வியாழன், 8 பிப்ரவரி, 2018

பிரபாகரனின் மனைவிக்கு என்ன நடந்தது என்பது யாருக்காவது தெரியுமா?.. முன்னாள் இராணுவ மேஜர் ஹசித சிரிவர்தன

ilakkiyainfo.com : :விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டதாகவும், புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டு வருகின்றது எனினும் யுத்தம் இன்றுவரை முற்றுபெறவில்லை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது என முன்னாள் இராணுவ மேஜர் ஹசித சிரிவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,
மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவராகவும், நாட்டைக் காப்பாற்றியவராகவும் கூறிக்கொண்டு வருகின்றார். ஆனால் அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் அல்ல. யுத்தம் நடைபெற்ற காலத்தில் தலைவராக இருந்த ஒருவர் மாத்திரமே.
 விடுதலைப் புலிகளை வளர்த்து நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றது மஹிந்த மற்றும் ஐக்கிய தேசிய கட்சியே என்பது யாருக்கும் தெரியவில்லை. புலிகள் எப்போதுமே மஹிந்தவையும், ஐக்கிய தேசிய கட்சியையும் தாக்கியதில்லை. புலிகளுடன் மஹிந்த கொண்டிருந்த உறவின் காரணமாகவே அவர்கள் மஹிந்த மீது தாக்குதல் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை.
கொழும்பிற்கு மஹிந்தவின் வாகனங்கள் மூலமாகவே குண்டுகள் கொண்டு வரப்பட்டன. புலிகளுடன் இணைந்து கொண்டு நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டு சென்றதில் மஹிந்தவிற்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெரும் பங்களிப்பு உண்டு.
நாட்டில் நடந்த யுத்தம் தொடர்பில் பல இரகசியங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. உதாரணமாக பிரபாகரனின் மனைவிக்கு என்ன நடந்தது என்பது யாருக்காவது தெரியுமா? யுத்தம் தொடர்பில் கருத்துகளைக் கூறும் கமால் குணரத்ன இதற்கான பதிலைக் கூறவேண்டும். ஆனால் எனக்கு தெரியும், அவருக்கு என்ன நடந்தது என்பதும் வெளிப்படுத்தப்படும்.
அது மட்டுமா அப்போதைய காலத்தில் 48000 இராணுவ வீரர்களை நீக்கிவிட்டு சர்வாதிகார ஆட்சி ஒன்றினை அமைக்கவும், இராணுவத்தை தனக்கு கீழ் வைக்கவும் கோட்டாபய திட்டமிட்டு வந்தார் ஆனால் அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை.
யுத்தத்தை முடிவு செய்து வைத்ததாக மஹிந்த கூறிக்கொண்டு வருகின்றார் ஆனால் யுத்தகாலத்தில் நாட்டை விட்டு தப்பி ஓடிய ஒருவரே மஹிந்த என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.
யுத்தம் தற்போதும் முடிவு பெற்று விடவில்லை இதன் பின்னால் மிகப்பெரிய இரகசியங்கள் இருக்கின்றன. திரைக்கு பின்னால் இருந்து மிகப்பெரிய சதிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த உண்மைகள் எனக்கு தெரிந்த காரணத்தினாலே 2 வருடங்கள் என்னை இரகசியமாக சிறை வைத்திருந்தார்கள். நாட்டு மக்கள் உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஹசித சிரிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.  

கருத்துகள் இல்லை: