்’ பார்க்க நேரிட்ட ஜியோவின் ப்ரஸண்டேஷன் இந்தியாவின் முக்கியத் துறைகளில் ‘மாற்றத்திற்கான தாக்கத்தை’ குவிமையம் செய்த ரிலையன்ஸ் குழுமம், அடுத்த 5 ஆண்டுகளில் ஆராய்ச்சிக்காக ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது பற்றியும் உலகின் முதல் 50 பல்கலைக்கழகங்களுடன் கூட்டுறவு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது பற்றியும் விளக்கியது.
கல்வித் துறையில் தமது அனுபவம் பற்றி விளக்கிய ரிலையன்ஸ் குழுமம் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளி, 13,000 மாணவர்கள் கல்வி கற்றுவரும் 13 ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் பள்ளிகள், திருபாய் அம்பானி இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் & கம்யூனிகேஷன் டெக்னாலஜி, பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரிலுள்ள இந்திய மேலண்மை நிறுவனத்துடன் (Indian Institute of Management) முகேஷ் அம்பானிக்கு இருக்கும் தொடர்பைப் பற்றியும் விரிவாகக் கூறியது (முகேஷ் முன்பு IIMஇன் சேர்மனாகவும் பணியாற்றியிருக்கிறார்).
எகனாமிக் டைம்ஸின் மதிப்பீட்டின்படி 11 ‘க்ரீன்ஃபீல்ட்’ திட்டங்களைப் பரிசீலனை செய்த வல்லுநர் குழு அவற்றில் ‘சில திட்டங்களே’ புதுமையாக இருந்ததாகக் கருதியது. சில நிறுவனங்கள் ‘மேன்மைமிகு நிறுவன’ அந்தஸ்தைப் பெற வேண்டியே ஒப்புக்குத் திட்டங்களை அனுப்பியிருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. பிற நிறுவனங்களின் நிதியாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது; ஒரு நிறுவனம் தான் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்போவதாகக் கூறியிருந்த இடம் பல்லாண்டுகளாக நீதிமன்ற வழக்கில் மாட்டிக்கொண்டுள்ள இடமாகும்.
“அனைத்துத் திட்டங்களிலும், அருமையாக உருவாக்கப்பட்டு, நிறுவனக் கட்டுமானத்தின் பலதலைமுறைப் பார்வையை நன்றாக ப்ரஸண்ட் செய்ததுடன் கட்டுமானத்துறையில் தன் கடந்தகால சாதனைகளைச் சுட்டிக்காட்டி, புதிய முயற்சிகளை அவ்வப்பொது நேரம்தவறாமல் எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட ஒரே ஒரு திட்டம்தான் மிக நன்றாக இருந்தது,” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இத்திட்டம் புதிய நிறுவனம் பற்றி நம்பிக்கையூட்டுவதாக இருப்பதுடன் அடுத்த 10 ஆண்டுகளில் உலகத்தர அளவில் 500 இடங்களுக்குள் வருவதாகவும் வல்லுநர் குழுவுக்குத் தெரிவதால் இத்திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது”…..
க்ரீன்ஃபீல்ட் நிறுவனத்தை மதிப்பீடு செய்ய சாதனை அலகு ஏதுமில்லை என்பதால் அந்நிறுவனம் தரும் தகவல்கள், அதன் நிதியாதாரம், நிதி ஈடுபாடு, புதிய திட்டங்களுக்கான கட்டமைப்பு, அதன் தலைவரின் புகழ் ஆகியவற்றையும் திட்டத்தின் ‘உறுதித்தன்மையையும்’ அதன் ‘நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை’ நிறுவனம் அடையும் வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்பட்தாக வல்லுநர் குழு தெரிவித்தது.
இத்திட்டத்தின் கீழ் பல்லாண்டுகள் வரை நிலைத்து நின்று ‘மேன்மைமிகு நிறுவனங்களாகத்’ தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு நிறுவனங்கள் பின்வருமாறு:
  • ஐ.ஐ.டி., தில்லி;
  • ஐ.ஐ.டி., மும்பை;
  • இந்திய அறிவியல் கழகம், பெங்களூர்;
  • பி.ஐ.டி.எஸ்., பிலானி; மற்றும்
  • மணிபால் அகாடமி ஆஃப் ஹயர் எஜுகேஷன்.
நன்றி: தி எகனாமிக் டைம்ஸ்
தமிழில்: சுப்ரபாலா

கருத்துகள் இல்லை: