புதன், 18 ஜூலை, 2018

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் முடிவு

தினத்தந்தி : புதுடெல்லி, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்
பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. இந்த நிலையில் மழைக் கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று (புதன்கிழமை) தொடங் குகிறது. அடுத்த மாதம் 10-ந்தேதி முடிகிறது. 18 நாட்கள் கூட்டம் நடைபெறும்.‘முத்தலாக்’ உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு ஆர்வம் கொண்டு உள்ளது. மேலும் புதிதாக 18 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் வரிந்து கட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், கூட்டம் அமைதியாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 


இது குறித்து டெல்லியில் மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: 12 எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தின. அக்கூட்டத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு தேவையான பணிகளில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும். இதுதவிர, பசுப் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்படும் தாக்குதல்கள், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், எஸ்.சி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் முயற்சிகள் ஆகியவற்றையும் எதிர்க்கட்சிகள் எழுப்பும்.

பணமதிப்பு நடவடிக்கையின்போது மத்திய அரசு ஊழல் புரிந்துள்ளது. பணமதிப்பு காலத்தில் சுமார் 5 நாள்களில் மட்டும் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.750 கோடி மதிப்புக்கு செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இது எப்படி நடந்தது என்பது குறித்து, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வலியுறுத்துவோம்”என்றார். 

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக, அந்த நோட்டீஸ்கள் எடுத்து கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை தெலுங்கு தேசம் கட்சி அளித்துள்ளது. இதற்கு பிற எதிர்க்கட்சிகளின் ஆதரவையும், பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவையும் தெலுங்கு தேசம் கோரியுள்ளது. ஆனால், இதற்கு ஆதரவு அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: