சனி, 31 டிசம்பர், 2016

அதிமுக பொதுசெயலாளர் வி.கே.சசிகலா வாகன அணிவகுப்பு பின்தொடர ஜெயலலிதா நினைவிடத்துக்கு ..

பொது செயலாளராக தெரிவு செயப்பட்ட  சசிகலாவும் அமைச்சர்களும் இதர  கழக பிரமுகர்களும் சுமார்  300 கார்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி !  அப்போது, போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.; ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலா, நேற்று மாலை, 5:00 மணிக்கு, சென்னை, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து, ஜெ., நினைவிடத்திற்கு புறப்பட்டார். ஜெயலலிதா எப்படி செல்வாரோ, அதேபோல பல கார்கள் புடைசூழ சென்றார்.ஜெயலலிதாவுக்கு அளித்தது போலவே, சசிகலாவுக்கும் அவர் வரும் வழியெங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ; மாலை, 5:15 மணிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம், ஜெ., நினைவிடத்திற்கு வந்தார். அங்கு ஏற்கனவே நின்றிருந்த லோக் சபா துணை சபாநாயகர், தம்பிதுரை மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து, சசிகலாவை வரவேற்பதற்காக காத்திருந்தார். மாலை, 5:25 மணிக்கு, சசிகலா காரில் வந்து இறங்கினார். அவரை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலைகுனிந்து வணங்கினர்.


ஜெ., நினைவிடத்திற்கு சென்ற அவர், மலர் வளையம் வைத்து, மலர் துாவி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். பொதுக்குழு தீர்மானத்தை, சமாதியில் வைத்து, மண்டியிட்டு வணங்கினார்.அதன்பின், எம்.ஜி.ஆர்.,
அண்ணாதுரை நினைவிடங்களுக்கும் சென்று, மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்திய பின், போயஸ் தோட்டம் திரும்பினார்.

பொதுமக்கள் கோபம்

ஜெயலலிதா நினைவிடத்திற்கு, சசிகலா வந்து செல்லும் வரை, சென்னை, கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசாரையும், சசிகலாவையும் திட்டி தீர்த்தனர்.சசிகலா வருவதற்கு, அரை மணி நேரத்திற்கு முன், கடற்கரை சாலையில், போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். பாரிமுனையில் இருந்துகாமராஜர் சாலை வழியாக, மயிலாப்பூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும், போர் நினைவு சின்னம் அருகே தடுக்கப்பட்டு, அண்ணா சாலை வழியாக, திருப்பி விடப்பட்டன.

அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக, கடற்கரை வரும் வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி விடப்பட்டன. இதனால், அண்ணா சாலை, பல்லவன் சாலை, ஜி.பி., சாலை, மேயர் கபாலமூர்த்தி சாலையில், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
சசிகலா, போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டதும், டி.டி.கே., சாலை, கடற்கரை சாலையில், ஒரு புறம் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால், கடற்கரை சாலைக்கு, எந்த வாகனங்களும் வர முடியாத நிலை ஏற்பட்டது.

வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசாரிடம், 'ஏன் போக்குவரத்தை நிறுத்துகிறீர்கள்' என, பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். பதில் அளிக்க முடியாமல், போலீசார் மவுனம் காத்தனர்.

பஸ் நிலையம் ஆக்கிரமிப்பு

கடற்கரை சாலையில், பஸ்கள் எதுவும் அனுமதிக்கப்படாததால், அண்ணா சதுக்கம் பஸ் நிலையம் காலியாக இருந்தது. அ.தி.மு.க., நிர்வாகிகள், தங்கள் வாகனங்களை அங்கு நிறுத்தினர். சசிகலாவுக்காக, போக்குவரத்து< நிறுத்தப்பட்டதால், அதில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கி, மருத்துவமனைக்கு நோயாளியை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல முடியாத நிலை உருவானது.

வெறிச்சோடியது எழிலக வளாகம்

சென்னை, சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் பொதுப்பணி, போக்குவரத்து, வேளாண்மை, மாநில திட்டக்குழு, நில நிர்வாகம், மாநில பேரிடர் மேலாண்மை வாரியம், பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினர் நலம் உள்ளிட்ட பல துறை தலைமை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த, நேற்று மாலை, சசிகலா வந்ததால் அவரை வரவேற்பதற்காக, எழிலகம் வளாகத்தில் உள்ள பல்வேறு துறை அதிகாரிகளும், பிற்பகல், 3.00 மணிக்கே அங்கு சென்று விட்டனர்.

துறை அமைச்சர்கள் உத்தரவுப்படி, சசிகலா வரும் போது ஜெ., சமாதிக்கு அருகே கூட்டம் சேர்ப்ப தற்காகவே, அதிகாரிகள் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்களோடு, ஊழியர்கள் பலரும் சென்றனர். இதனால், நேற்று பிற்பக லுக்கு பின், எழிலகம் வளாகம் வெறிச்சோடியது.

அ.தி.மு.க., பொதுச்செயலராகசசிகலா இன்று பதவியேற்பு

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா இன்று பதவியேற்க உள்ளார்.அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, புதிய பொதுச் செயலர் தேர்வு செய்யப்படும் வரை, சசிகலாவை பொதுச் செயலராக நியமித்து, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதை ஏற்று, அ.தி.மு.க., பொதுச் செயலராக, இன்று மதியம், 12:20 மணிக்கு, கட்சி அலுவலகத்தில், சசிகலா பதவியேற்க உள்ளார். கட்சி அலுவலகத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அவர் மாலை அணிவிப்பதற்காக, சிலையை சுற்றி மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: