ஞாயிறு, 2 நவம்பர், 2014

பதவி போய்விடுமென்ற பயத்தில் சும்மா இருக்கும் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்!

மக்களின் முதல்வர்’ ஆட்சியில் முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் பதவிக்கு வந்து ஒரு மாதம் உருண்டோடிவிட்டது. தலைமைச் செயலகமோ... சட்டமன்றமோ... வரலாற்றுக் கட்டடங்களோ ஒரு மாநிலத்தின் அடையாளம் அல்ல. ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கும் முதல்வர்தான் மாநிலத்தின் முகம். ஆனால், அந்த முகம் தமிழகத்தில்கூட தெரியவில்லை. அமைச்சராக இருந்தபோது புன்னகைக்க முடிந்த ஓ.பன்னீர்செல்வம், சிரிப்பைக்கூட தொலைத்துவிட்டு நிற்கிறார். அம்மாவின் ஆட்சி நடத்தும் பன்னீரின் ஒரு மாத ஆட்சியின் காட்சிகளைப் பார்ப்போம். நான்கு ஆண்டுகள் சிறை, ரூ.100 கோடி அபராதம், சொத்துகள் பறிமுதல், முதல்வர் பதவி பறிப்பு, எம்.எல்.ஏ. தகுதி இழப்பு என அத்தனை அதிரடிகளும் சேர்ந்து, 'துணிச்சல் அரசியல்வாதி’யான ஜெயலலிதாவை முடக்கிப் போட்டுவிட்டன. 'மக்கள் பிரதிநிதி’ பட்டம்தான் அரசியலின் அளவுகோல். அதையே இழந்து தலைவி நிற்க... அவர் அமர்ந்த முதல்வர் ஆசனத்தில் அமர்ந்து, முள் பாதையில் நடந்தபடியே ஒரு மாதத்தை ஓட்டிவிட்டார் பன்னீர். நாந்தாய்ன்  நூறுவீதம் அடிமையாய் இருப்பேன் என்று நிருபித்து லவட்டிய CM பதவியை காப்பத்தணுமே ? மூச்சு விடுவது கூட யோசித்து யோசித்து விடுகிறார்.ம்ம்ம் இப்படியே போனால் விரைவில்  மூச்சு பயிற்ச்சி  வகுப்பு  எடுத்து  நித்தியானந்தாவையே  தோற்கடிக்கலாம்  பன்னீரு?

சைரன் இல்லாமல் நிசப்தம்!
துப்பாக்கி ஏந்திய காவல், காக்கி படை, கார்கள் அணிவகுப்பு, சைரன் சத்தம் என முதல்வருக்கான அடையாளங்கள் எதுவும் இல்லாமல் கோட்டைக்குள் நுழைகிறார் முதல்வர். சைரன்கூட 'சைலன்ட் மோடு’க்கு போய்விட்டது. கோட்டைக்கு பன்னீர்செல்வம் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்துதான் எடுத்து வைக்கிறார். எந்த இடத்திலும், எந்த தளத்திலும் தான் ஒரு முதல்வர் என்ற பார்வை விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார். முதலமைச்சர் இருக்க வேண்டிய அறை பக்கம்கூட எட்டிப் பார்க்கவில்லை. தான் நிதி அமைச்சராக இருந்த அறையிலேதான் தமிழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அமைச்சராக இருந்தபோதுகூட நாற்காலியில் சாய்ந்து உட்கார முடிந்த பன்னீரால் இப்போது சாய்ந்து உட்கார முடியவில்லை. ஜெயலலிதாவின் கார் நிற்கும் கோட்டை போர்ட்டிகோவின் பக்கம்கூட பன்னீரின் கார் போவதில்லை. ஓர் ஓரமாகத்தான் அவர் கார் நிற்கிறது.
குனிந்த தலை நிமிராமல்...!
இப்போதுபோல் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி 2001-லும் பறிபோனது. அப்போது முதல்முறையாகப் பதவியேற்ற பன்னீர் முதல்வர் சேம்பரை பயன்படுத்தினார். பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ஆனால் இப்போதோ அம்மாவின் 'அமைதி... வளர்ச்சி... வளம்!’ கொள்கையில் 'அமைதி’யை மட்டும் கடைப்பிடிக்கிறார். கோட்டையைச் சுற்றிலும் இப்போதும் ஜெயலலிதாவின் படங்கள்தான். மறந்தும்கூட பன்னீர்செல்வத்தின் படத்தைப் பார்க்க முடியவில்லை. பன்னீரின் அறைப் பக்கம் போனால் பரபரப்பும் இல்லை; கெடுபிடிகளும் இல்லை. போலீஸ் கண்களும் இல்லை. புதுப் பெண்ணைப்போல குனிந்த தலை நிமிராமல் வருகிறார், போகிறார் பன்னீர். ஆய்வுக்கூட்டங்கள் நடத்துகிறார். பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். வாழ்த்துச் செய்திகள் வெளியிடுகிறார்... அவ்வளவுதான். தனது பெயரில் வரும் அறிக்கைகளில், 'அம்மா வழியில் ஆட்சி செய்யும் தமிழ்நாடு அரசு’ என மறக்காமல் குறிப்பிடச் சொல்கிறார் பன்னீர்.
'அம்மா வந்தபிறகுதான் திட்டங்கள்!’
110 விதிகளில் 'சந்தோஷ’ அறிவிப்புகளை முன்பு வெளியிட்டு வந்தார் ஜெயலலிதா. அப்படி வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள் அம்மா மீண்டும் வந்தால்தான் உயிர் பெறும்போல. சலுகை விலையில் 'அம்மா சிமென்ட்’, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1,000 ரூபாய் மதிப்புள்ள 'அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம்’ போன்ற அறிவிப்புகளை முதல்வரின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு வந்தார்கள். ஆனால் ''அம்மா மீண்டும் முதல்வராக வருவார். அவர் கையால்தான் திட்டம் தொடங்கப்படும்'' என சொல்லி அமைதியாக இருந்துவிட்டாராம் பன்னீர். பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற அறிவிப்புகள் மட்டும் வருகின்றன. அதாவது அம்மாவின் மீது எதிர்ப்புகள் விமர்சனங்கள் விழக்கூடிய விஷயங்களைத் தன் தலையில் போட்டுக்கொள்கிறார். இப்படித்தான் 2001-ல் பன்னீர் முதல்வராக இருந்தபோது பால் விலை, பஸ், மின் கட்டணங்களை எல்லாம் உயர்த்தினார். இதை அப்போது பிரஸ் மீட் நடத்தி பன்னீர் அறிவித்தபோது 'மினி பட்ஜெட்’ என விமர்சனங்கள் எழுந்தன. கிரானைட், தாது மணல் கொள்ளை தொடர்பான சகாயம் விசாரணைக் குழுவை ஏற்காததால் நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 'சட்டம் ஒழுங்கு சரி இல்லை’ என சுப்ரீம் கோர்ட் வேறு குட்டு வைத்தது. இப்படி ஆட்சிக்கு எதிரான விவகாரங்களில் எல்லாம் பன்னீரின் தலை உருட்டப்படுகிறது. ஆனால், எதைப்பற்றியும் பன்னீர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பாவம், ''எல்லாம் பன்னீரையே சேருகிறது'' என அவரது ஆதரவாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.
பன்னீரை மதிக்காத அரசுத் துறைகள்!
ஏற்றுக்கொண்டாலும் புறக்கணித்தாலும் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சேர்த்துதான் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர். ஆனால், அரசின் துறைகள்கூட பன்னீரை முதல்வராக ஏற்காமல் பந்தாடுகின்றன. இதில், செய்தித் துறைக்குதான் முதலிடம். அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜெயலலிதாதான் இப்போதும் முதல்வர். முதலமைச்சர் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில்கூட ஆரம்பத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரைப் போடாமல் முதல்வர் என்றே குறிப்பிட்டார்கள். ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படவில்லை ஓ.பன்னீர்செல்வம். முதல்வரின் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், பன்னீருக்கு பதில் இப்போதும் போட்டோவில் ஜெயலலிதாதான் சிரித்துக்கொண்டிருக்கிறார். தஞ்சை பொருட்காட்சியில் பன்னீரின் படத்தை 'தைரியசாலிகள்’ யாரோ வைத்துவிட... இந்த விளம்பரம்கூட, ''வேண்டாம்'' எனச் சொல்லி எடுக்கச் சொல்லிவிட்டாராம்.      
தீபாவளி வாழ்த்துக்கூட இல்லை!
ஓ.பன்னீர்செல்வம் முதல்வரான பிறகு சமூக இணையதளங்களில் அவரைப் பற்றிய கிண்டல் மொழிகள் நின்றபாடில்லை. 'மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்றால்... பன்னீர், ஆடு மாடுகளுக்கா முதல்வர்? செவ்வாய்க் கிரகத்துக்கா முதல்வர்’ என கமென்ட்கள் விழுந்தபடியே இருக்கின்றன. ''ஓ.பன்னீர்செல்வம் ரொம்ப நல்லவர். ஆனால், வல்லவர் இல்லை'' என ஸ்டாலின் வேறு கிண்டல் அடிக்கிறார். அமைச்சராக இருந்திருந்தால் பன்னீரிடம் இருந்து பதிலடி கிடைத்திருக்கும். ஆனால், இப்போதோ அமைதி. அவரின் செயல்பாடுகள் எல்லாம் தலைவியைத் திருப்தி செய்வதில்தான்.
போயஸ் கார்டனுக்கு அவர் காட்டும் விசுவாசத்துக்கு ஒரு சாம்பிள் இது. முதல்வரின் வாழ்த்து இல்லாமல் கொண்டாடப்பட்ட தீபாவளி இந்த தீபாவளிதான். தலைவி ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்காததால் தீபாவளிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. தாடி வளர்த்து தன் வேதனையை வேறு வெளிக்காட்டி வருகிறார்.
அதிகாரிகளின் அசட்டை!
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிகாரிகள் அஞ்சி வேலை பார்ப்பார்கள்.  இப்போதோ அசட்டையாக இருக்கிறார்கள். இதை பன்னீரும் கண்டுகொள்வது இல்லை. ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அவருக்கு ஆதரவாக நடந்த போராட்டங்கள் சட்டம் ஒழுங்குக்கு சவால்விட்டன. அதைப்பற்றி ஓ.பன்னீர்செல்வம் அலட்டிக்கொள்ளவில்லை.
கடந்த முறை முதல்வராக இருந்தபோது தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இந்த முறை அவர்களைப் பார்க்காமல் ஒதுங்கிப் போய்விடுகிறார். இதேபோலத்தான் அமைச்சரவைக் கூட்டமும் நடைபெறவில்லை. பொதுவாக மாதத்துக்கு ஒரு முறையாவது அமைச்சரவைக் கூட்டம் நடக்கும். அதுவும் இல்லை. சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நடப்பது வழக்கம். இந்த முறை அது நடக்குமா எனத் தெரியவில்லை.
அம்மாவின் நிழல் அரசாங்கத்தை நடத்திவரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி 'சுகம்’ இல்லை; 'சுமை’தான்.
- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி
அட்டைப்படம்: உ.பாண்டி விகடன்.com

கருத்துகள் இல்லை: