வியாழன், 8 பிப்ரவரி, 2018

ராகுல் : சொற்பொழிவு வேண்டாம் 3 கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள் ,,

மாலைமலர் :அடிப்படையான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் ஆர்வம் காட்டாமல் நீண்ட உரையாற்றுவதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார். ‘சொற்பொழிவு வேண்டாம், 3 கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள் பிரதமரே’: ராகுல் காந்தி புதுடெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது நேற்று பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, அதிக நேரம் காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதற்கே எடுத்துக்கொண்டார். இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் தக்க பதிலடி அளிக்கப்பட்டது. நாட்டில் முக்கிய பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி பேச மறுப்பது ஏன்? என எதிர்க்கட்சிகள் கூறின.
 இதற்கிடையே, ரபேல் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது தொடர்பாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். “ரபேல் விமானத்தின் விலை உள்பட அனைத்து விவகாரங்களும் வெளிப்படையானது என பாதுகாப்பு மந்திரி முன்னர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என அதனை மறைக்கிறார்” என ராகுல் காந்தி கூறினார். மேலும், “நான் பிரதமரை மூன்று கேள்விகள் கேட்டுக்கொள்கிறேன். ரபேல் விமானத்தின் விலை என்ன?, அதன் பாதுகாப்பு குறித்து கேபினட் கமிட்டியிடம் ஆலோசிக்கப்பட்டதா?, இந்த ஒப்பந்தம் ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் லிமிட்டட் நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டு தொழிலதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்?” என ராகுல் காந்தி கேட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: