வெள்ளி, 13 மார்ச், 2015

மீனாட்சிபுரம் தமிழகத்தின் முதல் சூரிய மின் ஒளி கிராமம்:

மதுரை: தமிழகத்தின் முதல் 'சோலார் மின் ஒளி கிராமம்' என மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் மலைகிராமம் பெயரெடுத்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தென்மலை அருகே மீனாட்சிபுரம் மலைகிராமம் உள்ளது. இது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் விராலிமலை ஊராட்சிக்கு உட்பட்டது. கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அழகின் மொத்த உருவமாக மீனாட்சிபுரம் கிராமம் பசுமை போர்த்திய அடர்ந்த வனத்தில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 600 ஏக்கர் வனப்பரப்பு 'மீனாட்சிபுரம்' என அழைக்கப்படுகிறது. மலைப்பயிர்களான காபி, மிளகு, பலா, சவ்சவ், அவரை, பீன்ஸ் போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. மீனாட்சிபுரம் கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழில். 130 குடும்பங்கள் அவரவர் தோட்டங்களில் வசிக்கின்றனர். 550 ஓட்டுகள் உள்ளன.
சிறுமலை புதூரில் இருந்து தென்மலைக்கு தார்சாலை வசதி உள்ளது. அங்கிருந்து மீனாட்சிபுரத்திற்கு தார் சாலை, தெருவிளக்கு, மின்சார வசதியில்லை. குறைந்தபட்சம் மின் வசதியாவது ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது மீனாட்சிபுரம் மக்களின் பல ஆண்டு கனவு. இக்கிராமத்தை மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் நேரடியாக ஆய்வு செய்தார். இக்கிராமத்திற்கு வந்த முதல் கலெக்டர் இவர் தான். அடர்ந்த வனத்தில் ஆங்காங்கே குடிசை மற்றும் தகர வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மின் கம்பம் அமைத்து மின்சாரம் வழங்குவது சாத்தியமில்லை என தெரிந்தது. அதற்கு பதிலாக ஊராட்சி பொது நிதியில் இருந்து 130 வீடுகளுக்கும் சோலார் மூலம் மின் இணைப்பு கொடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான பணிகள் துரிதமாக நடந்தன. தற்போது அனைத்து வீடுகளும் சோலார் மின் ஒளியில் மிளிர்கிறது. கலெக்டர் முயற்சியால் அனைத்து வீடுகளுக்கும் வெளிச்சம் கிடைத்துள்ளது. பேட்டரி கோளாறு காரணமாக ஒரு சில வீடுகளில் இரவு 12 மணிக்கு மேல் லைட் எரிவதில்லை. அதை சரி செய்து கொடுக்க வேண்டும்.



முருகேஸ்வரி, அங்கன்வாடி ஊழியர், மீனாட்சிபுரம்:

சோலார் மின் விளக்குகள் ஆறு மாதத்திற்கு முன் அமைக்கப்பட்டது. ஆரம்பப்பள்ளியில் சோலார் லைட் எரியவில்லை. அதை சரி செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். மேல்நிலைத் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு செல்லும் பிளாஸ்டிக் குழாய்களை குதிரைகள் மிதித்து சேதப்படுத்தியதால் தண்ணீர் சப்ளை இல்லை. குடிநீருக்கு பிரச்னை இல்லை. தமிழகத்தின் முதல் சோலார் மின் ஒளி கிராமம் என பெயரெடுத்துள்ள மீனாட்சிபுரம் இருளில் இருந்து விடுதலை பெறுகிறது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: