வெள்ளி, 13 அக்டோபர், 2017

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு!

மின்னம்பலம் :முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சேர்க்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
தமிழ்நாட்டில் ஏழை மக்கள், உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்யும் திட்டமாகும்.

டெங்கு
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களை இழுத்தடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களும் நோய் முற்றினால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையளிக்க வேண்டும், முதல்வர் மருத்துவ காப்பீட்டில் டெங்கு சிகிச்சையைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, “டெங்குவிற்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை, நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ‘டெங்கு’ ஏன் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.
தமிழக அரசு பதில்
இந்த மனு இன்று (அக். 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும். அக்டோபர் 9ஆம் தேதி வரை 11,944 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் உயிரிழந்துள்ளனர். கொசுகளைக் கட்டுப்படுத்த ரூ.13.95 கோடி செலவில் பணிகள் நடைபெற்றுவருகின்றன. டெங்குவைக் கண்டறிய 125 சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிலவேம்பு குடிநீருக்காக 2000 கிலோ பொடி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.23.50 கோடி செலவில் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் 837 இரத்த அணு சோதனைக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. டெங்கு கொசுவைப் பரப்பக் காரணமாக இருப்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகம் இருப்பதாகக் கூறி யாரையும் திருப்பி அனுப்பவில்லை” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான தொகையை திருப்பிக் கொடுக்கும்படி மனுதாரர் தரப்பு கேட்டுள்ளது. ஆனால் அவ்வாறு கொடுக்க முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: