செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

திருஞான சம்பந்தர் ஒரு பாசிச படுகொலையாளி? 8000 சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப் பட்டனர்.

தமிழ் நாட்டில், சோழர் ஆட்சிக் காலத்தில், பிராமண மத மேலாதிக்கம் காரணமாக சமண மதங்கள் அழிக்கப் பட்டன. சமண மதத் துறவிகள், இரகசியமாக மலைக் குகைகளில் பதுங்கி இருந்து மத வழிபாடுகளை பின்பற்றி வந்தார்கள். இன்றைக்கும், தமிழகத்தில் பல இடங்களில், சமண மத அகழ்வாராய்ச்சிப் பகுதிகள் உள்ளன. ஆனால், அரசாங்கம் அது குறித்து அக்கறையின்றி இருக்கின்றது. தமிழகத்தில் உள்ள, இந்து மத மேலாண்மைவாதிகளும் அதனை கண்டுகொள்வதில்லை.
திருஞான சம்பந்தர், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால், ஹிட்லருக்கு நிகரான “ஒரு பாசிச இனப் படுகொலையாளி” என்று, தமிழக வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப் பட்டிருக்கும். சம்பந்தர் வாழ்ந்த 7 ம் நூற்றாண்டில், மதுரையில் 8000(எண்ணாயிரம்) சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப் பட்டனர். அந்த சமணர்கள் வேறு மொழி பேசிய, வேற்றின மக்கள் அல்லர். அவர்களும் தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தமிழர்கள் தான். அன்று மதுரையை ஆண்ட கூன் பாண்டியனும், திருஞான சம்பந்தரும், எண்ணாயிரம் தமிழர்களை, அவர்கள் சமண மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக இனவழிப்புச் செய்தனர். சமணர்களின் படுகொலைகளுக்கும், Holocaust எனும் யூத இனப் படுகொலைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? ஜெர்மனியில், ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட யூதர்களும் ஜேர்மனிய இனத்தவர்கள் தான். யூத மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக தான், அவர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.
தமிழகத்தில், மதுரையில் எண்ணாயிரம் சமணர்களை கொன்ற வரலாற்றை, சமண மத நூல்கள் எதுவும் பதிவு செய்யவில்லை ?
அதனால், “அப்படி ஒரு படுகொலை நடந்ததாக நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை” என்று, இன்று சில சைவ மத அடிப்படைவாதிகள் வாதாடலாம்.
ஒரு இனம் தனது மூதாதையருக்கு நடந்த இனப் படுகொலையை நினைவுகூரும் மரபு, யூதர்களிடம் இருந்து தான் ஆரம்பித்தது. ஆனால், உலகில் பொதுவாக, வேறெந்த இன மக்களும், தமக்கு நடந்த இனப் படுகொலைகளை நினைவுகூரும் மரபைக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், பண்டைய காலத்தில் கொலையாளிகள் மட்டுமே, தாம் எத்தனை பேரை படுகொலை செய்தோம் என்பதை பெருமையாக நினைவுகூர்ந்து வந்தனர்.
//அக்காலத்தில் மதுரையை சுற்றிலும் 8000 சமணக் குருமார் இருந்ததை அறிகிறோம். இக் கருத்தை சம்பந்தர் பெருமானே “ஆனைமாமலை ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர்” என்று கூறி இருக்கிறார்….”எண்பெருங் குன்றத்து எண்ணாயிரவர்” என்று சேக்கிழார் கூறுகின்றார். // (ஆதாரம்: கோவை கிழார் எழுதிய கொங்கு நாடும் சமணமும்)
சேக்கிழாரின் பெரிய புராணத்தில், சமணர்களின் இனப்படுகொலை குறிப்பிடப் படுகின்றது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும், வேறு சில சைவ மத ஆலயங்களிலும், சமணப் படுகொலை பற்றிய சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. மதுரையில் “சாமநத்தம்” என்ற ஊரில், இறுதிக் கட்ட சமண இனவழிப்பு நடந்திருக்கலாம். சமணர்களின் இரத்தம் என்ற சொல் திரிபடைந்து, சாமநத்தம் என்ற பெயர் வந்திருக்கலாம்.
சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாறிய, கூன் பாண்டியன் ஆண்ட மதுரையில் தான், தமிழத்தின் கடைசி சமணர்கள் வாழ்ந்துள்ளனர். சம்பந்த நாயனார் பற்றிய கதையில், அன்று நடந்த சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. சம்பந்தர் சமணத் துறவிகளை, “அனல் வாதம், புனல் வாதம்” இரண்டிலும் வென்றதாகவும், அதற்கு தண்டனையாக கழுவேற்றம் நடந்ததாகவும், அந்தக் கதையில் இருந்து தெரிய வருகின்றது. ஆன்மீகம் தொடர்பாக , இரு மதப் பிரிவினராலும் அன்று விவாதிக்கப் பட்ட விபரங்கள் எதுவும் பதிவு செய்யப் படவில்லை. சமபந்தர் ஆற்று நீரில் விட்ட சைவ மத ஓலைச் சுவடிகள் மிதந்து வந்து கரையொதுங்கின. அது தான் “புனல் வாதம்”. சம்பந்தர் நெருப்பில் போட்ட ஓலைச் சுவடிகள் எரியவில்லை. அது தான் “அனல் வாதம்”.
மதுரைக்கு வந்து தங்கிய, திருஞான சம்பந்தரின் சத்திரத்திற்கு சமணர்கள் நெருப்பு வைத்தனர். அதாவது, “சமணப் பயங்கரவாதிகள்” நடத்திய “பயங்கரவாத தாக்குதலில்” இருந்து, சம்பந்தர் தெய்வாதீனமாக உயிர் தப்பினாராம். அதன் பிறகு தான், சம்பந்தர் தன் மீதான கொலை முயற்சிக்கு பழிவாங்குவதற்காக, அல்லது “சமணப் பயங்கரவாதிகளின்” கொட்டத்தை அடக்குவது அவரது நோக்கமாக இருந்துள்ளது.
திருஞான சம்பந்தர், ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” ஒன்றை நடத்தி இருக்கிறார். போரின் இறுதியில், ஒட்டுமொத்த சமணர்களும் இனவழிப்புச் செய்யப் பட்டனர். பாண்டியன்-சம்பந்தனின் சைவ பேரினவாத அரசு, “எண்ணாயிரம் சமணப் பயங்கரவாதிகளுக்கு கழுவேற்றும் மரண தண்டனை விதிக்கப் பட்டதாக” பரப்புரை செய்து வந்துள்ளது.
இதனை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொள்ளலாம். ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தி காலத்தில் தான், ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தவரின் ஆதிக்கம் அதிகரித்தது. சக்கரவர்த்தியின் மனைவியும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்தாள்.
கிறிஸ்தவர்களின் செல்வாக்கு, அரச குடும்பம் வரையில் வந்து விட்ட பின்னர், சக்கரவர்த்தியை பணிய வைப்பது இலகுவாகி விட்டது. கொன்ஸ்டாண்டின், அதற்கு முன்னர் கிறிஸ்தவர்களை கொன்றவன் தான். ஆனால், கிறிஸ்தவனாக மதம் மாறிய பின்னர், பூர்வீக மதத்தை பின்பற்றியவர்களை கொன்றான். வரலாறு நெடுகிலும், அரசியலும் மதமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருந்தன.
சமணர்களை கழுவேற்றிய கூன் பாண்டியனும், ஐரோப்பாவில் கொன்ஸ்டாண்டின் கொண்டு வந்த அரசியல் மதப் புரட்சியை, தமிழகத்தில் கொண்டு வர விரும்பியிருக்கிறான். ரோம சக்கரவர்த்தியான கொன்ஸ்டாண்டினின் அரசியல் சாணக்கியம், தமிழக மன்னனான கூன் பாண்டியனிடமும் இருந்துள்ளது.
கொன்ஸ்டாண்டின், கூன் பாண்டியன் இருவரது வரலாற்றுக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியத்திற்குரியது. தமிழகத்திலும், பாண்டியனின் மனைவி தான் முதலில் சைவ மதத்திற்கு மாறியிருந்தாள். சம்பந்தர் அரச குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், அதாவது கூன் பாண்டியனின் தீரா நோய் ஒன்றை குணப் படுத்திய காரணத்தால், அவனை சைவ மதத்திற்கு மாற்ற முடிந்தது.
ஒரு நாட்டினுள், ஒரு குறிப்பிட்ட மதம் ஆதிக்கம் பெற வேண்டுமானால், அந்த நாட்டை ஆளும் மன்னனை கைக்குள் போட்டுக் கொண்டால் போதும். அதன் பிறகு, எல்லாம் இலகுவாக முடிந்து விடும். தமது நாட்டினுள் எந்த மதத்தின் ஆதிக்கம் அதிகரிக்கின்றதோ, அதற்கு ஏற்றவாறு மன்னர்களும் மாறி விடுவார்கள். ஏனென்றால் அப்போது தான் இலகுவாக ஆட்சி செய்யலாம். அது எங்கேயும் பொருந்தும் அரசியல் பால பாடம்.
கழுவேற்றப் பட்ட எண்ணாயிரம் பேரும் சமண மதக் குருக்கள் அல்லது தலைவர்களாக இருந்திருக்க வேண்டும். தமிழகத்தில் அந்த எண்ணாயிரம் பேர் மட்டுமே சமணர்களாக இருந்திருக்க முடியாது. மதகுருக்கள், தலைவர்கள் கொல்லப் பட்டதும், சாதாரண சமண மக்கள், சைவ சமயத்திற்கு மதம் மாறி இருப்பார்கள்.
தமிழகத்தில் இன்றைக்கும் வாழும் சமணர்கள் வீட்டில் கன்னடம் பேசுகின்றனர். தமிழகத்தில் சமண இனவழிப்பு நடந்தாலும், கர்நாடகா மாநிலத்தோடு அண்டிய கொங்கு நாட்டில், சில சமணத் துறவிகள், மலைக் குகைகளில் மறைந்து வாழ்ந்து வந்தனர். சில சமணக் கோயில்களில், இந்துக் கோயில்கள் போன்று பூசைகள் நடைபெறுகின்றன. அங்கு பூசை செய்வோர், பிராமணர் போன்று பூணூல் அணிந்திருப்பதால், உள்ளூர் மக்களால் ஐயர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். அவர்கள் வெளியில் தமிழும், வீட்டில் கன்னடமும் பேசுகின்றனர். இன்றைக்கும் சமணர்கள் பெருமளவில் வாழும் கர்நாடகாவுடன் தொடர்பைப் பேணி வருகின்றனர். (ஆதாரம்: கோவை கிழார் எழுதிய கொங்கு நாடும் சமணமும்)
மேலும், பண்டைய காலத்தில் கழுவேற்றும் தண்டனை இருந்ததற்கான பல சரித்திர சான்றுகள் உள்ளன. சம்பந்தர் போன்ற பாசிச சைவ மத அடிப்படையாளர்கள் மட்டுமல்ல, காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கேயர்கள் கூட தம்மை எதிர்த்தவர்களை கழுவேற்றிக் கொன்றிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன், மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை கழுவேற்றிக் கொன்றதாக, இலங்கை வரலாற்றில் எழுதப் பட்டுள்ளது.
வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப் படுவதால், சமணர்களின் “பயங்கரவாத தாக்குதல்களுக்கு” பதிலடியாகவே அந்தப் படுகொலைகள் நடந்துள்ளதாக, பெரும்பான்மை சைவர்களின் பிரதிநிதியான சம்பந்தர் ஒரு “நியாயத்தை” கூற விளைகிறார். ஒரு சம்பந்தர், எண்ணாயிரம் சமணர்களையும் வாதிட்டு வென்றாலும், “தோல்வியுற்ற அத்தனை பேருக்கும் மரண தண்டனை வழங்குவது,” ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை தான்.
நாஜிகளும் யூதர்களை அடைத்து வைத்து விஷவாயு கொடுத்து தான் கொன்றார்கள். 7 ம் நூற்றாண்டில் நடந்த படுகொலைக்குப் பின்னர், இன்று வரையில் ஒரு சமணர் கூட தமிழ் நாட்டில் தப்பிப் பிழைக்கவில்லை. அந்த வகையில் பார்த்தால், திருஞான சமபந்தர் ஒரு பாசிச இனப்படுகொளையாளி தான்.
____________________________________________________________________________________________
சமண மதம் பற்றிய சில குறிப்புகள்:
உலகில் மட்டுமல்ல, இந்தியாவில் கூட பலரால் தவறாக அல்லது குறைவாகப் புரிந்து கொள்ளப் படும் மதமாக ஜைன மதம் உள்ளது. அண்மைக் காலமாக, நான் ஜைன மதம் தொடர்பான நூல்களை படித்து வருவதால், பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்துள்ளன. உண்மையில், ஜைன மதம் இந்து மதத்தை விடப் பழமையானது. இந்தியாவின் பூர்வீக மதம் என்றும் சொல்லலாம்.
ஜைன மதத்தின் 24 ஆன்மீகக் குருக்களாக தீர்த்தங்காரர்கள் இருந்துள்ளனர். பத்தாவது தீர்த்தங்காரரின் காலத்தில் தான், ஆரியர்களின் மதமான “இந்து” மதம், இந்தியாவிற்கு வந்தது. சமணம், பிராமணர்களின் மேலாதிக்கத்தையும், சாதி அமைப்பு பிறப்பால் வருவது என்பதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கொல்லாமை, புலால் உண்ணாமை, சந்நியாசம் போன்றவற்றை, ஜைன மதத்திடம் இருந்து இந்து மதம் சுவீகரித்துக் கொண்டது.
காந்திக்கு தென்னாபிரிக்காவில் ஞானம் பிறக்க முன்னரே, பண்டைய இந்தியாவில் ஜைன மதம் அஹிம்சையை போதித்து வந்துள்ளது. தனது தாயகத்தில், அஹிம்சையை அடிநாதமாக கொண்ட மதம் ஒன்று இருப்பது, காந்திக்கு தெரியாமல் போனது அதிசயம் தான். (மகாத்மா காந்தியின் பிறந்த இடமான குஜராத்தில், இன்றைக்கும் நிறைய ஜைன மதத்தவர்கள் வாழ்கின்றனர். காந்தியின் சிறு வயதில், அவரது தாயார், ஜைன மதக் கருத்துக்களை புகுத்தி இருக்கலாம். ஆனால், இந்து தேசியவாதக் கொள்கையை ஏற்றுக் கொண்ட காந்தியார், அதைக் குறிப்பிட மறந்ததில் ஆச்சரியம் இல்லை.
ஜைன மத நம்பிக்கையாளர், தீய எண்ணங்களை எதிர்த்து தனக்குள்ளே போராடி, தன்னைத் தானே தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய மதத்தில், அந்த மதக் கடமையை “ஜிஹாத்” என்று அழைக்கின்றனர். (இஸ்லாத்தில் ஜிஹாத் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.)
கர்மா என்ற தத்துவத்தை, ஜைன மதத்திடம் இருந்து கற்றுக் கொண்டாலும், இந்துக்கள் அதனை தவறான அர்த்தத்தில் பயன்படுத்தி வருகின்றனர். “நாம் என்ன நினைக்கிறோமோ, அதுவே எம்மை உருவாக்குகின்றது. நல்லது நினைத்தால்/செய்தால், எமக்கு நல்லது நடக்கும்.” அது கர்மா பற்றிய ஜைன மத தத்துவம். ஜைன மதம், பொதுவான கடவுட் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. (கடவுள் உண்டு என்றோ, அல்லது இல்லை என்றோ கூறவில்லை.) ஒவ்வொருவரின் ஆன்மாவுக்குள்ளும் கடவுள் இருப்பதாக கூறுகின்றது.
சமண மதம் என்ற பெயர், ஜைன மதத்தை மட்டும் குறிக்கவில்லை. பௌத்த மதத்திற்கும் அது பொருந்தும். பிராமண (இந்து) மதம், வேத கால கட்ட வேள்விகளை வழிபாடாக கொண்ட தத்துவவியல். அதற்கு மாறாக, ஜைனமும், பௌத்தமும் துறவறம் மூலம் இறைவனைக் காண்பதை அடிப்படையாக கொண்டது. சமணம் என்பது பாளி மொழிச் சொல். சமஸ்கிருதத்தில் அதனை சிரமணம் என்பார்கள். தமிழில் அதன் அர்த்தம் உழைப்பு. அதிலிருந்து தான் சிரமதானம் சென்ற சொல் வந்திருக்க வேண்டும் தமிழ் நாட்டில், சோழர் ஆட்சிக் காலத்தில், பிராமண மத மேலாதிக்கம் காரணமாக சமண மதங்கள் அழிக்கப் பட்டன. சமண மதத் துறவிகள், இரகசியமாக மலைக் குகைகளில் பதுங்கி இருந்து மத வழிபாடுகளை பின்பற்றி வந்தார்கள். இன்றைக்கும், தமிழகத்தில் பல இடங்களில், சமண மத அகழ்வாராய்ச்சிப் பகுதிகள் உள்ளன. ஆனால், அரசாங்கம் அது குறித்து அக்கறையின்றி இருக்கின்றது. தமிழகத்தில் உள்ள, இந்து மத மேலாண்மைவாதிகளும் அதனை கண்டுகொள்வதில்லை.
-கலையரசன்  athirady.com/tamil-news/essays/321902.html

கருத்துகள் இல்லை: