ஞாயிறு, 5 ஜூன், 2016

சிலை கடத்தல் ஏஜென்ட் பிடிபட்டான்... பின்னணியில் உள்ள பிரபலங்கள் தப்பி விட்டனர்!

சென்னை:பெங்களூரில் பதுங்கி இருந்த, சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாள், போலீசாரிடம் சரணடைந்தான். சிலை கடத்தலில் அவனுக்கு உடந்தையாக இருந்த பிரபலங்கள் பற்றி, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை, ஆழ்வார்பேட்டை, 'முர்ரேஸ் கேட்' சாலையில் உள்ள பங்களாவில், 'ஆர்ட் கேலரி' என்ற பெயரில், சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாள், 1,700 ஆண்டுகள் பழமையான சிலைகளை பதுக்கி வைத்து இருந்தான். மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், டி.எஸ்.பி.,சுந்தரம் தலைமையிலான போலீ சார், அதிரடி சோதனை நடத்தி, ஐம்பொன், கற்சிலைகள் என, 112சிலைகளை பறிமுதல் செய்தனர்.


ஆனால், தீனதயாள் தப்பினான்; சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த, அவனது மேலாளர் மான்சிங், 60, உள்ளிட்ட, மூன்று பேர் கைதாகினர். விசாரணையில், பெங்களூரில் உள்ள மகள் வீட்டில், தீனதயாள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் இரவு, 7:15 மணியளவில், சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு, வழக்கறிஞர்களுடன் வந்த தீனதயாள், அங்கே சரணடைந்தான்.இதுகுறித்து, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் கூறியதாவது:

தீனதயாள் வீட்டில் இருந்து, 77 கற்சிலைகள், 41 ஐம்பொன் சிலைகள், 75 அரிய வகை பழங்கால ஓவியங்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட, கிருஷ்ணர், கோமாதா சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகளை, இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி ஆய்வு செய்து, 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கால சிலைகள் என, உறுதி செய்துள்ளார்.

அத்துடன், இந்திய தொல்லியல் துறையைச்
சேர்ந்த, நான்கு ஆராய்ச்சி குழுவினர், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை ஆய்வு செய்ய உள்ளனர். இந்தச் சிலைகள், எந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டவை; யானை தந்தத்தால் செய்யப்பட்ட சிலைகள் தமிழ்நாட்டில் தான் திருடப்பட்டவையா; இதற்கு முன், தீனதயாள், வெளிநாடுகளுக்கு கடத்திய சிலைகள் எத்தனை என்பதை எல்லாம் கண்டறிய வேண்டியுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள, அவனது ஏஜன்ட்கள் யார்; சிலைகளை திருடி, அடிமாட்டு விலைக்கு விற்கும் கும்பல் பதுங்கி இருக்கும் இடம்; சர்வதேச அளவில் தீனதயாளுக்கு இருக்கும், 'நெட் ஒர்க்' என்ன; கடல் மார்க்கமாகசிலை கடத்தல் எப்படி நடக்கிறது, சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பிரபலங்கள் யார் யார் என்பது உட்பட, பல கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய நிலையில் உள்ளோம்.

நேற்று முன்தினம், இரவு, 7:15 மணிக்கு, வழக்கறிஞர்களுடன் தீனதயாள் சரணடைந்ததும், 79 வயதுடையவன் என்பதால், முதல் கட்ட விசாரணைக்கு பின் வீட்டுக்கு அனுப்பி விட்டோம். நேற்று காலை, அவன் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானான். அவனிடம், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை காட்டி, எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டவை என, கேட்டபோது, 'திருதிரு'வென முழித்தான்.பஞ்சலோக சிலைகள், வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக திருடப்பட்டவை தான் என்பதை ஒப்புக்கொண்டான். இதையடுத்து, 41 பஞ்சலோக சிலைகளை, எழும்பூர், பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, சென்னை, திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். அங்கு சிலைகளுக்கு பூஜைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்ட சிலைகள்:விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம், பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், 'எங்கள் ஊரில் உள்ள, நடராஜர் கோவிலில் இருந்து, இரண்டரை அடி உயரமுடைய அம்மன் சிலை மற்றும் பழங்கால ஓவியங்கள் திருடப்பட்டு உள்ளன. 'டிவி'யில், தீனதயாளிடம் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை காட்டிய போது, அதில் எங்கள் ஊரில் திருடு போன அம்மன் சிலையும் இடம் பெற்று உள்ளது' எனக்கூறி, நேரில்வந்தனர். அவர்களிடம், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் ஓவியங்களை காட்டியபோது அடையாளமும் காட்டினர். வழக்கு விசாரணை முடிந்த பின், அவர்களிடம் சிலையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தீனதயாளை வளைத்தது எப்படி?: தீனதயாளை வளைத்தது குறித்து போலீசார் கூறியதாவது:சமீபத்தில், சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரின், கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்த போது, ஒரு சில ஏஜன்ட்களின் விவரங்கள் கிடைத்தன. அதில், மிக முக்கிய நபராக தீனதயாள் இருந்தான்.
அவன் ஆந்திராவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

மொபைல் போனில் வாடிக்கையாளர் போல் பேசி, சென்னைக்கு வரவழைத்தோம். 'ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு வந்தால் சிலைகளை பார்க்கலாம்' என, தெரிவித்த அவன், ஒரு கட்டத்தில் உஷாராகி ஓட்டம் பிடித்து விட்டான். நடவடிக்கைகளை கடுமையாக்கியதால், அவனே எங்களிடம் சரணடைந்து விட்டான்.இவ்வாறு போலீசார் கூறினர்.

திருச்சி காவிரியில் 7 சிலைகள் மீட்பு:திருச்சி, திருவெறும்பூரை அடுத்த ஒட்டக்குடியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர், நேற்று முன்தினம் இரவு, மீன் பிடிப்பதற்காக, அருகில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார்.

அப்போது, ஆற்று நீரில் சில சிலைகள் கிடந்ததைப் பார்த்து, திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சென்று, இரண்டு அம்மன், இரண்டு நந்தி, ஒரு சுவாமி,ஒரு மன்மதன் சிலைகள் மற்றும் உடைந்த நிலையில் சிவலிங்கத் தின்அடிப்பகுதி ஆகியவற்றை மீட்டனர். இவை அனைத்தும், கோவிலில் வைத்து வழிபட்டதற்கான அடையாளங் களுடன், எண்ணெய் பிசுக்குடன் காணப்பட்டன.

மர்ம நபர்கள், சுவாமி சிலைகளை கோவில்களில் இருந்து திருடி கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்திருக்கலாம் என்றும், சென்னையில் சிலைகளை பதுக்கி வைத்திருந்த தீனதயாளன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், சிலைகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் அவற்றை
ஆற்றில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: