சனி, 10 பிப்ரவரி, 2018

பரிதி இளம்வழுதியின் எழுச்சியும் வீழ்ச்சியும் . பதில் தெரியாத கேள்விகள் !

Ravi Raj :    அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போனதடி ..
ஒரு தலித் இளைஞன் மீது திமுக என்ற கட்சி எவ்வளவு அன்பு வைத்திருந்தது என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் பரிதி இளம்வழுதியைத்தான் உதாரணம் காட்டி சொல்ல வேண்டும். எழும்பூர் தொகுதியை பரிதி இளம்வழுதிக்கே திமுக தாரை வார்த்துவிட்டது என்று சொல்லும்படிக்கு அந்த தொகுதியிலிருந்து மட்டும் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வென்றார் பரிதி . முதன்முதலில் திமுக இவரை வேட்பாளராக அறிவித்தபோது பரிதிக்கு வெறும் 25வயது தான் . எம்எல்ஏவாக , அமைச்சராக , திமுகவின் துணை பொது செயலாளராக என படிப்படியாக வளர்ந்தார் தான். 2011 தேர்தலில் இவரை எதிர்த்து நின்ற ஜான் பாண்டியனால் , எழும்பூரில் ஓட ஓட விரட்டப்பட்டு தாக்கப்பட்டார் பரிதி . ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக நின்று , பரிதியை ஜெயா கைது செய்தார் என்பது கூட சோகமான செய்தி அல்ல , அதே ஜெயாவிடம் பின்னாளில் போய் சேர்ந்தார் பரிதி என்பதும் , பரிதி இருந்த அதே அதிமுகவோடு பின்னாளில் ஜான் பாண்டியன் கூட்டணியில் சேர்ந்தார் என்பதும்தான் பெரும் சோகம் .

திமுகவில் இருந்தபோது பேண்ட் போட்டுக்கொண்டு தான் சட்டமன்றம் போவார் பரிதி. அவ்வளவு கம்பீரமாக , சுதந்திரமாக இருந்தவர் , "தன் தலைவன் சடலமாக இருக்கும்போது யாராவது கவிதை எழுதிட்டு போய் ரேடியோவில் வாசிப்பார்களா" என கலைஞரையே கிண்டல் செய்து பேசி அதிமுக மேடைகளில் கைதட்டல் வாங்கினார். "காலமெல்லாம் அம்மாவின் காலடியில் இருக்க வந்தவன். அம்மாவை பிரதமராக்க என் உடல் பொருள் ஆவியை கொடுக்க வந்திருக்கிறேன்" என்றெல்லாம் சென்டிமெண்டாக பேசி கரைந்து நின்றார் .ஜெயா இறந்ததும் சிலர் கண்ணீருடன் போனபோது பரிதி மட்டும் நம்ம பன்னீருடன் போனார் . "சிவாஜியை விட சிறந்த நடிகர் பன்னீர்" என கொந்தளித்தபடி தினகரன் அணிக்கு சென்றார். இப்போது அதிமுகவிலிருந்து அவரை தள்ளி வைத்துவிட்டார்கள் .
திமுக ராபின்சன் பூங்காவில் பிறந்ததைப்போல, திமுகவின் இளைஞரணி பிறந்தது மதுரை ஜான்சிராணி பூங்காவில் தான் . அன்றைக்கு இளைஞரணியின் அமைப்புக்குழு அறிவிக்கப்பட்டபோது , ஸ்டாலின், திருச்சி சிவா , பரிதி இளம்வழுதி என மூன்றாவது பெயராக இவர் பெயர் தான் அறிவிக்கப்பட்டது . இன்றைக்கு ஸ்டாலின் செயல் தலைவராகிவிட்டார், திருச்சி சிவா ராஜயசபாவை நடத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் . ஆனால் பரிதி மட்டும் சுருதி குறைந்து , தகுதி இழந்து, கண்டவர் காலில் மிதிபடுகிறார் என்பது காலம் செய்த கோலம்.
இவரை 28 ஆண்டு காலம் எம்எல்ஏவாக , அமைச்சராக , திமுகவின் துணை பொது செயலாளராக வைத்து அழகு பார்த்து, வீர அபிமன்யு , இந்திரஜித் என்றெல்லாம் புகழ்ந்து உச்சி மோர்ந்த கலைஞருக்கு , பரிதி இப்படி சீரழிவது தெரியாமல் இருப்பதே நலம். இல்லையெனில் , தன்னிடம் இருக்கும்போது ஜல்லிக்கட்டு காளையாக இருந்த பரிதி இப்போது அடிமாடாக போனதை நினைத்து அவர் மனம் நொந்து தான் போவார்.

கருத்துகள் இல்லை: