வியாழன், 6 நவம்பர், 2014

சோனியா அவசர அழைப்பு : இளங்கோவன், தங்கபாலு,ஜெயந்திநடராஜன் டெல்லி விரைந்தனர்

முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தன் ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதிய கட்சித் தொடங்கியுள்ளார். திருச்சியில் விரைவில் நடைபெற உள்ள கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை வெளியிட திட்டமிட்டுள்ளார்.புதிய கட்சி தொடங்கி உள்ள வாசனுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள், 9 முன்னாள் எம்.பி.க்கள், 30–க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், 20–க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்களின் ஆதரவு உள்ளது. இந்த ஆதரவு பலத்தை மேலும் அதிகரிக்க செய்யும் முயற்சிகளில் வாசனுடன் உள்ள தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாசனின் புதிய கட்சி பெயர் பதிவு வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மாவட்ட வாரியாகவும் ஆள் பிடிக்கும் வேலை நடந்து வருகிறது.இந்த நிலையில் காங்கிரஸ் பலவீனப்படுவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈ.வி.கே.எஸ் .இளங்கோவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு ப.சிதம்பரம், குமரி அனந்தன், எம்.கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், வசந்தகுமார், ஜெயந்திநடராஜன், செல்லக்குமார், பிரபு, ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் ஆதரவாக உள்ளனர். இதனால் இளங்கோவன் தலைமையிலான காங்கிரஸ் ‘‘கை’’ ஓங்குமா? அல்லது வாசனின் புதிய கட்சி பலம் பெறுமா? என்ற எதிர் பார்ப்பு தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே மக்களிடம் செல்வாக்கை இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சுமார் 4.3 சதவீத ஓட்டுக்களே பெற்ற நிலையில் வாசன் பிரிந்து சென்றதை கடும் பின்னடைவாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் கருதுகிறார்கள். எனவே தமிழக காங்கிரசை இனியும் இப்படியே விடக் கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இதையடுத்து தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு வரும்படி நேற்று சோனியா அழைப்பு விடுத்தார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்களது டெல்லி பயணத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக செய்யப்பட்டன.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஏற்கனவே டெல்லியில்தான் உள்ளார். இன்று காலை 7.30 மணிக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். 8.30 மணி விமானத்தில் குமரி அனந்தன், வசந்தகுமார் புறப்பட்டு சென்றனர். 10.15 மணி விமானத்தில் திருநாவுக்கரசர் புறப்பட்டு சென்றார்.

கிருஷ்ணசாமி, பிரபு, ஜெயந்தி நடராஜன், செல்லக்குமார், ஜெயக்குமார், கோபிநாத், யசோதா, சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இன்று பிற்பகல் அவர்கள் அனைவரும் சோனியா காந்தியின் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இன்று மாலை 5 மணிக்கு சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சந்தித்துப் பேசுவார்கள். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் உடன் இருப்பார் என்று தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பலமாக இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்பதை சோனியா நிரூபிக்க விரும்புகிறார். எனவே அதற்கான வியூகங்கள் பற்றி கருத்து கூறுமாறு தமிழக தலைவர்களிடம் சோனியா கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.

மேலும் வாசன் புதிய கட்சி தொடங்கும் முன்பு அந்த அணியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்க சோனியா கேட்டுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக வாசனுக்கு பக்கப்பலமாக உள்ள மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்களை மீண்டும் காங்கிரசுக்கு இழுப்பது பற்றி இன்று நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இது தவிர தமிழக காங்கிரசுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் மாநில, மாவட்ட மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்த இன்று நடக்கும் சந்திப்பின்போது முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. அதோடு சில அதிரடி நடவடிக்கைகளுக்கும் இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் சோனியா சந்தித்து பேசுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.nakkheeran.in

கருத்துகள் இல்லை: