வியாழன், 6 பிப்ரவரி, 2014

ஞாநி பதில்கள் :கட்சியில் அழகிரி இருப்பதே ஸ்டாலினுக்கு தேவையற்ற விஷயம்தானே ?

சொர்ணவள்ளி, திருவண்ணாமலை. டெல்லி லஞ்சப் புகார் ஹெல்ப் லைன் தொலைபேசிக்கு 7 மணி நேரத்தில் 4 ஆயிரம் அழைப்புகள் வந்ததாமே ?
 போன் போட்டு என்னைப் பத்தி புகார் சொல்லிடாதீங்கன்னு அதுக்கு லஞ்சம்குடுக்க ரெடியாயிருப்பாங்க இத்தனை நேரம்… அந்தக் கணக்கை எடுத்தா இன்னும் ஏழாயிரம் தேறலாம். புகார் குடுக்க பொதுவா பயப்படற ஜனங்க எண்ணிக்கைதான் எப்பவும் அதிகம். அதைக் கணக்கு செஞ்சா பல ஆயிரம் இருக்கும். மொத்ததுல வந்திருக்கறது பெரு வெள்ளத்துல ஒரு சிறு துளிதான்.

முத்துக்குமார், விழுப்புரம். இனி காங்கிரஸின் எதிர்காலம்? காங்கிரசை அவ்வளவு எளிதில் அழித்துவிடமுடியாது என்பதுதான் யதார்த்தம். நேரு குடும்பம் ஒதுங்கியிருந்த காலத்தில் கூட காங்கிரஸ் அழிந்துவிடவில்லை. வேறு சில கட்சிகளைப் போல அது முற்றிலும் தனி நபரை சார்ந்து இயங்குவதல்ல. வரலாற்று ரீதியாக காங்கிரசுக்கு சில வலிமைகள் இருக்கின்றன. சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட பிரிவினரும் அதில் சேர்ந்து இயங்கமுடியும் என்பது விடுதலைப் போர் காலத்தில் ஏற்பட்ட அடையாளம். அந்த வலிமை அதற்கு இன்னும் தொடர்கிறது. காங்கிரஸ் கொஞ்சம் திருந்தினால் கூட பழைய வலிமையை அடைந்துவிடும். திருந்துமா என்பதுதான் கேள்வி.


கணேசன், மதுரை. இந்திய தூதரக அதிகாரி தேவயானியின் வெளிநாட்டு மோகத்தை நம்மவர்கள் யாரும் தட்டிக்கேட்டதாக தெரியவில்லையே? தேவயானி சார்பாக முழு அதிகார வர்க்கமும் ஒன்று திரண்டு நின்று ,பணிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைப்பதில் பெரும் வெற்றி பெற்றதே காரணம்.

 சுந்தரம், சென்னை. அழகிரி பேட்டி பற்றிய கேள்விக்கு, ‘ தேவையற்ற செய்திகளை நான் படிப்பதும் இல்லை. பார்ப்பதும் இல்லை’ என்கிறாரே ஸ்டாலின்? ஆம். கட்சியில் அழகிரி இருப்பதே ஸ்டாலினுக்கு தேவையற்ற விஷயம்தானே.

 முகம்மது, சென்னை. விளையாட்டு ஊழல் குறித்து விசாரிக்க சி.பி.ஐ தனிப் பிரிவை விரைவில் தொடங்க இருப்பதாக சிபிஐ இயக்குநர் ரஞ்ஜித் சின்ஹா தெரிவித்துள்ளாரே? இப்படியே பிரிவுகள் தொடங்கினால், சி.பி.ஐ இன்னொரு அரசாங்கம் போல பிரும்மாண்டமானதாகிவிடும். எனேன்றால் ஒவ்வொரு துறையிலும்தான் ஊழல் நடக்கிறது. பேசாமல், அரசாங்கமே தன் ஒவ்வொரு துறையிலும் ஒரு சி.பி.ஐ. பிரிவை ஏற்படுத்திவிடலாம்.

 சுப்புராஜா, சேலம். ஆந்திராவில் எம்.எல்.ஏ. ஒருவர் சோனியாவிற்கு வெண்கலத்தில் சிலை வடித்து அதற்கு தெலுங்கானாதாய்’ என்றும் பெயர் வைத்திருக்கிறாராமே? முட்டாள்கள் எல்லா மொழிகளிலும் எல்லா இனங்களிலும் எல்லா தேசங்களிலும் உண்டு என்பதற்கு அவ்வப்போது இப்படி நிரூபணங்கள் கிடைக்கின்றன. 

விநாயகம், விக்கிரமசிங்கபுரம். பாதுகாப்புத்துறைக்கு ரூ.3,600 கோடி மதிப்பிலான சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கு பற்றி? ராணுவத் துறை ஊழல்களுக்கென்ரே தனி புலனாய்வுப் பிரிவு தொடங்கவேண்டிய அவசியம் இருக்கிறது. ராணுவ பட்ஜெட்டைக் கடுமையாக்கக் குறைத்தால், ஊழலையாவது குறைக்கலாம்.

 ராமசாமி,சென்னை. பா.ஜ.க.வில் சுப்ரமணியன்சாமி வந்து சேர்ந்த நாள் அக்கட்சிக்கு ஒரு கறுப்புநாள் என்கிறாரே தமிழருவி மணியன்? கட்சியிலேயே இல்லாமல் கட்சி வேலை பார்க்கும் மணியனுக்கு இதையெல்லாம் சொல்ல ஏது தகுதி ? தவிர பா.ஜ.க என்ற கட்சி சுப்பிரமணியன் சுவாமியை நீக்கிவிட்டால் புனிதமான கட்சியாகிவிடுமா என்ன ? ஒரே குட்டையில் இருக்கும் பல மட்டைகளில் சுவாமியும் ஒரு மட்டை. அவ்வளவுதானே தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிப்பது ஜனநாயக நடைமுறை ஆகாது, மாறாக அது வெறும்,தனி நபரை பிரபலப்படுத்தும் முயற்சியாகும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாரே? சொல்லியிருப்பது ராகுல் என்றாலும் கருத்து சரியான கருத்துதான். 

ரமேஷ், சேலம். காங்கிரஸுக்கு பெரிய அளவில் சவால் விட எந்த கட்சியும் உருவாகவில்லை என்கிறாரே சுஷில்குமார் ஷிண்டே? உண்மைதான். அதுதான் இப்போதைக்குக் காங்கிரசைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. தவிர காங்கிரசை பலவீனப்படுத்த வெளி சக்திகள் வேலை செய்வதை விட உள் சக்திகளே போதுமானவை.

 மோகன், கரூர். பா.ஜ.க. – ம.தி.மு.க. கூட்டணி பற்றி? மோடியை தான் இப்போது பிரதமராக்கினால் நாளை மோடி தன்னை முதல்வராக்க உதவுவார் என்ற தப்புக் கணக்கில் வைகோ தன் தொண்டர்களை அடகு வைத்திருக்கிறார். மீட்க முடியாமல் முழுகிப் போகும் வாய்ப்பே அதிகம்.

கவிதா, சென்னை. தி.மு.க.வில் ஸ்டாலின் -அழகிரி இடையே வாரிசு சண்டை உச்சகட்டம் அடைந்துவருகிறதே? உச்சகட்டம் எல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது. தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன்மொழிவேன் என்று கலைஞர் கருணாநிதி அறிவித்தபோதே பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. வில்லனாக நம்பியார் நடித்தால், கடைசி சீனில் கௌரவமாக போலீசிடம் கையை நீட்டி விலங்கு வாங்கிக் கொண்டு போவார். வில்லனாக வடிவேலு நடித்தால் எப்படியிருக்கும் ? அதுதான் இப்போது நடப்பது. செல்வராஜ், மதுரை தி.மு.க.விலிருந்து அழகிரியை நீக்கியது கூட கருணாநிதியின் ராஜ தந்திரம் தானே? அவரது அறிவாலோ திட்டமிடுதலாலோ இதெல்லாம் நடக்கவில்லை. இயற்கையின் சதிதான் இது. தயாளு அம்மையார் மட்டும் உடல்நலம் குன்றாமல் இருந்திருந்தால், கலைஞர் கருணாநிதி தொடர்ந்து அழகிரியை சமாதானம் செய்து சமாளிக்கும் ராஜதந்திரத்தை மட்டுமே திரும்பத்திரும்பச் செய்யவேண்டியிருந்திருக்கும். 

சக்திவேல், திருச்சி. தமிழக மீனவர்களால் எங்களது மீன்வளம் பாதிக்கப்படுகிறது என்ற இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு குறித்து? உண்மைதான். கூடவே தமிழக்மீனவர்களுக்கான மீன்வளமும் பாதிக்கப்பட்டிருக்கிரதுஎன்ர உன்மையை சேர்த்தே பார்க்கவேண்டும். பிரும்மாண்டமான ஆழ்கடல் மீன் பிடிக் கப்பல்களை தமிழக மீன் முதலாளிகள் பயன்படுத்திவருவதால், இரு பகுதிகளிலும் உள்ள எல்லா சிறு மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சூழல் பாதிக்கப்பட்டு மீன்வளமும் குன்றி வருகிறது. இதைப் புரிந்துகொண்டு எல்லா மீனவர்களுக்கும் சாதகமனதாகவும் எல்லாரும் ஏற்கக்கூடியதாகவும் ஒரு தீர்வை கண்டுபிடிக்காமல், இதை தமிழ்- சிங்கள அரசியல் மோதலுக்கு எல்லா தரப்பினரும் பயன்படுத்திவருவதுதான் சிக்கலை நீடிக்கிறது.

 ச.மீனாட்சிசுந்தரம், தானே மேற்கு. மத்திய அமைச்சர் சசிதரூரின் 3-வது மனைவி சுனந்தாவின் மரணத்தில் தொடர்ந்து சர்ச்சை நீடிக்கிறது. அவர் இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடியுள்ளாராமே? உயர் அதிகாரம், பெரும்பணம் இவற்றின் பிடியில் வாழ்க்கை நடத்தும் பலருடைய வழ்க்கை கடும் மன உளைச்சலிலும் முதிர்ச்சியின்மையாலும் மெய்யான நண்பர்கள் அற்ற தனிமையாலும் பாதிக்கப்படுகிறது. சுனந்தாவும் அப்படிப்பட்ட பாதிப்புக்கு உள்ளானவர்.இதை துப்பறியும் கதை மாதிரி படிக்கத் தேவையில்லை.

 பாலன், திருவண்ணாமலை. அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியை ஒழித்துக்கட்டவே அவரின் அரசை ஆதரிக்கிறோம் என்கிறாரே டெல்லி ஓக்லா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.? பகையாளியை உறவாடிக் கெடு என்பது பழைய அறிவுரைதான். அதை காங்கிரஸ் மட்டுமல்ல, ஆம் ஆத்மியும் சேர்ந்தே பின்பற்ற முடியும் என்பதை ஓக்லா எம்.பி மறந்துவிட்டிருக்கிறார். 

ச.மீனாட்சி சுந்தரம், மாஜிவாடா (நாகா). குஜராத் கலவரம் தன்னை முற்றிலும் அதிர்ச்சியடைய செய்துவிட்டது என்று மோடி கூறுவதில்.. ஷாக் அவருக்கா? இல்லை நமக்கா? நாமும் ஷாக் ஆகத் தேவையில்லை. “இந்நாளில் பொய்மைப் பார்ப்பார், இவர் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார்’ என்று பாரதி சொல்வது மோடிகளுக்குப் பொருந்தும். எப்படியும் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று துடிக்கும் மோடியும் பி.ஜே.பியும் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னவெல்லாமும் சொல்லத் தயாராக இருப்பார்கள். பாலாஜி, சென்னை. என்னை நம்பி வந்தவர்களை எப்போதும் கைவிடமாட்டேன் என்கிறாரே அழகிரி? இதெல்லாம் மிராசு- பண்ணையார் ரகப் பேச்சு. ஓட்டு போட்டு இவரையும் இவர் கட்சியையும் ஆட்சிக்கு அனுப்பியவர்கள் எல்லாம் இவர்களை நம்பி வந்தவர்கள் இல்லையா ? அடியாட்களாக எடுபிடிகளாக சுற்றி நிற்போர் மட்டும்தான் நம்பி வந்தவர்களா?

 முத்துக்குமாரசாமி, தென்காசி. பீகாரில் லஞ்சப் புகாரில் சிக்கிய 576 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளாரே? நல்ல நடவடிக்கை. இத்துடன் விடாமல், குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டனை பெறச் செய்யவேண்டும். இல்லாவிட்டால், சில வாரங்களிலோ மாதங்களிலோ பழையபடி வேலைக்குத் திரும்பி வந்துவிடுவார்கள். எல்லாம் கண்துடைப்பாக மாறிவிடும். ஆரோக்கியராஜ், தஞ்சாவூர். தாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அமல்படுத்தியுள்ள நெருக்கடி நிலையை எதிர்த்து எதிர்க் கட்சியினரும் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனரே? உலகத்தில் ஜனநாயக ஆட்சி முறை என்பது சில நூறு வருடங்களாக மட்டுமே முயற்சிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எதேச்சாதிகார, குழுத்தலைவர், அரசர் என்ற வழிமுறைகளே இருந்துவந்திருக்கின்றன. ஜனநாயக முறையிலும் பழைய கூறுகளைக் கைவிடாமல் இருக்கும் போக்கு இன்னும் கீழை நாடுகளில் கணிசமாகவே இருக்கிறது. எனவே பிரதமர்கள் நெருக்கடி நிலை அறிவிப்பதும் அதை எதிர்த்து பிரஜைகள் போராடுவதும் தவிர்க்க இயலாதவை.

 அருள்ராஜ், சென்னை. அமேதியில் தேர்தல் பிரசாரம் செய்ய சென்ற ராகுல் காந்திக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப்பட்டிருக்கிறதே? கறுப்புக் கொடி காட்டுவது ஜனநாய்க ரீதியிலான எதிர்ப்பு, அதில் ஒரு தவறும் இல்லை. தேர்தல் நேரத்தில் எதிரிகளை பலவீனப்படுத்த இப்படிப்பட்ட உத்திகளைக் கட்சிகள் கையாள்வது  .gnani.net

கருத்துகள் இல்லை: