ஞாயிறு, 15 ஜூலை, 2018

ரஜினிகாந்த் :எட்டு வழி பசுமைச் சாலை எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை

/tamil.thehindu.com :சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டம்
போன்ற பெரிய திட்டங்கள் வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் நாடு முன்னேறும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது: ''காமராஜர் பிறந்த நாளான இன்று அவரை நினைவுபடுத்திக்கொண்டு, அவரைப் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆசை. என்னுடைய ஆசையும் கூட.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி சிறப்பாக உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரது வேலையை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார்.
காந்தி, காமராஜர் கொள்கைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், என்னோடு வந்து இணையத் தயாராக இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டப்பேரவைத் தேர்தலையும் ஒரேநேரத்தில் நடத்துவது நல்லதுதான். அதனால் நேரம், பணம் மீதமாகும். அதனால் இரண்டு தேர்தல்களும் ஒரேநேரத்தில் நடத்துவது வரவேற்கத்தக்கது. எல்லா அரசியல் கட்சிகளும் அதன் தீவிரத்தன்மையை உணர்ந்து எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
சேலம் – சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் நாடு முன்னேறும். அந்த மாதிரி திட்டங்கள் வந்தால்தான் தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பாதிப்பு ஏற்படும். அவர்கள் மனம் மகிழ்ச்சியடையும் அளவுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். முடிந்தவரை விவசாய விளைநிலங்கள் பாதிக்காத அளவுக்குச் செய்தால் மிகவும் நல்லது.''
இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: