புதன், 7 பிப்ரவரி, 2018

பாஜக கூட்டணியிலிருந்து மேலும் 4 கட்சிகள் வெளியேற முடிவு... சிவசேனா, தெலுங்குதேசம் வரிசையில்


தீக்கதிர் :பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, மாநிலக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றன. அண்மை யில் சிவசேனா கட்சி, பாஜக உடனான உறவை முறிப்பதாக அறிவித்தது. தெலுங்கு தேசமும் கூட்டணியை முறிக்க முடிவு செய்தது. அதனை அறிவிக்க இருந்த நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா, சந்திரபாபு நாயுடுவிடம் கெஞ்சிக் கூத்தாடி, கூட்டணி முறிவை தள்ளிப்போட்டுள்ளார்.
இதனிடையே, சிரோமணி அகாலிதளம் உட்பட மேலும் 4 கட்சிகள் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, அகாலி தளம் எம்.பி. பிரேம்சிங் சந்துமஜ்ரா, “வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எங்களுக்கு கிடைத்த மரியாதை இப்போது தரப்படுவதில்லை; எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாகக் கூட வாஜ்பாய் நியமித்தார். சிறுபான்மையினர் ஆணையத் தலைவராகவும் நியமித்தார்; ஆனால் இப்போது எதுவும் எங்களுக்கு தரப்படவில்லை;
கூட்டணி கட்சி என்பதற்கான
மரியாதையும் கிடைப்பது
இல்லை” என குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
பீகாரில் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாவின் ராஷ்டிரிய லோக்சமதா கட்சி, பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் ‘ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா’ ஆகியவையும் பாஜக-வுக்கு எதிராககிளம்பியுள்ளன. பீகார் தேர்தலில் கணிசமான இடங்களை தங்களுக்கு ஒதுக்காவிட்டால் கூட்டணியை முறிப்போம் என இந்த கட்சிகள் அறிவித்துள்ளன. இது பாஜக-வை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
—தீக்கதிர்

கருத்துகள் இல்லை: