சனி, 14 அக்டோபர், 2017

வெடிகளைக் குறைப்போம்: செடிகளை நடுவோம்!

மின்னம்பலம் :தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ‘வெடிகளைக் குறைப்போம், செடிகளை நடுவோம்’ என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் திருச்சியைச் சேர்ந்த தண்ணீர் என்னும் சமுக அமைப்பு நடத்திவருகிறது.
வருகின்ற 18ஆம் தேதி தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தீபாவளியன்று வெடிவெடித்து கொண்டாடி மகிழலாம் என்ற உற்சாகத்தோடு இருப்பார்கள்.
தீபாவளியை வெடி வெடித்துக் கொண்டாடும்போது, சுற்றுச்சூழல் 30 சதவீதம் கூடுதலாக மாசடைகிறது. இதனால் தீபாவளியன்று வெடிகளைக் குறைத்து, நகர் முழுவதும் செடிகளை நடுவோம் என்று, திருச்சியில் இயங்கிவரும் தண்ணீர் சமூக அமைப்பினர், மாநகரில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலையங்கள், பள்ளிகள் என பல்வேறு இடங்களிலும் நாடகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.

இவர்கள் நடத்திவரும் விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கும் இத்தகையகருத்து சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் திருச்சி செந்தணீர்புரத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் மாணவர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு நாடகத்தை நடித்துக் காட்டினர். நாடகத்தைக் கண்டுகளித்த மாணவர்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வெடிகளை வெடிக்காமல் செடிகளை வளர்ப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.
தீபாவளி நெருங்கக்கூடிய நேரத்தில் நடத்தப்படும் இத்தகைய வெடிகளை வெடிக்காமல் செடிகளை நட வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகரின் பல பகுதிகளில் இவர்கள் நடத்தும் விழிப்புணர்வு நாடகம் மக்களை பெருமளவில் கவர்ந்துவருகிறது

கருத்துகள் இல்லை: