புதன், 11 மார்ச், 2015

கிரண் பேடி : டெல்லி பலாத்கார ஆவணப்படத்திற்கு தடைவிதித்தது தவறு

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு தொடர்பாக 'இந்தியாவின் மகள்' என்ற பெயரில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பேட்டியுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு இந்தியா தடை விதித்தது சரியல்ல என இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியும், கடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளருமான கிரண் பேடி கருத்து தெரிவித்துள்ளார். தற்போது, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் கிரண் பேடி, இது தொடர்பாக ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'இந்தியாவில் முன்னேற்றம் அடைந்த முற்போக்கு சிந்தனை கொண்ட ஆண்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்தாலும், பெண்களை அடக்கி வைக்க நினைக்கும் ஆணாதிக்கவாதிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர இந்தியாவில் நிலவி வரும் இந்த ஆணாதிக்க மனப்போக்கு தொடர்பான நிலைப்பாட்டையும், குற்றவியல் சட்டங்களில் உள்ள குறைபாடுகளையும் இந்த (இந்தியாவின் மகள்) ஆவணப்படம் மிக துல்லியமாக தோலுரித்து காட்டியுள்ளது.


இந்தப் படம் இந்தியாவில் நிலவும் சமூக வேறுபாடுகள், நீதித்துறையில் உள்ள பலவீனம், அரசு இயந்திரத்தின் கையாலாகாத்தனம், பழமைவாத மனநிலை ஆகியவற்றுக்கு சாட்சியமாக உள்ளது.

எனது பார்வையில், நாட்டுக்கு தேவையான சமூக புரட்சிக்கும், ஆட்சி முறை எப்படி இருக்க வேண்டும்? என்பதை கற்றுக் கொள்ளவும், இன்னும் எத்தனை காலத்துக்கு நீங்கள் இப்படியே இருக்கப் போகிறீர்கள்? என மக்களை கேட்கவும் இந்த படத்தை ஒரு பாடமாக திரையிட அனுமதித்திருக்க வேண்டும்.

மாறாக, இந்தப் படத்தை தடை செய்வது இவற்றுக்கு எல்லாம் பதிலாகி விடாது. யதார்த்தத்தை எதிர்கொள்வதே சரியான பதிலாகும்' என தெரிவித்தார்.

அப்படியானால், இந்திய அரசு இந்த ஆவணப்படத்துக்கு தடை விதித்தது தவறு என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்ற கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த கிரண் பேடி, 'ஆம்' என்று கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: