திங்கள், 9 அக்டோபர், 2017

செவிலியர்களான துப்புரவுப் பணியாளர்கள்! ம்ம்ம் பதவி உயர்வு?

செவிலியர்களான துப்புரவுப் பணியாளர்கள்!
மின்னம்பலம் : மதுரை ராஜாஜி மருத்துவமனையில் செவிலியர்களின் பணிகளைத் துப்புரவுப் பணியாளர்கள் மேற்கொண்டுவருவதாகப் புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்ற நிலையில், அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் மக்கள் அவதிக்கு ஆளாகிவருகின்றனர். மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு டெங்கு உட்படப் பல நோய்களுக்கு நிவாரணம் பெற தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகிறார்கள். நோயாளிகளைக் கவனிக்கப் போதிய மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் இல்லாத நிலை நீடிக்கிறது. செவிலியர்களின் பற்றாக்குறை காரணமாக அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளைத் துப்புரவு பணியாளர்கள் செய்து வரும் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை நிர்வாகம்தான் துப்புரவுப் பணியாளர்களை மருத்துவப் பணிகளை செய்ய வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் செவிலியர்கள் பற்றாக்குறையால், இங்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது தெரியவந்ததுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி, முறையான பயிற்சி எடுத்தவர்களே, மருத்துவரின் ஆலோசனையின்படி நோயாளிகளுக்கு மருத்துவச் சேவையை அளிக்க வேண்டும் என்ற நிலையில், துப்புரவுப் பணியாளரை சலைன் ஏற்றுவது முதலான பணிகளைச் செய்ய எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: