சனி, 8 பிப்ரவரி, 2014

U P : மாண்புமிகு எருமை மாடு ! ஆஸம் கான் ! மந்திரியின் எருமைகளை தேடி அலைந்த தனிப்படை போலீஸ்

முசுலீம்களின் வாக்குகளை வாங்கி அமைச்சரான ஆஸம் கானின் எருமைகளுக்கு இருக்கும் மரியாதை கூட மக்களுக்கு இல்லை.
ஆஸம் கான்"

கடந்த ஜனவரி 31-ம் தேதி, உத்திர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆஸம் கானின் பண்ணை வீட்டுக்குள் நுழையும் கள்வர்கள், அவருக்குச் சொந்தமான ஏழு எருமைகளை ஓட்டிச் சென்றுள்ளனர். தனது பிரியத்துக்குரிய மாடுகள் களவாடப்பட்டதை அறிந்த அமைச்சர் பதறிப் போயிருக்கிறார். நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகவும் இருந்தாலும் தன்னுடைய எருமைகளுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை எண்ணிக் கொந்தளித்துள்ளார். அமைச்சரின் நியாயமான கொந்தளிப்பு காவல்துறையையும் தொற்றிக் கொண்டுள்ளது. மழை பெய்தாலும் கண்டு கொள்ளாத எருமை மாடுகளைப் போலன்றி அதிகார வர்க்கம் அலறிக் கொண்டு களத்தில் இறங்கியது.
உடனடியாக ஐந்து போலீசு தனிப் படைகள் அமைக்கப்பட்டன. ராம்பூர் மாவட்ட போலீசு சூப்பிரெண்டு சாதனா கோஸ்வாமி ஒரு படையையும், துணை கமிஷனர் தேவேஷ் பாண்டே ஒரு படையையும், டி.எஸ்.பி அலெய் ஹஸ்ஸன் ஒரு ப்டையையும் தலைமை தாங்கி வழி நடத்தியுள்ளனர். ஆக இரண்டு எருமைகளுக்கு ஒரு படை. ஜீவகாருண்யத்தில் இனி வள்ளலாருக்கு போட்டி ஆஸம் கான்தான். என்னே ஒரு எருமை பக்தி!மந்திரியின் எருமைகளை தேடி அலைந்த தனிப்படை போலீஸ்  

அமைச்சர் எருமைகளின் உரிமைகளைக் காக்க நடத்தப்பட்ட குருஷேத்திரப் போரில் மாண்புமிகு பைரவர் அணியும் களத்திலிறக்கப்பட்டது. ஆம், மோப்ப நாய்கள் சகிதம் ஒரு படை தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளது. எருமைக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்!
போதுமான சாலையோ, மின்சாரமோ இல்லாத ஊரில் ஆங்காங்கு இருக்கும் சி.சி.டி.வி கேமரா பதிவுகள் சல்லடை போட்டு சலித்தெடுக்கப்பட்டது. பால் பண்ணைகள், மாட்டிறைச்சிக் கூடங்கள் போன்ற ‘எதிரி’களின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் உளவுத்துறை போலீசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன. கிரைம பிரான்ச் போலீசு, சிவில் போலீசு, மோப்ப நாய்படை என்று தனது அதிகாரத்துக்குட்பட்ட சகல படைகளையும் ஏவி விட்டது மாவட்ட நிர்வாகம்.
இந்த கடுமுழைப்பு தேடுதல் வேட்டையின் பலனாக மூன்று எருமைகள் கன்ச் காவல் நிலைய எல்லைக்குள்ளும், இரண்டு எருமைகள் சாவெல் காவல் நிலைய எல்லைக்குள்ளும், மேலும் இரண்டு எருமைகள் ஷெய்ஷாத் நகர காவல் நிலைய எல்லைக்குள்ளும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
எனினும் எருமை மாடுகள் மீட்பு நடவடிக்கையின் வெற்றியை காவல்துறை வீரர்கள் சுவைக்க முடியாதபடி இரண்டு சிக்கல்கள் ஏற்பட்டன. அமைச்சராக இருக்கும் தனது பண்ணை வீட்டுக்குள்ளேயே கள்வர்கள் அத்துமீறி நுழைந்து தனது பிரியத்துக்குரிய எருமைகளை ஓட்டிச் செல்லும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு நிலைமை பங்கமடைந்திருப்பதால் எரிச்சலுக்குள்ளான திருவாளர் ஆஸம் கான், களவு நடந்த நேரத்தில் ரோந்துப் பணியில் இருந்த மூன்று காவலர்களை பணி இட மாற்றம் செய்துள்ளார்.
எருமைகளைக் கண்டுபிடித்ததும் போலீசார் மேலும் ஒரு பெரும் சிக்கலை எதிர்கொண்டனர். அதாவது தேடுதல் வேட்டையில் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ எருமைகள் தான் காணமல் போன எருமைகளா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. என்னதான் அமைச்சரின் எருமை என்றாலும், பிறக்கும் போதே மூன்று கொம்புகளுடன் பிறப்பதில்லை அல்லவா? எனவே இவர்கள் தான் அவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இயலாமல் திணறியிருக்கின்றனர்.எருமை வேட்டை எருமை" /> கடைசியில் அமைச்சர் எருமைகளைப் பராமரித்துக் கொண்டிருந்த பணியாளரை வரவழைத்து அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஒருவழியாக அமைச்சர் எருமை அவைதான் என அடையாளம் காணப்பட்டு பிரச்சினை ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
எருமைகளுக்காக நடந்த தர்மயுத்தத்தின் நீதியைப் புரிந்து கொள்ளாத உள்ளூர் பத்திரிகைகள் காவல்துறையை அமைச்சர் துஷ்பிரயோகம் செய்து விட்டதாக எழுதின. எதிர்கட்சிகளின் முணுமுணுப்புகளோடு பத்திரிகை ஒன்றில் வந்த கார்ட்டூன் படம் அமைச்சரை லேசாக அசைத்துப் பார்த்திருக்கிறது. அமைச்சரின் கேலிச் சித்திரம் எருமைச் சாணியை தலையில் வைத்து சுமப்பது போல் வரையப்பட்டிருந்த கார்ட்டூன் அமைச்சரை தர்மாவேசத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.
”பத்திரிகைகளில் எருமைச் சாணியைத் தலையில் சுமப்பது போன்ற கார்ட்டூன்கள் வெளியாகியுள்ளது. நான் இறைவனிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் இது தான், இதே போன்ற பாக்கியம் பிறருக்கும் கிட்ட வேண்டும்” என்று பேட்டியளித்தவர், தனது எருமைகள் தற்போது இங்கிலாந்து ராணி எலிசபெத்தை விட புகழடைந்து விட்டது என்று புளகாங்கிதத்தை பகிர்ந்திருக்கிறார். மீண்டும் எருமைகளுக்கு பங்கம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்கிற கவலையில் காவல்துறையும், எருமைகளின் மேல் அமைச்சருக்கு இருக்கும் அன்பிலிருந்து ஏதாவது சிறு சிதறல்களாவது தங்கள் மேல் படாதா என்கிற ஏக்கத்தில் மக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆஸம் கான் உத்திரபிரதேச மாநிலத்தின் சிறுபான்மையினர் மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் அமைச்சராக இருக்கிறார். ஆஸம் கான்கள் இந்தியாவெங்கும் அமைச்சர்களாக, எம்.எல்.ஏக்களாக, எம்.பிக்களாக, முதல்வர்களாக இருக்கிறார்கள். இந்த நாடும் பராரிகளான நாட்டு மக்களும் ஆஸம் கான்களின் கருணையை எதிர்பார்த்தே காத்துக் கிடக்கிறார்கள். உத்திரபிரதேசத்தின் எருமைப் பாசம் இங்கே ப்ளெக்ஸ் பேனர்களாகவும், டொயோட்டா கார்களின் கான்வாய்களாகவும் நம்மைக் கடந்து செல்கின்றன. உத்திரபிரதேசத்தில் காவல் துறையினர் எருமை மாடுகளுக்காக தொடுத்த தர்மயுத்தம் இந்தியாவெங்கும் அதிகாரவர்க்கத்தினரின் திமிராகவும், மெத்தனமாகவும், மக்களைக் கிள்ளுக்கீரைகளாக மதிப்பதாகவும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இதே உபியில் முசாபர் நகர் இந்துமதவெறி கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஏழை முசுலீம்கள் உறையும் குளிரில் முகாம்களில் தங்கி தமது கைக்குழந்தைகளை பறிகொடுத்து வருகிறார்கள். ஆனால் அந்த முசுலீம்களின் வாக்குகளை வாங்கி அமைச்சரான ஆஸம் கானின் எருமைகளுக்கு இருக்கும் மரியாதை கூட மக்களுக்கு இல்லை.
இது தான் இந்திய ஓட்டுக் கட்சி அரசியலின் தராதரம். வாழ்க அமைச்சரின் எருமை பாசம்..!

கருத்துகள் இல்லை: