ஞாயிறு, 5 ஜூன், 2016

subavee.com :தமிழருவி ஏன் விலகினார்?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தபின்னர், கடுமையான தோல்வியைச் சந்தித்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், தான் பொது வாழ்விலிருந்து விலகிக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நட்பு வலைத் தளங்களில் அதனை விமர்சித்தும், கேலி செய்தும் பலர் தங்கள் பதிவுகளைச் செய்துள்ளனர். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நண்பர் தமிழருவி மணியனை நான் ஒருபோதும் தரக்குறைவாகக் கருதியதும், பேசியதும் இல்லை.
அவருடைய பரந்துபட்ட படிப்பையும், மிகச் சிறந்த சொற்பொழிவு ஆற்றலையும், அறிவார்ந்த கருத்துகளையும் என்றும் மதிப்பவன் நான். தனிப்பட்ட முறையில் இனிமையாகப் பழகும் பண்புடையவர் அவர். எல்லாவற்றையும் தாண்டி, பொதுவாழ்வில் அவர் நேர்மையானவர் என்பதால் அவரை என்றும் நான் குறைத்து மதிப்பிட்டதே இல்லை.

ஆனால் அவருடைய அரசியல் நிலைப்பாடு என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. திராவிட இயக்க எதிர்ப்பு அவர் ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது.
அதே போல, மக்களைக் குறையுடையவர்களாகப் பார்க்கும் பார்வை அவரிடம் எப்போதும் உண்டு.
தன்னுடைய விலகல் அறிக்கையிலும் கூட, "காட்டுக் குயில் பாட்டைக் காது கொடுத்துக் கேளாதவர்கள், குத்துப் பாட்டில் குதூகலித்துக் கிடப்பவர்கள், மது மயக்கத்தில் மயங்கிப் போனவர்கள்" என்றெல்லாம் வாக்காளர்களை வசை பாடியிருப்பது கண்டனத்திற்குரியது.

இதே மக்கள்தானே, 2014ஆம் ஆண்டும் வாக்களித்தார்கள்? அப்போதும் அ.தி.மு.க.தானே பெரு வெற்றி பெற்றது? தமிழருவி முன்னிறுத்திய கூட்டணி தோல்வியைத்தானே தழுவியது? அப்போது ஏன் அவர் சினம் கொள்ளவில்லை? அப்போதே ஏன் பொது வாழ்வை விட்டு அவர் விலகவில்லை? ஏனெனில், அந்தத் தேர்தலில் தி.மு.க. பெரிய தோல்வியைச் சந்தித்தது. ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனை எண்ணி எண்ணி மகிழ்ந்தார் மணியன்.

இந்தத் தேர்தலிலும், அ.தி.மு.க ஓர் அரக்கு மாளிகை என்றும், 130 இடங்களில் அக்கட்சி வெற்றிபெறும் என்றும் எழுதியிருந்தார். ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகள் அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தி.மு.க. இத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்று அவர் கனவில் கூடக் கருதவில்லை. அங்குதான் அவர் கணிப்பு முற்றிலும் பொய்த்துப்போய் விட்டது.
இப்போது தி.மு.க. வெற்றிக்கு அருகில் வந்துவிட்டது. வலிமையான எதிர்க் கட்சியாய் சட்டமன்றத்தில் உள்ளது. அதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் பொது வாழ்விலிருந்து விலகுவதற்கு அவருடைய தோல்வி கூடக் காரணமில்லை, 98 இடங்களில் தி.மு.க. அணி வென்றிருப்பதே காரணம். அந்த ஆற்றாமையும், விரக்தியும்தான் அவரைப் பொது வாழ்விலிருந்து விரட்டியுள்ளன. என் கருத்தை, ஓய்வாக அமர்ந்து சிந்தித்துப் பார்த்தால் இதுதான் உண்மை என்பதை அவரே உணர்வார்!
போகட்டும், இனியேனும் தி.மு.க. வெறுப்பு அரசியலிலிருந்து விலகி, அவர் அறிவும், படிப்பும் சமூக, இலக்கிய மேம்பாட்டிற்கு உதவட்டும்!!

கருத்துகள் இல்லை: