ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

தமிழ்நாடு இல்லம்! டெல்லி பல்டி .. பெயர் மாற்றம் இல்லை .... கடும் எதிர்ப்பினால் பின்வாங்கிய பாதுஷாக்கள்

பணிந்தது டெல்லி!மின்னம்பலம் :டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்துக்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தில் ‘வைகை தமிழ்நாடு இல்லம்’, ‘பொதிகை தமிழ்நாடு இல்லம்’ என்று பெயர் மாற்றி தமிழக அரசு மீண்டும் நேற்று (பிப்ரவரி 3) புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் இருக்கும் தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு இல்லத்துக்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை நீக்கிவிட்டு ‘வைகை தமிழ் இல்லம்’ என்றும் ‘பொதிகை தமிழ் இல்லம்’ என்றும் பெயர் வைத்து கடந்த ஜனவரி 29ஆம் தேதியன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு உடனடியாக அரசாணையைத் திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தின.
ஆனால், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர், ‘பெயர் மாற்றம் செய்யப்பட்டது சரியானதுதான். அதில் எந்த தவறும் இல்லை’ என்றும், ‘அதுவும் தமிழ் பெயர்தான்’ என்றும் ஆதரித்துப் பேசியிருந்தனர். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 3) தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையில் ‘வைகை தமிழ் இல்லம்’, ‘பொதிகை தமிழ் இல்லம்’ என்பதை திருத்தி ‘வைகை தமிழ்நாடு இல்லம்’, ‘பொதிகை தமிழ்நாடு இல்லம்’ என்று ‘தமிழ்நாடு’ என்பதை சேர்த்துத் திருத்தப்பட்ட அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையரின் கருத்துக்கிணங்க தமிழ்நாடு என்று மீண்டும் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஒவ்வோர் அறிவிப்புக்குப் பின்னாலும் மத்திய அரசின் அழுத்தம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு பெயர் நீக்க விவகாரத்தில் தமிழகத்திலிருந்து கிளம்பிய கடும் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு பணிந்துள்ளதாகவே இதை பார்க்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்.

கருத்துகள் இல்லை: