செவ்வாய், 7 ஜூன், 2016

சொல்வதெல்லாம் உண்மை; சொல்லப்படாத உண்மைக் கதைகளின் தொகுப்பு.. வெண்ணிற ஆடை!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் ‘ சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நான் பலமுறை கடுமையாக விமர்சித்திருக்கிறேன். குங்குமத்தில் நான் எழுதி வந்த பத்தியில் ஒரு கட்டுரையே எழுதினேன். எனது நீண்ட நாள் நண்பன் சரவணன் சந்திரன்தான் அதை இயக்கி வந்தார். சரவணனிடம் அதைப்பற்றி நேரிலேயே அழைத்து பேசியிருக்கிறேன். ஒருமுறை சொல்வதெல்லாம் உண்மையின் ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு கருத்தாளனாக என்னை சரவணன் அழைத்தபோது நிர்தாட்சண்யமாக அதை மறுத்தேன். ஆனால் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அந்த நிகழ்ச்சியை நான் உற்றுக்கவனிப்பேன். அந்த நிகழ்சியில் மனிதர்கள் கையாளப்படும் விதம் குறித்த எனது விமர்சனஙகளைத்தாண்டி அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தும் வாழ்வின் குரூரமான எதார்த்தங்கள் என்னை எப்போதும் முகத்தில் அறைந்தண்ணம் இருந்தன.

கலாச்சாரம், மனித உறவுகள், தனிமனித ஒழுக்கங்கள் குறித்த நமது பாசாங்குகளையும் பொய்களையும் அதன் பல நிகழ்ச்சிகள் உடைத்து எறிந்திருக்கின்றன. எந்த ஒரு கதாசிரியனும் கண்டடையாத கதாபாத்திரங்கள் அந்த நிகழ்சியில் சர்வ சாதாரணமாக கடந்து செல்வதை கண்டிருக்கிறேன். அவை வாழ்வின் இருண்ட நிழல்கள். சந்தர்ப்பங்கள் மனிதர்களை எந்த நிலைக்கும் இட்டுச் செல்லும் என்பதற்கான சாட்சிகள் அவர்கள். அவர்கள் நம்மை நிம்மதியிழக்கச் செய்பவர்கள்.
சரவணன் சந்திரன் ஓராண்டிற்கு முன்பு அந்த நிகழ்ச்சியை இயக்கும் பொறுப்பை விட்டுவிட்டார். ‘ ஒரு உச்சி வெய்யில் வேளையில் உயிர்மை அலுவலக வாசலில் வைத்து ‘ ஏன் வந்துட்டீங்க?’’ என்றேன். ‘ ‘ நீங்கதான் சார் அந்த முடிவை நோக்கி என் மனதை செலுத்தினீர்கள்’’ என்றார். நான் அவரது சுருங்கிய கண்களை உறறு நோக்கினேன். பர்ஸைத் திறந்து நான் மூன்றாண்டுகளுக்கு முன்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பற்றி குங்குமத்தில் எழுதிய கட்டுரையின் பேப்பர் கட்டிங்கை எழுத்துக்காட்டினார். அது பழுப்பேறிப்போயிருந்தது.

 ‘ இதை ஏன் வச்சிருக்கீங்க?’’ என்று கேட்டேன். ‘ சுய பரிசோதனைக்கு ஒரு பலம் தேவையாக இருந்தது. இதை டெய்லி எடுத்துப் படிப்பேன் சார்” என்றார். எனக்கு ஏதோ இனம்புரியாத சங்கடம் ஆக்ரமித்தது. ‘’ இல்ல சரவணன் .. அந்த வேலையில் உங்களுக்கு யாருக்கும் கிடைகாத வேற ஒரு அனுபவம் கிடைத்தது..வாழ்க்கையின் சூதாட்டங்களை, அதன் விசித்திரங்களை காணும் பெரும் வாய்ப்பு ..அந்த நிகழ்ச்சி எனக்கு பிடிக்கவில்லை..ஆனால் அதன் வழியே நீஙகள் சந்தித்த மனிதர்களும் அவர்கள் சொன்ன கதைகளும் அந்த நிகழ்ச்சியை தாண்டியவர்கள் என்று எனக்கு தெரியும் ..அவர்களை நீங்கள் மொழிக்குள் படைப்புக்குள் நிரந்தரப்படுத்துங்கள் ‘’ என்றேன் . அவர் நம்பிக்கையில்லாமல் என்னை பார்த்தார். நான் அவர் சொன்ன ஒரு சம்பவத்தை ’வெண்ணிற ஆடை’ என்ற ஒரு கவிதையாக எழுதிக்காட்டினேன். அதை அவரே அப்போதுதான் முதன்முதலாக கேள்விப்படுப்வதுபோல அதிர்ந்தார்.’ இதுதான் எழுத்தின் வலிமை..இந்த நிகழ்ச்சியில் நீங்கள் சந்தித்த இந்த இருண்ட உலகத்தின் சில முகங்களையேனும் எழுதுங்கள்’’ என்றேன்

சரவணன் எழுதியே விட்டார். 20 உண்மைக்கதைகளை எழுதிக்கொடுத்துவிட்டார். இது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் எழுத்து வடிவமல்ல. மாறாக தொலைக்காட்சி திரைகளில் சொல்லமுடியாத பல உண்மைகள் இந்தக் கதைகளில் சொல்லப்படுகின்றன். இதுவும்தான் தமிழ் வாழ்க்கை. இந்த வாழ்கையின் விசித்திரங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை. இந்த உண்மைகளை , இந்த மனிதர்களை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் நமக்கு இல்லை. அந்த மனிதர்களை அவர்களது நியாயங்களுடனே இக்கதைகள் சந்திக்கின்றன.

சரவணன் இந்த புத்தகத்திற்கு ’வெண்ணிற ஆடை’ என்றே பெயர் சூட்டியிருக்கிறார். இன்னும் ஓரிரு தினங்களில் சென்னை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறது. தமிழில் இத்தகையை நூல்கள் வெகு அரிதாகவே வருகின்றன.
( முன்னுரையிலிருந்து)
மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்; பதிப்பாளர்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை: