புதன், 11 அக்டோபர், 2017

தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்வு - முதல்வர் அறிவிப்பு

மாலைமலர்:   ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்வு - முதல்வர் அறிவிப்பு சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து ஏழாவது ஊதியக்குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கியது. இன்று கூடிய தமிழக அமைச்சரவையில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறைந்த பட்ச ஊதியம் ரூ.6100-ல் இருந்து ரூ.15700 ஆக அதிகரிக்கப்படுகிறது. அதிகபட்ச ஊதியம் ரூ.77 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. மேலும், முந்தய ஊதியக்குழுக்களால் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு படிகள் உயர்த்தப்பட்டதை விட இம்முறை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதேபோல், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850 என்றும் அதிகபட்ச ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு இம்மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிப்பின் மூலம் எட்டு லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்றும், இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவாகும் என்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: